![](pmdr0.gif)
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 13
சீகாழிக் கோவை
Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 13 (verses ses 1152 - 1705)
cIkAzikkOvai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach
and following persons helped in the preparation and proof-reading of the etext:
S. Anbumani, Kumar Mallikarjunan, Nivetha, Vijayalakshmi Peripoilan M.K. Saravanan and S. Karthikeyan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 13
சீகாழிக் கோவை.
காப்பு. (1-5)
கட்டளைக் கலித்துறை.1152 - ஆபத்துக் காத்த விநாயகர்துதி.
குருக்காழிக் கோவைகொ லென்றாமை யோடு குலைத்தலைகோ,
டுருக்காழிக் கோவைச்செ யாபத்துக் காத்த வொருகளிறு,
தருக்காழிக் கோவை யுரித்தகுப் பாயந் தரித்தவர்க்குத்,
திருக்காழிக் கோவை தனைச்செயுங் கோபஞ் செயாதுவந்தே. - 1
1153 - ஆண்டவிநாயகர்துதி.
தரக்கோவை வாய்விலங் கோசீய மோவெனத் தாயுறுவ,
துரக்கோவை வாளிற் றுணிக்கோவென் றென்முனந் தோன்றிநின்றெண்,
கரக்கோவை யெத்தனை யோகண்ட சீரிற் கமழ்பிரம,
புரக்கோவை பாடுவிக் குங்காழி யாண்டசெம் போதகமே. - 2
1154 - அவையடக்கம்.
திருகோட்டு மன்பர் திருக்கோவை யார்முனந் தீட்டியதா,
லிருகோட்டு நீர்முடி யாளர் பிரியரென் றெண்ணிவிண்ணம்,
பொருகோட்டுக் காபுக லிக்கோவை பாடப் புகுந்ததனுக்,
கொருகோட்டு மாவையுள் ளூன்றினன் மேற்படர்ந் தோங்கிடுமே. - 3
நூல்
கைக்கிளை1155 - காட்சி.
பூமேவு கஞ்சமு மேந்தெழி னீலமும் பூந்தளவு
மாமேவு கோங்கமும் பாங்கமர் காந்தளும் வாய்ந்தறிஞர்
நாமேவு கொம்பரொன் றுற்றது வானிலை நங்கைபங்கர்
தேமேவு கொன்றைச் சடையார் காழிச் சிலம்பகத்தே. - 1
1156 - ஐயம்.
வெள்ளாம்ப லான்கொல் செந்தாமரை யான்கொலொண் மேனிகருங்,
கள்ளாங் குவளையன் னான்கொனங் காழிக் கடவுள்வெற்பி,
னுள்ளா மிவரடி தோய்தவ முன்ன ருஞற்றுலக,
நள்ளாங்குடிகொண் டரசா டவஞ்செய் நலத்தினனே. - 2
1157 - துணிவு.
நாமகண் மாமகள் சேர்காழி நாதர் நகுமிமயக்
கோமகள் பாகர் விடைப்பாகர் தென்கழுக் குன்றத்தொப்பி
லாமகள் கோதைநம் போல்வா டலினிமை யாடலிற்றாள்
பூமகள் சூடலினையமின் றாலிவள் பூமகளே. - 3
1158 - துணிந்தவழி வியத்தல்
பிறையு முழுமதி யுங்கருங் கொண்டலும் பெற்றமின்கொ,
னிறையு முனிவர் பெரும்பகைமாற்ற நினைந்துவில்வே,
ளுறையுமெழிலி னமைத்தபொற் கொம்புகொ லொத்துலகோ,
ரறையும் புகழ்ச்சண்பை யாண்டகை யார்வரை யாயிழையே. - 4
1159 - குறிப்பறிதல்.
போர்கால்வெஞ் சூலப் படையார் பிரம புரத்திறைவர்
சீர்கான் முகத்திரு நோக்குள் வலத்துச் செறிகணிய
லோர்கா லெழுமற் றிடக்க ணியலொரு காலெழுமிப்
பார்கால் கொழுந்தனை யாரிரு நோக்குஞ்செய் பார்வையினனே. - 5
1160 - குறிப்பறிந்தவழித் தெய்வத்தை மகிழ்ந்துரைத்தல்.
மேக்குங் கிழக்கும்பொற் குன்றகம், வாழ்நர் விராவவளைத்
தாக்குந் திறத்திற் கழுமலத் தீச ரருட்பெரியர்
போக்கும் படியில் கிளையிற் பிரித்திப் பொலிமினையெற்
றாக்கும் படியளித் தாரவ ரேதெய்வஞ் சத்தியமே. - 6
1161 - இரந்துபின்னிற்றற்கெண்ணல்.
கல்லா ரலர்முற்றுங் கற்றும்வன் றொண்டரங் கால்பரவை
வில்லார் முலையின் படையப் பிறரடி வீழ்ந்திரந்தார்
செல்லார் பொழிற்பு கலியார் பொதியச் சிலம்பமரிந்
நல்லா ரடியடைந் தேயிரப் பாமின்ப நாம் பெறவே. - 7
1162 - இரந்துபின்னிலைநிற்றல்.
விண்பர வாதிப் பிரான்றிருத் தோணிமுன் மேவிமிக்க
தண்பர ஞான வமுதமும் வாங்குந் தரமுடையே
னெண்பர வாயநுஞ் செவ்வா யமுதமின் னேயிரந்தேன்
பண்பர வாய மொழியீர் மறீர்பழி பற்றிடவே. - 8
1163 - முன்னிலையாத்தல்
நாகங் கருதுஞ் சிரபுரத் தீசர் நகுவரைவாய்க்
கோகங் கருது முலையீர்நல் லாயக் குழுவினகன்
றேகங் கருதிச் சுனையாட லாதிய வின்றிநின்றீர்
யோகங் கருதியென் றேநினைத் தேன்சொன்மி னுண்மையையே. - 9
1164 - வண்டோச்சி மருங்கணைதல்.
மோதுந் திரைக்கடற் காழிப் பிரான்வரை மொய்த்தவண்டீர்
யாதும் பெயர்பொய்ம்மை யேயளி யென்ற லஞரினொடு
தீதும் படவிடை கூந்தலிற் பாய்ந்து சிலீமுகமென்
றோதும் பெயர்மெய்செய் தீரிவர் பாலிஃ தொத்ததன்றே. - 10
1165 - மெய்தொட்டுப் பயிறல்.
எய்தவஞ் செய்கழல் காணெனுங் காழி யிறைவர்வெற்பின்
மெய்தவஞ் செய்த மனமே முகமு மிளிர்புயமு
மைதவஞ் செய்தடை கண்ணார்பொற் றாளும் வருடநந்தங்
கைதவஞ் செய்ததுண் டில்லையென் றாலது கைதவமே. - 11
1166 - பொய்பாராட்டல்.
வார்க்குங் குமமுலை யாணிலை யாளமர் வாமத்தர்நீ
ரார்க்குஞ் சடையர்தென் காழியன் னீர்நும் மலர்த்தொடையல்
போர்க்குங் குழற்கிணை யாமா கருதிப் புயல்கறுத்துப்
பார்க்குமொவ் வாமை விளர்க்குமிவ் வாறு பயின்றிடுமே. - 12
1167 - இடம்பெற்றுந்தழால்.
எண்ணார் புரஞ்செற்ற வல்லார்வில் லார்பொன் னெயிற்புகலிக்
கண்ணார் சிராமலை வாயெவ ருங்கல வாதவண்டின்
பண்ணா ரிளமரக் காவுண்டு மாதவிப் பந்தருண்டு
தண்ணா ரிவர்கட் கடையரு ளுண்டு தழுவுவமே. - 13
1168 - வழிபாடுமறுத்தல்.
விண்ணியன் மாமதி வேய்ந்தார் கழுமல வித்தகர்தந்
தண்ணியன் மால்வரை வாய்விரை வாய்மலர்ந் தண்கொடியே
பெண்ணிய லென்று வடநூலி னாமம் பெறுமிலச்சை
கண்ணிய லாமெனக் கஃதொழி யாதின்று காத்தருளே. - 14
1169 - இடையூறுகிளத்தல்.
ஞாலம் பொலியப் பொலிகாழி நாதர் நறுமலர்க்கைச்
சூலம் பொலியக்கொள் வார்பவர் வேணிச் சுடர்மதிபோற்
பாலம் பொலியநிற் பீர்மிசை யேயன்றிப் பாணியுள்ளா
னீலம் பொலியவைத் தீர்தகு மோவென் னிலைகண்டுமே. - 15
1170 - நீடுநினைந்தி ரங்கல்.
அருளாற் பரமர் புகலியிற் பாலுண்ட வையர்தென்னற்
கருளாற் புகுத்திய நோயவ ரேயொழித் தாங்கிவரெற்
கருளாற் புகுத்திய நோயிவ ரேதெற லன்றிமற்றோ
ரருளாற் புகன்மந் திரமாதி யானொழி யாததுவே. - 16
1171 - மறுந்தெதிர்கோடல்.
பேரியல் வையைப் பெருக்கன்பர் காமப் பெருக்கதனுட்
சீரிய லன்பர் விடுமேடு போலச்செல் லாதமணர்
காரிய லேட்டிற் கழிந்தது நாணங் கரைவதென்னே
யாரியல் செஞ்சடை யார்காழி நாத ரருளிதுவே. - 17
1172 - வறிதுநகைதோற்றல்.
பொருந்தும் பரவை புலவியிற் றேம்பும் புலவர்முனஞ்
சருந்தும் யிரான்முளைத் தாலெனக் காழி யணிவரைவாய்
வருந்துந் தலைவன் றடுமாற்றந் தீர வறிதுநகை
முருந்து நிகர்நகை யார்செய்ய வாயின் முளைத்ததுவே. - 18
1173 - முறுவற்குறிப்புணர்தல்.
அடியார் குறித்த தருள்காழி நாதர்வெள் ளானுயர்த்த
கொடியார் புரிந்த குறுநகை முப்புரங் கொன்றதிடைத்
துடியார் புரிந்த குறுநகை யென்னையென் றொல்குலத்து
நெடியார் பலரை யுயச்செய்த தீது நிகரரிதே. - 19
1174 - முயங்குதலுறுத்தல்.
ஆடிய பாதர் பிரம புரேச ரருளனையார்
கூடிய மாமுலை பற்றி நிதம்பங் குடைந்துதுவர்
நீடிய வாயமு துண்டாம் வரைபற்றி நேமிகுடைந்
தோடிய வாரமு துண்டார்கொ லோநமை யொப்பவரே. - 20
1175 - புணர்ச்சியின் மகிழ்தல்.
தண்ணாளி தேயன்பர் மேவிக் கலப்பத் தனையருளு
மெண்ணாளி காழிப் பிரானெனத் தன்னை யிகறெறுமைக்
கண்ணாளி யாதுங் கருதா தளிக்கக் கலந்தனம்யாம்
விண்ணாளி யாரண னாரணன் போகமும் வேண்டிலமே. - 21
1176 - புகழ்தல்.
தண்டா ரரவர் சிரபுரத் தீசர் தனிவிழிபோன்
மண்டா ரழற்சுரம் போய்வெயில் வாய்நின்று வாடித்தவ
மெண்டா ரணிவியப் பப்புரிந் தாலு மெனையடிமை
கொண்டார் வனமுலை யோலுவி ரோசொலுங் கோங்கங்களே. - 22
1177 - ஏற்புறவணிதல்.
சேலிற் பிறழ்விழிக் கஞ்சனந் தீட்டித் திகழ்தொடையைம்
பாலிற் புனைந்து முலைமேற் கலன்கள் பலதிருத்தி
மாலிற் பொலியொரு பாலார்தென் காழியில் வண்சிலம்பு
காலிற் புனையவுங் கற்றன வாநங் கரதலமே. - 23
1178 - வன்புறை
அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல்.
மறிவா ளனையகண் ணாய்பரன் காழி மணிவரைவா
யெறிவா ளுடைக்கல மெல்லாநின் றோழியி னின்றணிந்தேன்
குறிவா ளுடையக் கலம்வாய் படைத்துண்மை கூறிடுமே
லறிவா ளஃதுள்ளி யுட்கொள்ள னாணமு மச்சமுமே. - 24
1179 - பெருநயப்புரைத்தல்.
நலரா யினரன்றி வேதா கமநன் னடைபிறழுங்
கலரா யினரணு காப்பாழி யார்புகழ்க் காழியின்வாய்ப்
புலரா விளம்பொழில் சூழ்வாவி வாயொண் பொறிவண்டுகாண்
மலரா வரும்புங் குவியா மலருங்கொள் வல்லியுண்டே. - 25
1180 - தெய்வத்திறம்பேசல்.
துருவின மாலுக் கரியர் பெரியர்வண் டோணிபுரத்
திருவின பற்றுடை யார்விடை யார்த மிலங்கருளா
லுருவின ராய முருகனும் வள்ளியு மொப்பெனயா
மருவின மாலிஃ தியாரிடை நீக்கும் வலியினரே. - 26
1181 - பருவாலுணர்தல்.
மயலா ரெனக்கு மலமாயை கன்ம மடித்தருளு
மியலா ரமலை பயலார்தென் காழி யிளங்கொடியே
புயலார் பொழிலகம் பாணித் துறையிற் புகுந்தமரு
மயலா ருணரவுங் கூடுமென் றோவின் றழுங்குவதே. - 27
1182 - பிரிவச்சம்.
நில்லா துயிர்பிருந் தாற்கணப் போழ்துமிந் நேரிழைக்குச்
செல்லாது பாணித் திருப்புமிச் சோலையிற் செய்வதென்யா
மல்லார் களத்தன் புகலிப் பிரான்பிரி வஞ்சியன்றோ
வல்லார் முலைநிலை மாதோடு மொற்றித்து வாழ்கின்றதே. - 28
1183 - இன்றியமையாமை எடுத்துரைத்தல்.
புகலும் படிபுகல் வார்புக லாய புகலியுள்ளான்
மிகலுங் குறைவுமில் லானருள் சாரினு மீன்கரையோ
டிகலும் புனலை யகலினெத் தன்மைத் தியலுநினை
யகலும் படியுறி னற்றென தாருயி ராரணங்கே. - 29
1184 - பிரியேனென்றல்.
வரியேன் மதர்விழிச் சங்கிலி காண மகிழடியிற்
பிரியேனென் றோதிப் பிரிந்துவன் றொண்டர்முன் பெற்றதையான்
றெரியே னலேன்வண் புகலியன் னீர்நுமைத் தீர்ந்துமுயிர்
தரியேன் பிரியே னெனச்சட்டை நாதர்முன் சாற்றுவனே. - 30
1185 - பிரிந்துவருகென்றல்.
இருந்துமுன் சங்கத் தருந்தமி ழாய்ந்த விறைகடனஞ்
சருந்துமுன் னோன்றிருக் காழியன் னீரரும் புஞ்சுரும்புந்
திருந்துமுன் றோன்றும் பொழிலகத் தேகிநுஞ் சேற்கணிமை
பொருந்துமுன் வந்து புகுவே னகுமிப் புனத்தகத்தே. - 31
1186 - இடமணித்தென்றல்
கயலம ருங்கொடி யானை முனிந்து கனிந்துமெய்யிற்
பயலமர் வாட்புணர்ந் தாருணர்ந் தார்சண்பைப் பாங்குறுமென்
வயலமர் வஞ்சிநின் குன்றம ராணை மருவுமயி
லியலமர் நின்னொடு மென்னொடு மாறுபட் டென்னமின்னே. - 32
1187 - தெளிவு
குழைதரு காத ருழைதரு கையர் குலவுகரு
மழைதரு கண்டர் தழைதரு காழியில் வாழ்க்கைபெற்ற
பிழைதரு தன்மையில் யாவருங் கூற்றம் பிழைப்பரென்பார்
விழைதரு தன்மையி லாக்கொலைக் கூற்றத்தின் மேற்றுண்மையே. - 33
1188 - பிரிவுமகிழ்ச்சி.
செல்லுங்கிழத்திசெலவு கண்டு உளத்தொடு சொல்லல்.
காணா மரபின தாலுயி ரென்று கரைதருவார்
நாணா மரபின ரென்னுயிர் காணு நலத்தினதாய்க்
கோணா வருளொடு செல்லுதல் பார்களி கூர்மனமே
மாணா வெனக்கு மருள்காழி நாதர்பொன் மால்வரைக்கே. - 34
1189 - பிரிவுழிக்கலங்கல்.
பாகனொடு சொல்லல்.
அற்றே மலர்க்குழ லோர்கைபின் றாங்க வவிழ்ந்தகலை
சிற்றே ரிடையி லொருகைமுன் றாங்கச் சிலம்பொலிக்கப்
பற்றே யிலார்தம் பரன்காழி வாயருட் பார்வையென்மே
லுற்றே நடப்பது பார்வல வாவென் னுயிர்த்துணையே. - 35
1190 - பிரிவுழிக்கலங்கல்.
ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.
தீயிடை யாடும் பரமர் தமக்குந் திருநிலைக்குஞ்
சேயிடை மேவப் பொலிவார்தென் காழிச் சிலம்பின்மெலிந்
தோயிடை யாரிவர் மாண்பின்ன தேன்மகிழ் வுற்றிவரை
யாயிடை மேவி யதுநன வோகன வாயதுவே. - 36
1191 - நெஞ்சொடுகிளத்தல்.
இலம்பாடு ளார்பெருஞ் செல்வர்தம் வாழ்வெய்த வெண்ணுவதி
னலம்பாடு மேவுங்கொல் காழிப் பிரான்பொன் னகுவரைவாய்
நிலம்பாடு மாதவஞ் செய்திலம் யாநெஞ்ச மேயினிச்சஞ்
சலம்பாடு கோடு மெளியர் கொலோவிந்தத் தையலரே. - 37
1192 - வாயில் பெற்றுய்தல்.
வேண்டா ருறவென்றும் வேண்டா ரரிக்கும் விரிஞ்சனுக்கு
நீண்டார் தலைக்கலம் பூண்டார்தென் காழி நெடுவரைப்பான்
மூண்டார் மயற்கு மருந்துணர்ந் தாமுனி யாதுநம்மை
யாண்டார்கண் மானொரு மாதர்கட் பார்வை யவாவியதே. - 38
1193 - பண்பு பாராட்டல்.
கலரா யினரணு காக்காழி யார்வரைக் காரிகையார்
புலரா முகத்தை மலரினெவ் வாயம் புணர்முலையை
யுலரா தரும்பினெவ் வாய்விதி யாயு ளுளவரைக்கு
மலரா திருமற் றலரெனக் காவதெ னம்புயமே. - 39
1194 - பயந்தோர்ப்பழிச்சல்.
கழிபடு வெண்டலை மாலையன் காழிக் கடவுள்வெற்பின்
மொழிபடு நான்முக னாயுள் வடதிசை மூர்த்திசெல்வம்
விழிபடு மேனியன் போகமிம் மூன்றும் விராயெனக்கோர்
வழிபடு தெய்வந்தந் தார்நீடு வாழ்கவிம் மாநிலத்தே. - 40
1195 - கண்படைபெறாது கங்குனோதல்.
அனம்போ லியங்கு மணங்கனை யாரிடத் தாய்துயிலென்
மனம்போ லடைந்தது மீண்டில தானொடு வானமுய்யக்
கனம்போ லிருண்ட களத்தார்தென் காழியிற் கங்குலொரு
வனம்போல் வளைவுற்ற தம்புலி வெம்புலி மானுவதே. - 41
1196 - இடந்தலைப்பாடு.
தந்ததெய்வந்தருமெனச்சேறல்.
வன்றந்த யானை யுரித்தார் புகலிவல் லாரருளா
லென்றந்த காரமெஞ்ஞான்றுங் கெடுத்தொளி யேகொடுக்குந்
துன்றந்த வாயத்தி னீக்கிநம் மாவித் துணைபுணர
முன்றந்த தெய்வமின் னுந்தருஞ் சேறுமம் மொய்பொழிற்கே. - 42
1197 - தலைவன் நெஞ்சொடுவினாதல்.
வானோக்கி நிற்கு மயில்போற் பொழிலை மருவியெனைத்
தானோக்கி நிற்குங்கொ லோருங்கொ லாயத்திற் சாருங்கொலோ
மீனோக்கி பாகர் விடைப்பாகர் காழி விமலரருண்
மானோக்கி யின்னளென் றியானுண ரேன்புகல் வாழிநெஞ்சே. - 43
1198 - அவளமரிடம் அவளாகக்கூறல்.
பொன்னா ரிளந்தளிர் மேனியு நீன்மணிப் பூங்குழலு
மன்னார் பசுங்கழைத் தோளுங் குவட்டு வனமுலையு
மின்னார்செங் காந்தட்கை யும்மையர் வெங்குரு வெற்பமைந்தீங்
கென்னா ருயிரனை யார்போன்று தோன்று மிதுவியப்பே. - 44
1199 - மன்னனை நினைந்து மின்னிடைமெலிதல்.
என்னிரு கண்ணனை யாயக் லேனென் றிசைத்தகன்ற
மின்னிரு தோளரிங் கெய்துவ ரோதமர் வெள்ளமிகத்
துன்னிருஞ் சாரவ ணெய்துவ ரோவென்ன சூழுவரோ
பன்னிரு நாமப் பதிச்சட்டை நாதர் பழமலைக்கே. - 45
1200 - முந்துறக் காண்டல்.
பொன்னோ வெனுஞ்சடை யார்காழி நாதர்செம் பொன்வரைவாய்த்
தன்னோடொன் றாமெனை யல்லாதுவேறொன்று தான்புகுதற்
கன்னோ கொடாவகத் தோடெங்கும் வீசி யவிரொளியீ
தென்னோ வெனவுற்ற தென்முடி மாணிக்க மின்றுவந்தே. - 46
1201 - தனிநிலைகண்டு தளர்வகன்றுரைத்தல்
ஒருவரு மின்றி யசோகடி மேவினர் யோகியரே
பொருவரு நீர்மை யிவரொரு நால்வர் புடைவளைப்ப
மருவரு மாலடி மேவு படாத வளம்படுவெங்
குருவரு யோகியின் மிக்கா ரிவர்க்குக்கை கூப்புதுமே. - 47
1202 - முயங்கல்
பெருமான் புகலிக் கவுணியர் முன்னம் பெருமணஞ்சார்ந்
தொருமான் கரம்பற்றி யுற்றவின் பேயிதற் கொப்பெனவித்
திருமான் கரம்பற்றிச் சேராப் பெருமணஞ் சேர்ந்துறமே
வருமான வின்பமுற் றேனிது வேபெரு வாழ்வெனக்கே. - 48
1203 - புகழ்தல்
பாவியல் சீர்த்திப் புகலிப் பிரான்பொற் பரங்குன்றின்வாய்த்து
தேவியன் மேனித் திருவே திரிநேத் திரம்படைத்து
மேவிய தொத்தது கொல்லோநின் கொங்கைக்கு மேலெழுந்
தாவிய தாயெப் படிவரி னும்பந்து தானுமற்றே. - 49
1204 - உடன்புணராயத்துய்த்தல்
கதிர்நோக்கி நிற்குங் கமலத்தில் வானங் கலந்தகொண்மூ
வதிர்நோக்கி நிற்கு மயிலிற்றென் காழி யமலரருண்
முதிர்நோக்கி நிற்குமெய் யன்பரி னீவரன் முன்னியதற்
கெதிர்நோக்கி நிற்குநின் னாயத்துண் மெல்ல வெழுந்தருளே. - 50
1205 - பாங்கற்கூட்டம்
தலைவன் பாங்கனைச்சார்தல்
பற்றா வெனக்கு மருள்காழி மேய பரமர்திருக்
குற்றால மன்னசெவ் வாய்வெண் ணகைக்கருங் கூந்தன்மின்னார்
முற்றா முலையின் படையத் தடையென் முழுக்கலையுங்
கற்றா னொருமுறை யோனுள னான்மிகு காதலனே. - 51
1206 - பாங்கன் தலைவனை உற்றதுவினாதல்
கண்கொண் டவிர்நுதற் காழிப் பிரான்பொற் கயிலைவெற்பா
மண்கொண் டடங்கலர்க் கீந்தனை யோவிண் மணிபொன்முத
லெண்கொண் டவைகொண் டுயிரீந் தனைகொ லெறுழ்கனிந்து
திண்கொண்ட நின்புயம் வாடுதற் கேதுவென் செப்புகவே. - 52
1207 - தலைவன் உற்றதுரைத்தல்.
நிலைமுழு துங்கெடு நாளைய னாதி நெடும்புலவர்
தலைமுழு துந்தரிப் போன்காழி நாதன் றமிழ்வரையோர்
கொலைமுழு துஞ்செய்கண் ணாண்முக மாய குரூஉமதிக்கென்
கலைமுழு துங்கொடுத் தேனடுத் தேனினைக் காதலனே. - 53
1208 - பாங்கனை நின்குறையாக இது முடிக்கவேண்டுமென்றல்.
மயில்கா யியலின டந்தவெங் காமம் வரம்பொருவி
வெயில்கா யறைவெண்ணெய் போலப் பரந்தது மேனியெங்கு
மெயில்காய் நகையர் தகையர் புகலி யிறைவர்வெற்பிற்
குயில்கா யெழிலியி னீகாயின் மாயுமக் கோளினதே. - 54
1209 - கற்றறிபாங்கன் கழறல்.
கரும்பைச் சிலைசெய்த காம னெரியக் கனல்விழித்தா
ரரும்பைப் பொருமுள் ளடையார்தென் காழி யடையலர்போற்
றுரும்பைப் பொருள்செய்து வாடுநின் றோட்பெருந் தூணமென்றா
லிரும்பைச் சிதல்சென் றரிக்குமண் ணானிற் கிதுதகுமே. - 55
1210 - கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பண்பார் திருவெழு கூற்றிருக் கைப்பதிப் பற்றுடையார்
நண்பா ரருளி னெனக்ககப் பட்ட நறுநுதலை
விண்பாரின் மிக்கதன் றாலென மேவும் விளங்கிழையைக்
கண்பாரப் பாலுரை யாடுவ யாவுமென் காதுறுமே. - 56
1211 - கிழவோன் பாங்கனை ஆண்டுச்செல்லவேண்டுமென்றல்.
நன்றா லடியுறை வார்பிறை வார்சடை நம்பர்செம்பொற்
குன்றா லமைத்த மதிற்காழி யார்கொடுங் குன்றகநீ
சென்றானண் பாசென் றனும னிராகவன் சிந்தைத்துயர்
கொன்றா லெனவென் மனத்துயர் யாவையுங் கொல்லுவையே. - 57
1212 - கிழவோற்பழித்தல்.
எண்மையு ளேன்றன துண்மை விராவ வினிதருளுந்
தண்மையு ளான்கொச்சை யாளியண் ணாமலைச் சாரலினோ
பெண்மைகண் டாண்மை யுடைந்ததென் றாய்பிற ருக்குணர்த்தும்
வண்மையெங் கேமனத் திண்மையெங் கேயெங்கண் மன்னவனே. - 58
1213 - கிழவோன்வேட்கை தாங்கற்கருமைசாற்றல்.
இரியாவெப் பாளரைச் சூழவெந் தீயிட் டெரித்ததென
வரியா வுகைக்கும் புகலிப் பிரானரு ளாயமின்செய்
பிரியா வஞர்பெரு கப்பேசு வாயென் பிறதுயர்க்குத்
தரியாநின் மேற்குற்றம் யாதுநண் பாவென் றலையெழுத்தே, - 59
1214 - பாங்கற்கூட்டம்.
பாங்கன் தன்மனத்தழுங்கல்.
படியே பொலியப் பொலிதொண்டை நாட்டிற் படர்ந்த முல்லைக்
கொடியே குறிஞ்சிக் கொடிபிறி தாய கொடியெனிற் பொன்
முடியே புனையுங் களிறுகட் டுண்ணுங்கொன் மொய்த்துவண்டு
குடியெ கொளுங்கொன்றை யான்காழி வாயென் கொடுவினையே. - 60
1215 - தலைவனோடழுங்கல்
வெங்கூற்ற மாய்க்கும் விறற்காழி நாதர்பொன் மேருவின்வாய்
மங்கூற்றந் தீர்பெரு மானீ யொருசிறு மான்பொருட்டென்
செங்கூற்ற முற்றுங் கருங்கூற்றஞ் செய்யிலென் செய்குவல்யான்
பொங்கூற்ற வாழி புரண்டாலெங் கேகரை போகடலே. - 61
1216 - எவ்விடத் தெவ்வியற்றென்றல்.
கரையோ விலாவலி யேமிரு வேமிது கட்டுரைகா
ணரையோ திமனுண ராமுடி யார்சண்பை நாடனைய
விரையோ வருங்குழ லாளியல் யாதவண் மேவிடம்பொன்
வரையோ திரையோ வுரையோ தரும்புகழ் மன்னவனே. - 62
1217 - அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்றென்றல்.
ஒருபா லுமையினர் தென்காழி மால்வரை யோர்முளைக்குத்
தருபால்பொற் றாள மொழிமுலை யானத் தரளநகை
பொருபா லிலாதசெம் பொன்மேனி வெற்றி பொலிவியலோ
நிருபான் முகிறவ ழவ்வரை யேயிட மென்னுயிர்க்கே. - 63
1218 - பாங்கன் இறைவனைத்தேற்றல்.
கலங்காநி னுள்ளங் கலங்கல் கலக்குங் கருங்குயிலை
மலங்காய் பவரை விலங்கான் புகலி மணிவரைசார்ந்
துலங்கா முறுபுயத் தாய்கண்டு மீள்வ லுறையிவணின்
விலங்காத துன்பந் தனக்கு மெனக்கும் விடைகொடுத்தே. - 64
1219 - குறிவழிச்சேறல்.
நலங்சாரன் பாளரொ டென்னையுஞ் சேர்த்தரு ணம்பன் முகிற்
குலஞ்சார் புகலி வரைவாய் முளைத்த கொடியெனத்தா
ணிலஞ்சார் தரநிற்கு மோவண்ட லாட்டி னிகழுறுமோ
வலஞ்சார்நங் கோனு ளழலரக் காக்கிய வணுதலே. - 65
1220 - தலைவியுருவு வெளிப்பட்டமைகண்டு தலைவன்கூறல்.
காய்மா றிலாத்தென்னங் காச்சண்பை யார்வரைக் கண்முகின்மேற்
பாய்மா முலைமத மாவல்குற் றேர்நுதற் பாரவில்கண்
ணாய்மா வடுவம்புங் கொண்டெங்குந் தோன்றுமென் னோருயிர் மால்
சேய்மார னென்னைக் கறுப்பது நோக்கிச் சிவப்பதொத்தெ. - 66
1221 - காணுங்கொலோவெனத் தலைவன் ஐயுற்றிரங்கல்.
விண்டா னெனப்பொலி வேணு புரேசர் வியன்சிலம்பிற்
பண்டானண் பாகி யவனென் னருமைப் பசுங்கிளியைக்
கண்டான்கொ லோவவட் காணாது தேடிக் கழியவலங்
கொண்டான்கொ லோவறி யேன்குறி யேனொன்றுங் கோளுறவே. - 67
1222 - இறைவியைக்காண்டல்.
சேவே கொடியமைத் தார்காழி வாணர் சிலம்பிதுவே
காவே குழலுழ லேவே விழிநறுங் காமர்கஞ்சப்
பூவே முகமத மாவே முலையிப் புனையிழையே
யாவே நிகர்வண்மை யான்சொற்ற மாதிதற் கையமின்றே. - 68
1223 - பாங்கன் இறைவியை எளிதிற் காட்டியதெய்வத்தை வணங்கல்.
உன்னும் பெருந்திருக் கோனுமற் றியானுமின் றுய்யும்வண்ண
மின்னுங் கொடியிடை யாளைத் தமர்நின்றும் வேறுசெய்து
துன்னும் பொழிலி லெளிதுறக் காட்டிய தொல்புகலி
மன்னுங் கடவுளை யேதொழு வேனென்றும் வாழ்த்தல்செய்தே. - 69
1224 - பாங்கன் இகழ்ந்ததற்கிரங்கல்.
எண்ணாது கூற லிழுக்கெனன் மெய்ம்மை யெடுத்தமிர்த
முண்ணாது நஞ்சுண்ட வன்காழி யன்னவ ளொண்குணமு
மண்ணா தொளிர்மணிப் பூணானுட் காதலும் வன்பொறையுங்
கண்ணாதி யானிகழ்ந் தேபெரும் பாவங் கவர்ந்தனனே. - 70
1225 - தலைவனை வியத்தல்.
ஊரைக் கடக்கு நகையானி லேதி யொருவிநெடு
நீரைக் கடக்கு மதிற்காழி யன்னவிந் நேரிழையார்
சீரைக் கடக்கு முலையானை யும்மிடைச் சிங்கமுஞ்செய்
போரைக் கடக்குநம் மண்ணலை யாவர் பொருவுவரே. - 71
1226 - தலைவியைவியத்தல்.
மறியா ரிடத்தர் புகலி வலத்தர் மணிவரைவாய்ப்
பொறியா ரசோகநன் னீழல்வன் பூவின்மென் பூவடிவைத்
தறியாரி னிற்பர்நங் கோமகன் சோக மகற்றியவன்
குறியா ரிதய கமலால யங்குடி கொள்பவரே. - 72
1227 - தலைவன்றனக்குத் தலைவிநிலைகூறல்.
நிலவா தவனழல் கண்செய்த கோனிறை நீர்ப்புகலி
வலவா தரவரை வாயண்ண லேயெழில் வாய்ந்தொளிரோ
ருலவாத வல்லி யொருகொம்பர் நோக்கி யொருவர்வந்து
கலவாத சோலைக் கடைத்தனி யேநிற்கக் கண்டனனே. - 73
1228 - தலைவி தலைவன்வருங்கொல்லோவென நினைத்தல்.
உடையும் படியுள் ளுருகுநர் பால்விண் ணுளரொருங்கு
மிடையும் படியடை வேணுபு ரேசர் விழையவஞர்
குடையும் படிமெலி வேன்பா லுவகைக் குலங்குடிகொண்
டடையும் படியின் றடைவர்கொ லோவென்னை யாள்பவரே. - 74
1229 - தலைவன்சேறல்.
மன்றாடு மையர் கழுமலத் தீசர் மணிவரைவாய்
நின்றாடு மாயத் தொடுகலந் தாடுங்கொ னேயத்தொடு
கன்றாடு மங்கை திருமுகந் தாங்கக் கருதிவெப்பங்
கொன்றாடு சோலையி னிற்குங்கொ லோவென் குலதெய்வமே. - 75
1230 - தலைவன் தலைவியைக் காண்டல்.
விறலெதிர் தோட்சண்பை யாரமு தோடன்பர் மேவுமுன்மீ
னறலெதிர் வண்குரு காவூரில் வந்துநின் றாங்குவில்வே
டிறலெதிர் வாயமு தோடிப் பொழில்யான் செறியுமுனென்
னுறலெதிர் நோக்கிநின் றாரென்னை யாளு மொருவர்வந்தே. - 76
1231 - கலவியின் மகிழ்தல்.
அம்பல வாணர் கழுமலத் தீச ரருள்வலியா
னம்பல மாவிவர் தோள்சேர்ந்தின் பேயுற்ற நந்தமக்கு
வம்பலர் கூந்தலொவ் வோர்மாதர் தோள்கண் மருவித்துன்பே
தம்பல மாகக்கொண்ட மாலய னிந்திரன் றாழ்ந்தவரே. (7 - 77
1232 - பாங்கனை உண்மகிழ்ந்துரைத்தல்.
ஒருகா னடைந்தென் வருத்தந் தணித்த வொருவன்முன
மிருகா னடந்துதன் றோழன் வருத்த மிரித்தபெருங்
குருகான் மலர்ப்புனற் கொச்சைப் பிரானிற் குலவுநல்லோ
னருகா லவனட் பெழுமையு மோங்க வளியனுக்கே. (7 - 78
1233 - புகழ்தல்.
மறையே புகலும் புகலிப் பிரான்பொன் மணிமுடிமேற்
குறையே யறத்தண் டுறையே முழுகிக் குடிகொளினும்
பிறையேயொப் பாவைகொல் லோவென்னை யாண்ட பிறழ்நெடுங்கண்
ணறையே கமழ்குழ லாணீறு பூசு நறுநுதலே. - 79
1234 - தலைவியைப் பாங்கியொடுவருகெனப்பகர்தல்.
அமையாளந் தோளணங் கேமணங் கேழிவ் வலர்ப்பொழில்வாய்
நமையா ளுறவ னறவன் புறவ னகுமருளா
முமையா ளொடுமொண் கமையாள் பவர்மு னுறலினினி
யிமையாள்கண் போனின் னிகுளையொ டென்மு னெழுந்தருளே. - 80
1235 - பாங்கிற்கூட்டல்.
உடுவே யனபன் மணிநாப்ப ணாணிமுத் துற்றதெனக்
கடுவே பொலிகளத் தான்காழி நாதன் கயிலைவெற்பிற்
கொடுவே தனைகொடு நோக்குநின் னாயக் குழுநடுவே
நடுவே யிலாயுறு வாய்தகப் பாத நகப்பெயர்த்தே. - 81
1236 - பாங்கிமதியுடன்பாடு.
நாற்றத்தான் ஐயமுற்றோர்தல்.
அலையும் புனற்சடை யார்விடை யாரடை யார்புரங்கள்
குலையும் படியெய் தவர்பவர் வாழ்வெங் குருவரைமான்
முலையுங் குழலும் புழுகுந் தொடையு முயங்கிமுன
மலையுங் கடியை மலையும் புதுக்கடி வாய்ந்தனவே. - 82
1237 - தோற்றத்தான் ஐயமுற்றோர்தல்.
ஆளும் பரமர் பிரம புரேசர்மன் றாடுமையர்
நீளுந் திருவரை வாய்வெள்ளை நோக்கின்றி நேர்ந்தவற்றைக்
கீளுங் கருந்தடங் கண்ணுந் துணைத்துமெல் கிப்பணைத்த
தோளுங் கனதன முங்காட்டு மானலந் தோகைக்கின்றே. - 83
1238 - ஒழுக்கத்தான் ஐயமுற்றோர்தல்.
கோடாண் முகன்குகன் றந்தைதென் காழி குலவுபொன்னி
நாடா ணறும்புன லாடாள் பறித்து நறுமலருஞ்
சூடாள் குறிஞ்சியும் பாடா ளசும்பு சுடர்மணிப்பந்
தாடாள்பொன் னூசலு மாடாளென் னோவிவட் காயதுவே. - 84
1239 - உண்டியான் ஐயமுற்றோர்தல்.
விண்ணா ரமுதமுன் வைத்துண்க மாவென்று வேண்டினுந்தீக்
கண்ணார் கழுமலத் தாருண வென்று கழித்துமற்றொன்
றெண்ணோர் கொடிய விரதங்கொண் டாரி னிரிவளிந்தப்
பண்ணார் மொழிமட வாளெண்ணம் யாதென்ன பாவமிதே. - 85
1240 - செய்வினைமறைப்பான் ஐயமுற்றோர்தல்.
பனியே படுவரை மங்கைபங் காளன் பரவுமறை
நுனியே யமரும் பிரான்காழி சூழ்ந்த நுவலருந்தீங்
கனியேய் பொழிலிற் றனியே பயிலவுங் கற்றனள
வனியேக மென்னு நமையு மறைத்திம் மடமயிலே. - 86
1241 - பாங்கிமதியுடன்பாடு.
செலவுகண்டு ஐயமுற்றோர்தல்.
வல்லிட பக்கொடி யாளன் பவப்பகை மாய்ப்பதற்கு
நல்லிட மாய புகழிப் பிரானுண்மை நன்குணர்ந்தார்
செல்லிட மேர்பல் லிடமொழித் தோரிடஞ் சென்றுநிற்பாள்
சொல்லிட வேண்டுங்கொ லோவுளத் தொன்றுண்டு தூமொழிக்கே. - 87
1242 - பயில்வான் ஐயமுற்றோர்தல்.
வலைத்தலை மானன்ன கண்ணாள் செவிலி மடித்தலையொண்
முலைத்தலை நீத்து துயிலாணற் றாய்முழு முத்தமுலை
யலைத்தலை கொண்டெழு பாலன்றி யுண்டறி யாள்புகலி
மலைத்தலை யானிற் றனிபயில் வாளிவண் மாண்புநன்றே. - 88
1243 - அவ்வகைதன்னான் ஐயந்தீர்தல்.
பற்றார் கதியர் திருமாலை மாற்றுப் பதியர்மறை
சொற்றார்பொற் றோணி வரைவாய்விற் றோணி சுடர்முகத்து
பெற்றார் மணமுங் குணமு முறவும் பிறவுமிவட்
குற்றா ரொருவ ருளராயி னாரென் றுணர்த்திடுமே. - 89
1244 - பிறைதொழுகென்றல்.
ஆலங் குடிகொண் மிடற்றார் கழுமலத் தையர்செய்ய
சீலங் குடிகொள் செழும்பொன்னி நாட்டிற் சிறுபிறைகண்
டேலங் குடிகொள் குழலாய் குவியுமெத் தாமரையுங்
கோலங் குடிகொணின் கைத்தா மரைகுவி யாமையென்னே. - 90
1245 - கரந்துரைத்தல்.
பொன்னிழல் செஞ்சடை யார்தோணி மேய பொருப்புடையா
ரன்னிழல் கண்ட ரருள்போற் குளிர்ந்தொளி ரப்பொழில்வாய்
நன்னிழ லின்பந் தருந்தரு வொன்றைநண் ணாமையினோ
மின்னிழல் பூண்மட வாய்திரு மேனி மெலிவதுவே. - 91
1246 - கரவுநாட்டம்.
கருநீலஞ் செம்ப வளஞ்செய்து காமரு செம்பவள
மருநீல வார்குழல் வெண்முத்தஞ் செய்து வயங்குவது
தீருநீல கண்டர் திருத்தோணி மால்வரைத் தேத்தளிசால்
குருநீல வாழ்சுனை யேலடி யேன்களி கூருவனே - 92
1247 - சுனைநயப்புரைத்தல்.
விண்ணப்ப மொன்றெம் பெருமாட்டி நின்றிரு மேனியெல்லாம்
வண்ணப்ப சும்பொற் றுகளப்பி மாமுலை மான்மதச்சாந்
தெண்ணப்ப ரப்பிடு மேலடி யோமுமெய் திக்குடைவோங்
கண்ணப்பர் கோனம ருந்தோணி மால்வரைக் கட்சுனையே. - 93
1248 - சுனைவியந்துரைத்தல்.
வளமுலை யாத புகலிப் பிரான்வெள்ளி மால்வரைவாய்த்
தளமுலை யாத மலர்ச்சுனை கூந்தற்குத் தாழ்தொடையு
முளமுலை யாதெழு வேயடு தோளுக் குறுபுழுகு
மிளமுலை யார்க்கன்பி னல்கிடு மேலதை யாதொக்குமே. - 94
1249 - தகையணங்குறுத்தல்.
மலைமீது தோணி யுறைவார்குற் றால வரைத்தலமே
கலைமீது பூணல்குல் வான்மக ளேநின் கலப்புநன்று
முலைமீது முத்தவெங் கோமாட் டியுமிவண் முன்னியுறு
மலைமீது வல்லிக ளென்னவொத் தீர்சுனை யாடுவிரே. - 95
1250 - நடுங்கநாட்டம்.
அங்கோட்டு வார்சிலை வாணுத லாணிலை யம்மைக்கொரு
பங்கோட்டு வார்பொற் றிருத்தோணி மால்வரைப் பாற்பயிலுஞ்
சங்கோட்டு கந்தரச் சுந்தர மேயென்ன சாற்றுவலோர்
செங்கோட்டு யானைமுன் வேலெறிந் தாரொரு சேவகரே. - 96
1251 - பெட்டவாயில் பெற்றுச்சேறல்.
ஒன்றியொன் றாதம ரின்பிச்சை யார்நற வூற்றுதுழாய்ப்
பன்றியொன் றாத பதக்காழி யாரருள் பற்றுதல்போ
லின்றியொன் றாத விவர்காம மெய்யின்ப விச்சைகொள்யான்
வென்றியொன் றாத விடைத்தோழி யார்பற்று மேவுவனே. - 97
1252 - இரவுவழியுறுத்தல்.
துறையார் மலரொற்றிச் சங்கிலி யார்கண்செய் துன்பமெல்லா
நறையாரந் தார்ப்புயத் தாரூரர் காழிநம் மாற்குரைத்தாங்
கிறையார் வளையிவ் விளங்கொடி யார்கண்செ யின்னலெல்லாம்
பொறையார் மனத்துப் பெருந்தோழி யார்க்குப் புகலுதுமே. - 98
1253 - ஊர்வினாதல்.
அவஞ்செய நின்ற கொடியேனை யுந்தடுத் தாண்டுகொள்வார்
சிவஞ்செய மேவு திருத்தோணி மால்வரைச் சேயிழையீர்
பவஞ்செய நின்றபல் லூரொழித் தேன்மனம் பற்றமுற்றத்
தவஞ்செய வேண்டுநும் மூருரைத் தாலங்குச் சாருவனே. - 99
1254 - பெயர்வினாதல்.
யாரா யினுந்தொழு தான்மல மாதி யிரித்தருளுஞ்
சீரா யினுஞ்சிறந் தார்காழி வாணர் திருச்சிலம்பி
னூரா யினுமுண ரேனுரை யீரினி யுங்கடிருப்
பேரா யினுமுரைப் பீருரைத் தால்வரும் பீழையென்னே. - 100
1255 - பாங்கிமதியுடன்பாடு.
ஊரும்வேறும் உடன்வினாதல்.
கனக்கா வலர்செறி காழியில் வாழ்நுதற் கண்ணரெண்ணு
மினக்கா வலர்திருக் காளத்தி மால்வரை யேந்திழையீர்
தனக்கா வலர்விழை நும்மூர்சொல் லீர்தவிர் வீரினியிப்
புனக்கா வலரெவ ரோசொல்ல வேண்டும் புலப்படவே. - 101
1256 - வேழம்வினாதல்.
பைந்நாக நாண்புனை காழிப் பிராற்குக்க பாய்கொடுத்த
கைந்நாக மேயெனத் தக்கதென் வேலுங் கவர்ந்ததொரு
மைந்நாக மொப்பதுங் கொங்கையொப் பாய மருப்பதொளி
தைந்நாக மாமட வீர்வந்த தோவொன்றித் தண்புனத்தே. - 102
1257 - வன்றிவினாதல்.
பூவுண்டு வண்டுறங் கும்பொழில் சூழும் புகலிப்பிரான்
சேவுண் டுமிழ்ந்த தவாவநிற் பீரத் திகழ்பெருமான்
பாவுண் டுறுபத நாடிய தொத்ததொர் பன்றியென்கை
யேவுண் டுடைந்திங் கடைந்ததுண் டாயி னியம்புமினே. - 103
1258 - மரைவினாதல்.
நாம்பல் லமரரை நாடா தருள்புரி நம்பரும்பர்
கூம்பல் பரிகை கொடுபோற்றுங் காழி குறுகலரிற்
றேம்பல் கொளுஞ்சிற் றிடையீர் தலையளி செய்துநுஞ்செவ்
வாம்பன் மலர்த்து மொருதா மரையிங் கடைந்ததுண்டே. - 104
1259 - கலைமான்வினாதல்.
கானொன்று வேணியர் பூணியர் தோணியர் கைக்கமலந்
தானொன்று றாததுங் கட்பகை யாய்மிசைத் தாவுதலாற்
றேனொன்று பூங்குழ லீர்கணை யேவச் சிறிதுடைந்த
மானொன்று வந்ததுண் டோபுகல் வீரிவ் வரைச்சரியே. - 105
1260 - மதமாவொடு மனம்வினாதல்.
பாலார் மொழியொரு பாலார்பொற் றோணிப் பருப்பதத்து
மேலார் கயிலை மலைச்சார லுங்கள் வியன்முலைநேர்
மாலார் கரிமுன் வரவிடை நேரென் மனம்பின்வந்த
தாலார் திருவயிற் றீர்கண்டி ரேலுறை யாடுவீரே, - 106
1261 - வழிவினாதல்.
பழியா யினுங்கிடை யாக்காழி மேய பரம்பரனார்
விழியா யினுங்கிடை யாதது வோநும் விரிபொழிலூ
ரொழியா யினுமுனக் கென்னிங்கெ னாதந்த வூரடையும்
வழியா யினுமுரை யீர்விரை யீர்ங்குழன் மங்கையரே. - 107
1262 - இடைவினாதல்.
மடையெங்கு முத்தஞ் சொரிந்தற றேக்கி வளைகழனிப்
புடையெங்கு நீந்தும் புகலிப் பிரானருள் போற்பொலிவீர்
தடையெங்கு நீத்தெழு கொங்கையு மல்குலுந் தங்கக்கண்டோ
மிடையெங்கு வைத்து மறந்துவந் தீரஃ தியம்புமினே. - 108
1263 - மொழியாமைவினாதல்.
செய்யோன் புகலிப் பெருமான் கயிலைச் சிலம்பிலெனை
வெய்யோனென் றேயுங்கள் வாயரக் காம்பல்விள் ளாதுமுழுப்
பொய்யோ வெனுமிடை யீர்விருந் தாய்வந்து புக்கவர்பா
லையோவொன் றேனுஞ்சொ லாடா திருத்த லடுத்ததன்றே. - 109
1264 - யாரே இவர்மனத்து எண்ணம் யாதேனத்தேர்தல்.
வில்லில ரம்பிலர் வேட்டம்வந் தோமென்பர் மெய்ம்மையெனுஞ்
சொல்லிலர் பொய்யரு மல்லர்நன் மேனியிற் றோன்றிவிளங்
கெல்லில ரெண்ணமுள் யாதோ கழுத்தன்றி யெவ்விடத்து
மல்லிலர் காழி யமர்தேவர் வெற்பகத் தாரிவரே. - 110
1265 - எண்ணம் தெளிதல்.
யானை யவாமரை வன்றி யவாவியற் பேரொடுமூ
ரேனை யவாவிவை யெல்லாம்பொய் யன்பர்மு னிட்டவெச்சி
லூனை யவாவிய காழிப் பிரான்வரை யுத்தமர்நம்
மானை யவாவிய தொன்றேமெய் சான்றவர் வார்த்தைகளே. - 111
1266 - கையுறையேந்திச்சேறல்.
காவாற் பொலிதண் கடற்காழி நாதர் கயிலைவெற்பிற்
றாவாப் பெருங்குணத் தோழியும் வாழி தலைவியுநம்
மோவாத் தவமும் பயனுமொத் தேயிங் கொருங்கமர்ந்தார்
மேவாக் குறையனைத் துந்தெரிப் பாமின்ப மேவுறவே. - 112
1267 - புனங்கண்டு மகிழ்தல்.
வலமே பொலிமழு வார்தொழு வார்வினை மாய்த்தருளு
நலமே மலிபு கலிவரை வாயென்ன நன்மைசெய்வாங்
குலமே வியபைங் குரல்கொண் டிவரைக் கொணர்ந்துநங்கட்
புலமே மகிழ விருந்துசெ யேனற் புனத்தினுக்கே. - 113
1268 - புனத்திடைக்கண்டுமகிழ்தல்.
தேரா னருமையுட் டேர்ந்தா னெனிலித் தினைப்புனத்தே
பாரா னிவரைப் பயந்தா னெவரும் பரவுசண்பை
யூரா னெனெஞ்சினும் பேரான் முடியுற் றெழிந்தமலர்த்
தாரா னருமை யறிந்தன னோவெச்ச தத்தனன்றே. - 114
1269 - பாங்கியிற்கூட்டம்.
இருவரும் உளவழிச்சேறல்.
வெண்காட்டு நங்கையுஞ் சந்தனத் தாரும் விழைதரமிக்
கொண்காட்டு நீரமர் வீர்காழி யாரரு ளொத்தவரே
பண்காட்டு வாய்மலர்ந் தாலோல மென்று பலகிளியுங்
கண்காட்டு நும்புனத் தேயழைப் பீர்நல்ல காவலிதே. - 115
1270 - பாங்கி எதிர்மொழிகொடுத்தல்.
தாரே வளையுஞ் சடைக்காழி நாதர் தமிழ்வரைநன்
னீரே வளையும் பொழுதெங்ஙன் வந்து நெருங்கும்வன்னி
யேரே வளையும் புயத்தீரிக் குன்றகத் தெவ்விடத்துங்
காரே வளையும் வழுவையெக் காலமுங் கண்டிலமே. - 116
1271 - இறைவனை நகுதல்.
பன்னக நாணினர் தென்காழி மால்வரைப் பால்வருத்தந்
தன்னமு மேவரு மோராம்ப லாய்ப்பின்பு தாமரையா
யன்னமன் னாயொண் கருநீலக் கோலமு மாயதுமற்
றின்னமென் னாகுங்கொ லோதழை யாலிவ ரெய்ததுவே. - 117
1272 - மதியினின் அவரவர் மனக்கருத்துணர்தல்.
சொல்லார் பரமர் பிரமலிங் கேசர் சுடர்க்கிரியிந்
நல்லார் தினைபுனங் காப்பதும் வேட்ட நலங்குறித்திவ்
வில்லா ரிறைவர் வருவது மாதவர் வேடமுனங்
கொல்லார் படைக்கை யிராவணன் சீதைமுன் கொண்டதுவே. - 118
1273 - பாங்கியிற்கூட்டம்.
தலைவன் உட்கோள்சாற்றல்.
சேலாழி நல்கக்கொண் டார்காழி நாதர் திருவருளாற்
பாலாழி வைகு மமுதமொன் றோமதிப் பாலமுதுங்
கோலாழி கொள்விரற் கொம்பரன் னீர்கொடுப் பேனருள்வீர்
மாலாழி மூழ்கி யிறந்து படாத வகையெனக்கே. - 119
1274 - பாங்கி குலழறைகிளத்தல்.
மதிக்கு முயர்குலத் தோனீ யிழிகுல மாதர்நல
முதிக்கு மிகழ்வொடு வேட்டனன் றோவென் னுளத்துமொண்டாள்
பதிக்குங் கருணைப் பரன்றோணி மால்வரைப் பாலழல்போற்
கொதிக்கும் பசியுற்ற போதுங்கொ ளாதுபுல் கோட்புலியே. - 120
1275 - தலைவன் தலைவிதன்னை உயர்த்தல்.
நீடுந் தியாகரைப் போலேயிம் மாதரு நீத்தமையால்
வாடுந் தருவிணின் சொற்படி யாய மரபெனினுங்
கோடுங் குவடும் பொருமுலை யாயொர் குறத்தியைச்சேர்ந்
தாடும் பிரான்சண்பை யானிளஞ் சேயுற்ற வாசென்னையே. - 121
1276 - பாங்கி அறியாள்போன்று வினாதல்.
குன்றாடு வாரரு வித்திர ளேற்றுங் குலவுமன்று
ணின்றாடு வார்சண்பை மால்வரை வாய்ச்சுனை நீர்குடைந்து
மின்றாடு வார்பல ரன்னருண் மன்னரு ளேறனையாய்
நன்றாடு வாருன் மனங்கவர்ந் தாளெந் நறுநுதலே. - 122
1277 - இறையோன் இறைவிதன்மையியம்பல்.
தானே தனக்கிணை யாங்காழி நாதன் றளிர்பொருகைம்
மானே விழிமுடி வாழ்பிறை யேநுதன் மன்னுகொன்றைத்
தேனே மொழியர வேயல்குல் கொங்கையுஞ் சேவிமிலே
மீனே பொருகணல் லாயென்னை யாத்தவொர் மென்கொடிக்கே. - 123
1278 - பாங்கி தலைவியருமை சாற்றல்.
மருட்குரி யாரெண்ண வும்படு மோவிம் மணிவரைவாய்த்
தெருட்குரி யார்மக ளாரூரர் மேவிரு தேவியர்போற்
பொருட்குரி யாரொரு தோழமை யார்நம் புகலியர்பே
ரருட்குரி யார்க்கன்றி மற்றோர்க் கெளிய ளலளலளே. - 124
1279 - தலைவன் இன்றியமையாமை இயம்பல்.
வாரா வமரர் வணங்குங் கழுமல வாழ்க்கையென்றுந்
தீரா தவர்தந் திருவருள் போலச் சிறந்ததுகாண்
பாரார் புனலன்றி மீனிற்கு மோவப் பரிசினுங்க
ளாரா வமுதமின் றேனிற்கு மோவென தாருயிரே. - 125
1280 - பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.
நவையா றுறாம லெனைப்புரப் பார்சண்பை நாட்டிளவேய்
குவையா முறித்துக் களிறின் பிடிக்குக் கொடுக்கும்வெற்பா
செவையாக நின்குறை நீயேசென் றோதெங்கள் செல்விமுன
மிவையா திகளெம்ம னோரிசை யாரச்ச மெய்துவரே. - 126
1281 - பாங்கியைத் தலைவன் பழித்தல்.
வானோ நிலவுல கோபுகழ் காழி வரதரிளங்
கானோ வுறாவரை வாய்விரை வாயிரு கைவிரித்தாய்
தேனோ வெனுமொழி யாய்நல்ல காரியஞ் செய்தனைநீ
யேனோநிற் பற்றித் தொடர்ந்து திரிந்திளைத் தெய்த்ததுவே. - 127
1282 - பாங்கியிற்கூட்டம்
பாங்கி பேதைமை யூட்டல்.
வாராண் முலைநிலை மங்கையொர் பங்கர் மதியமுகிழ்த்
தாராள் சடையர் புகலிவெற் பாவெங்க டையலெனுங்
காராள் குழலி புணர்தொழி லோவத்துங் கண்டறியா
டேராணி னுட்டுயர் பல்காற் பலர்சென்று செப்பினுமே. - 128
1283 - காதலன் தலைவிமூதறிவுடைமை மொழிதல்.
நன்றே யதற்கெதி ரேபுரி காவி நளினமைத்
தன்றே வருத்திநின் றாரறி யார்கொனல் லாயகவை
யொன்றே குறித்தறி யாரெனிற் காழி யொருவர்தம்பாற்
குன்றே பொருமுலைப் பாலுண்டு ளாருமக் கொள்கையரே. - 129
1284 - பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்.
ஆருர்வன் றொண்டர் கழுமலத் தீச ரனுஞைமுன்பெற்
றேரூர் பரவையின் பெய்திய தாற்பின்னு மெய்தப்பெற்றார்
போரூர் களிற்றண்ண லேசுய மேமுன் புணர்ந்தனைநீ
காரூர் குழலியை மீட்டுமென் பாலென்ன காரியமே. - 130
1285 - தன்னிலை தலைவன் சாற்றல்.
தெருளன்றி மற்றொன் றிலார்சூழ் புகலிச் சிவபெருமா
னருளன்றி முத்தி யடைவதுண் டோநின் னனுஞையெனும்
பொருளன்றி முன்னம் புகுந்தவென் குற்றம் பொறுத்தருள்க
விருளன்றி வேறொன் றெனோக்குழ லாயினி யென்செய்வனே. - 131
1286 - பாங்கி உலகியலுரைத்தல்.
சூதாக மீதெழு கொங்கைமின் னாரின்பந் தோய்ந்தமர்தற்
கேதாக முற்றவ ரெல்லாம் வரைந்தன்றி யெய்துகிலார்
போதாக வென்பணி வார்காழி யீசர் புரிந்துரைத்த
வேதாக மங்களி னுள்ளதன் றோவிவ் விதியண்ணலே. - 132
1287 - நீவரைகென்றல்.
கிடைசிறி தேனுமில் லாக்காழி வாணர் கிளரருளாற்
கடைசிறி தேனுமில் லாவலி யோய்நற் கடிமணஞ்செய்
திடைசிறி தேனுமில் லாமட மாதினை யெய்தினின்பந்
தடைசிறி தேனுமில் லாதெய்த லாமித் தரணியிலே. - 133
1288 - தலைவன் மறுத்தல்.
செப்போது கொங்கைத் திருவனை யாய்திரு மான்முதலொர்
முப்போது மேத்துங் கழுமலத் தீசர் மொழிவழியே
தப்போ துதலொழி யந்தணர் சூழத் தமர்மகிழ
விப்போ துயிர்பிழைத் தாற்செய்ய லாம்பி னியன்மணமே. - 134
1289 - பாங்கி அஞ்சியச்சுறுத்தல்.
பண்ணார் மொழியுமை பங்கர்தென் காழிப் பருப்பதத்தி
னண்ணார் தொழுகழ லாயிங்கு மேவி னமர்கொடுமை
யெண்ணார் புரிவ ருனையு மனையு மெனையும்வையுங்
கண்ணார் கதிரும் படுமினி நீயுங் கழிதனன்றே. - 135
1290 - தலைவன் கையுறைபுகழ்தல்.
பரிவா யருள்சண்பை யாரரு ளாலொளி பற்றுதய
கிரிவா யிழிசெவ் வருவியுண் மூழ்கிக் கிடந்ததய
னரிவாய் புகழ்வது பெற்றேனந் தோவிவ் வருமணிநுஞ்
சுரிவாய் குழலி முலையேறிற் கண்டு தொழுதுய்வனே. - 136
1291 - பாங்கி கையுறை மறுத்தல்.
அண்டார் புரஞ்செற் றவர்காழி நாத ரருணைவெற்பில்
வண்டார் குழலி யணிமுலை மேலிம் மணியமையக்
கண்டா ரெனிலெமர் காணாய்பி னீயெமைக் கன்னவிறோட்
டண்டா ருடையண்ண லேயெண்ண லேதச் சழக்கருக்கே. - 137
1292 - ஆற்றுநெஞ்சினோடு அவன்புலத்தல்.
விழையுங் குழையு மனத்தன்பர் கூட்டம் விழையுமையர்
மழையுங் குழையுங் களத்தார் புகலி வணங்கலர்நோய்
தழையுங் குழையுந் தளர்வொழி யாத தனிமனம் போற்
குழையுங் குழையும் படியுற்ற தாலென் கொடுவினையே. - 139
1293 - பாங்கி ஆற்றுவித்தகற்றல்.
மதிக்கும் புகலிப் பெருமான் றிருமலை வாணர்குலத்
துதிக்குங் கொடியொண் முலைமேனின் கைம்மணி யுற்றொளிருந்
திதிக்குங் கருணைத் திறத்தாய் நின்னூர்க்கின்று சென்றுகுன்று
துதிக்குங் கதிரெழு காலையில் வாவிந்தச் சோலையிலே. - 140
1294 - இரந்து குறைபெறாதுவருந்தியகிழவோன்
மடலேபொருளெனமதித்தல்.
ஆலஞ் சிதைத்தட ராதயின் றார்சண்பை யாளர்துழாய்க்
கோலஞ் சிதைத்து மருப்பணிந் தார்குடி கொண்டிடினு
நீலஞ் சிதைத்தொளிர் கண்ணாள் பொருட்டு நெடியபெருந்
தாலஞ் சிதைத்து விடலே துணிபெத் தடையினியே. - 141
1295 - பாங்கிக்கு உலகின்மேல்வைத்துரைத்தல்.
கடல்சூழ் புவியிளங் காளையர் தாந்தங் கலைமதியை
விடல்சூ ழிடைமட வாரல்குற் பாம்பு விழுங்கியதே
லுடல்சூழ் தரச்சண்பை யார்நீறு பூசி யுழிஞையொடு
மடல்சூ ழெருக்கணிந் தேமட லூர்வர் மடமயிலே. - 142
1296 - பாங்கியிற்கூட்டம்.
அதனைத் தன்மேல்வைத்துச் சாற்றல்.
ஒன்பா னுருவ முளனா கியுமுரு வொன்றுமிலா
னன்பான் மலிபு கலியுங்கள் வீதியி னாளைநல்லா
யென்பா னணிந்து மடன்மா விவர்ந்துகை யேற்றதொடு
வன்பான்மை யின்வரு வேனென்செய் வீரிந்த வல்வினைக்கே. - 143
1297 - பாங்கி தலைமகள் அவயந்தருமைசாற்றல்.
வாரார் விழிக்கு வலயமங் கைக்கம லஞ்சொல்வன்னி
காரார் கருங்குழற் கொண்ட லிடைவிண் கமழுமுயிர்
நீரார் முகமதி மெய்கதி ராக நிகழ்சண்பையா
ரேரார்மெய் யெட்டு மெழுதியன் றோமட லேறுவதே. - 144
1298 - தலைமகன் தன்னைத்தானேபுகழ்தல்.
கடையு மிடையு முதலுமில் லான்றிருக் காழியன்னாள்
படையு முடையும் விழிமுத லியாவும் படமுணர்ந்தோர்
மிடையு மடையு மிருபிடி யென்ன விரைந்தெழுதி
யிடையு நடையு மொருபிடி யென்ன வெழுதுவனே. - 145
1299 - பாங்கி அருளியல்கிளத்தல்.
பாவா ருலாப்புகன் றேகயி லாயம் படர்ந்தவர்தோட்
பூவா ரலங்க லிழத்தனன் றோபுவிப் போனகங்கொ
ளாவார் புகலிப் பிரமலிங் கேச ரருட்குரியார்
மேவார் வரைப்பெண்ணை வேட்டே கடற்பெண்ணை வெட்டுதற்கே. - 146
1300 - பாங்கி கொண்டுநிலைகூறல்
ஆரா வமுதன்ன வெம்பெரு மாட்டி யடிபணிந்து
தீரா நினுள்ளக் குறையாவும் விண்ணப்பஞ் செய்வலின்னே
நாரா யணனுண ராச்சண்பை யார்வரை நண்பவுள்ள
நேரா குறாதெனிற் போந்துகொண் டேமய னீந்துகவே - 147
1301 - தலைவி இளமைத்தன்மை பாங்கி தலைவற்குரைத்தல்
பொறியா ணிறத்தன் மலரா ளறத்தன் புகல்புகலி
மறியா ளிடத்தன் மழுவாள் வலத்தல் வரையணங்கு
சிறியாண் முளைத்தப னேற்றிரண் டேநின் செறிதுயர
மறியா ளுளத்துங் குறியா ளவட்கெ னறைவதுவே - 148
1302 - தலைவன் தலைவிவருத்தியவண்ணமுரைத்தல்
ஒருபார்வை வெப்ப மொருபார்வை தட்ப மொருவர்முகத்
திருபார்வை யொப்பத்த னொண்முகத் தேயமைத் தேவெதிர்ந்து
வருபார்வை யாயென் னகத்தாமரையைமுன் வாட்டுவளென்
றருபார்வை யோபின் மலர்த்துவள் காணிந்தச் சண்பையிலே - 149
1303 - பாங்கி செவ்வியருமைசெப்பல்.
தருக்கும் பகைவர் மணிமோலி யெற்றுபொற் றாளுடையாய்
பெருக்கும் பலவிளை யாடலு நீத்தொரு பேச்சுமின்றி
மருக்கும்ப மென்முலை யாள்சண்பை யாரை மனத்திருத்தி
யிருக்கும் பெரியவர் போலிருப் பாளென் னியம்புவதே. - 150
1304 - தலைவன் செவ்வியெளிமைசெப்பல்.
பாராய் புகழ்ச்சண்பை யாரரு ளப்பர்தம் பால்வருகைச்
சீராயப் பூதி யடிகளைப் போலென் றிகழ்வருகைக்
காராய் பவளென் வரவோதி னப்பொழு தேயலர்ப்பூந்
தாரா யெதிர்கொண் டுனையு மெனையுந் தழீஇக்கொளுமே. - 151
1305 - பாங்கி என்னைமறைப்பின் எளிதெனநகுதல்.
கடம்படு வேழ முரித்த பிரான்றிருக் காழிவெற்பா
மடம்படு கோதையு நீயுமொத் தீரன்ன மாண்பினிரே
லிடம்படு மென்னை மறைத்துப் புணர்திற மெய்துவிரோ
வுடம்படு மெய்யின்றி யேபுண ராதுயி ரோடுயிரே. - 152
1306 - அந்நகைபொறாது அவன்புலம்பல்.
அப்பார் சடைய ரடற்சூற் படைய ரமர்விடையர்
செப்பார் முலைநிலை மங்கையொர் பங்கர் திருப்புகலி
யொப்பார் கருங்கணுஞ்செவ்வாயுஞ் செய்த வொழிவருமென்
வெப்பார் பிணிக்குப் புளியிட்ட தாயிற்றுன் வெண்ணகையே. - 153
1307 - பாங்கி தலைவனைத்தேற்றல்.
பெம்மான் புகலியிற் சம்பந்தர் பால்வைத்த பேரருள்போ
லம்மான் விழியெம் முதல்வியென் பானல் லருள்பெரிய
ணம்மானச் சம்பந்தர் சொற்படி யாவு நடத்தினன்மற்
றிம்மானென் சொற்படி யெல்லா நடத்து மியல்பினளே. - 154
1308 - கையுறை ஏற்றல்.
வெற்றகட் டுக்கன மீவார் புகலி விமலரெனக்
குற்றகட் டுக்களைந் தாள்வார் வரையி லொளிறுவைவேல்
செற்றகட் டுக்க மறாச்சிற் றிடைப்பெருஞ் செல்வியல்குற்
பொற்றகட் டுக்கணி யாமைய நின்கைப் பொலிமணியே. - 155
1309 - கிழவோன் ஆற்றல்.
துருத்திய வாஞ்சண்பை நாயக ரப்பர்க்குச் சூலைவெந்நோய்
பொருத்திய வாறவர் பாலரு ளாகிப் புகுந்ததுபோ
லிருத்திய வார்வத் திவர்பல கால்வன்சொ லீந்துநம்மை
வருத்திய வாறுநம் மாட்டரு ளாகி மலிந்ததுவே. - 156
1310 - இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறையுணர்த்தல்.
அருவ ருருவ ரருவுரு வாள ரவிர்புகலித்
திருவ ரிருவ ருணரார் வரைநஞ் செழும்புனத்தே
வருவ ரொருவ ரரியர் பிரியர் வயமுருகே
பொருவர் தருவர் தழியவர்க் கென்ன புரிதுமின்னே. - 157
1311 - இறைவி அறியாள்போன்று குறியாள்கூறல்.
நாம்பணி தாளர்வெம் பாம்பணி தோளர் நகுபுகலிக்
காம்பணி மால்வரை யார்வீழி மேவிக் கவுணியர்க்குக்
கூம்பணி கைகொடு காண்கநற் றோணிமெய்க் கோலமிதே
யாம்பணி கென்றுமுன் காட்டினர் காண்மிக் கதிசயமே. - 158
1312 - பாங்கி இறையோற்கண்டமை பகர்தல்.
தலையானை யைந்தினப் பாலானை யைந்துமெய்ச் சாமியெண்ணெண்
கலையானை யாறினொ டாறுக் கதீதன் கயிலைநெடு
மலையானை நேடிவந் தாரல ராலதை வாட்டியநின்
முலையானை நேடிவந் தார்சண்பை வாழ்நண்பர் மொய்குழலே. - 159
113 - பாங்கியைத் தலைவிமறைத்தல்.
விரைப்பால் வளர்குழ லாய்மான மீக்கொள்வில் வேடர்குலத்
துரைப்பால் வழுவி னுயிரே வழுவுமென் றோர்ந்துளைநீ
தரைப்பா லெவரும் புகழ்நம் பிரான்றம் பிரான்புகலி
வரைப்பா லுறைபவர்க் குந்தகு மோவிந்த வார்த்தைகளே. - 160
1314 - பாங்கி என்னை மறைப்பது என்னெனத் தழாஅல்.
இருமாட் டியன்றன வெல்லாஞ்சொ லென்றினி தேற்றன் முன்மே
வருமாட்டியபம் பரம்போற்சுழலு மனமிற்றைநாள்
கருமாட்டி நம்மைப் புரக்கும் பிரான்றிருக் காழியிலெம்
பெருமாட்டி யென்னை மறைத்தலி னாலென்ன பெற்றியதே. - 160
1315 - பாங்கி கையுறைபுகழ்தல்.
குரவே கமழுங் குழலாய் புகலிநங் கோனருளாற்
புரவே புரியரி மார்புகண் டான்முன் பொலிவதொளி
யிரவேயென் றோவி யவாவுந் தகைத்து னெழில்செயல்கு
லரவே யணியக் கிடைத்தது காணிவ் வருமணியே. - 161
1316 - தோழி கிழவோன் துயர்நிலைகிளத்தல்
வண்டார் கடுக்கை மலைவார் கழுமல வாணர்வெற்பிற்
றண்டா ரணிகுழ லாயொரு வேழந் தடக்கைகொடு
விண்டார் முளைமுறித் துப்பிடி வாய்விருப் பிற்கொடுக்கக்
கண்டா ருடனுயிர் விண்டார்கொ லென்னக் கலங்கினரே. - 162
1317 - மறுத்தற்கு அருமை மாட்டல்.
வெய்யோ ருறாச்சண்பை யார்வரை வாய்மென்றளிர்கள்கொய்து
கையோ சலித்தன வென்பார் துயர்கண்டு கண்வெதும்பும்
பொய்யோ வினிப்புக லக்கிடை யாதொரு போக்குமின்றா
லையோ பெரியவர் முன்செல நாணுற் றகன்றனனே. - 163
1318 - தோழி தலைமகன்குறிப்பு வேறாக நெறிப்படக்கூறல்.
மிடிகெட்ட தென்று புகுவார் மகிழ்தரும் வெங்குருவார்
கடிகெட்ட தென்றுரை யாமழு வார்தங் கருதருளாற்
படிகெட்ட தென்றுரை யாடா தளிப்பவர் பல்களியர்
குடிகெட்ட தென்றுரை யாடுவ ராலென்று கூறினரே - 164
1319 - தோழி தலைவியைமுனிதல்.
கறுப்பார் களத்தர்தென் காழியன் னீர்முற் கலப்புணர்ந்தே
மறுப்பா ரலரென்று வாய்திறந் தேனிற்றை மாண்புணரேன்
வெறுப்பார்சொல் லுள்ளத் தொழிகவென் மீதும் விருப்புறுக
பொறுப்பாரன் றோபெரி யோர்சிறி யோர்செய்த புன்மையையே. - 165
320 - தலைவி பாங்கியைமுனிதல்.
மாதேநின் வார்த்தை புகலிப் பிரான்றிரு வார்த்தையென்று
தீதே யறக்கொள்ளு வேன்பழங் கேண்மைச் சிதைவுமின்று
சூதேயுட் கொண்டு பலபல கூறத் துணிந்தனையிப்
போதே திலளெனக் கொண்டாய் நினக்கிது புந்தியன்றே. - 166
1321 - தலைவி பாங்கிதன்கைக் கையுறையேற்றல்.
பழுதே யுறார்தம் பரன்காழி வெற்பர்நம் பால்வரில்வண்
டுழுதே மலர்க்குழ லாய்சில வாமொழி யிற்பலவாந்
தொழுதே மடல்கொள லாலலர் நின்கையிற் றுன்னியவப்
பொழுதேயென் கையுற்ற தாயிற் றவர்தந்த பூந்தழையே. - 167
1322 - இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல்.
மன்னா சிறந்ததொன் றன்பே யஃதின்றி வாசவன்மு
னின்னாவுற் றானின் றளிர்சண்பை யாரரு ளிற்கவர்ந்து
முன்னா முடிவைத் திருவிழி யொற்றி முகத்தணைத்துத்
தன்னாக முற்றுமெய் நின்னாக மாகத் தழுவினளே. - 168
1323 - பாங்கி தலைவற்குக் குறியிடங்கூறல்.
தார்கோ ளரவெனக் கொண்டார் புகலித் தடங்கிரிப்பா
லூர்கோண் மதியி னடுவட் பளிக்கறை யொன்றமரக்
கார்கோள் வளாகம் புகழ்பொழில் சூழ்ந்து கஞலுமிட
மார்கோ ணெடும்புயத் தாய்பகல் யாம்விளை யாடிடமே. - 169
1324 - குறியிடத்து இறைவியைக் கொண்டுசேறல்.
பொன்னே பொருசடை யார்சண்பை யார்வரைப் பூஞ்சுனைநீ
ரன்னேநின் மேனி நறுமண மீந்தென் னகக்குறைதீர்
பின்னே யெனாதெனுஞ் சென்றாடு தற்குன் பிறங்குபத
மின்னே மெலப்பெயர்த் தெம்பெரு மாட்டி யெழுந்தருளே. - 170
1325 - குறியிடத்து உய்த்துநீங்கல்.
மண்ணுக் குவகை செயுங்காழி நாதர் வரைமயினின்
கண்ணுக் குவகை செயுமாடி மற்றிது கண்டிவணில்
பண்ணுக் குவகை செயுமொழி யாய்நின் பசுங்குழற்கார்
விண்ணுக் குவகை செயுமலர் கொய்திங்கு மேவுவனே. - 171
1326 - நீங்குந்தோழி தலைவற்குணர்த்தல்.
சற்றாய் பவர்க்கும் பெரும்பய னல்குந் தனிமுதல்வன்
பற்றா யுறைநிறை பொற்றோணி வெற்பிற் பசுமயிறா
னற்றாய் செவிலியு மின்றிமற் றாரொடு நானுமின்றிக்
கற்றாய் தமியணிற் கின்றாள் வெறாதன்பிற் காத்தருளே. - 172
1327 - இறையோன் குறியிடத்து எதிர்ப்படுதல்.
குளத்தே விழியொன் றுளார்சண்பை யாரன்பு கூர்ந்தவருட்
டளத்தே யமர்ந்து மவர்க்கே வெளியுந் தயங்குதல்போல்
வளத்தே மலியும் பெரிதாங் கருணைநன் மாட்சியினென்
னுளத்தே யமர்ந்தும் வெளிநின் றுளாரிவ் வொருவரின்றே. - 173
1328 - புணர்ச்சியின்மகிழ்தல்.
நன்கோடி நோக்கிப் பணிந்திரப் பார்க்கரு ணம்பர்நெடுந்
தென்கோடி சூழும் புகலியி லெத்தவஞ் செய்தனமிப்
பொன்கோடி யுள்ள கருவூலம் புக்கிரு பொன்மலையும்
பின்கோடி நீங்க லிலாநிதி யங்களும் பெற்றனமே. - 174
1329 - புகழ்தல்.
மழையுந் தொழுங்குழ லீருங்கள் கண்களை வாணுதலைத்
தழையுஞ் செருக்கி னெதிர்ந்துவெல் லாதிரி தன்மைகண்டே
யுழையும பிறையு முலகமுற் றீன்ற வொருபெரியாள்
விழையும் புகலித் திருத்தோணி யப்பர் வெறுத்தனரே. - 175
1330 - தலைமகளைத் தலைவன்விடுத்தல்.
கலர்வருத் தங்கரு தாக்காழி நாதர் கருணையன்னீ
ருலர்வருத் தந்தவி ரிச்சோலை யுற்றொரு வேனுளத்தே
யலர்வருத் தந்தணித் தீர்கண் ணுறாம லலைந்தஞர்கொள்
பலர்வருத் தந்தணிப் பீராய நாப்பட் படர்ந்தினியே. - 176
1331 - தலைவி சோர்தல்.
வானவ ரிந்திர னாரண னாரணன் மற்றுமுள்ளோ
ரானவர் போற்றுங் கழுமலத் தீச ரருள்வலியாற்
கானவா காவலிச் சோலையி லேயெனைக் கைகலந்து
போனவர் பின்சென்ற தாலென்செய் வேனென் பொறாமனமே. - 177
1332 - பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல்.
கோகந கங்குறித் தாலுங் குறித்தல்கொள் ளேற்குமருள்
கோகந கங்குல வுஞ்சிலை யான்வெங் குருவரைவாய்க்
கோகந கங்கொள் குவிமுலை யாய்நின் குழற்கணியக்
கோகந கங்கொணர்ந் தேன்பொறி யேறுமுன் கொண்டருளே. - 178
1333 - பாங்கி தலைவியைப் பாங்கிற்கூட்டல்.
கடிமலர் பூங்கடுக் கைத்தொடை யாரென் கருந்தலைக்கு
மடிமலர் சேர்த்துநன் காள்வார் புகலி யருவரைவாய்க்
கொடிமல ரொன்று மிகைகொடி யேமற்றைக் கோலஞ்செய்முப்
படிமல ரும்புனைந் தேன்பண்ணை மேவப் படருதுமே. - 179
1334 - நீங்கித் தலைவற்கு ஒம்படைசாற்றல்.
போத முறாவெனை யும்புரப் பார்தென் புகலிவெற்பிற்
பேத முறாமனத் தாள்பொருட் டியான்செய் பிழைமறக்க
நீத முறாமின் றனக்கு மெனக்கு நினக்குமினி
யேத முறாதண்ண லேயெண்ண லேநிற் கியலறமே. - 180
1335 - உலகியன்மேம்பட விருந்துவிலக்கல்.
வானும் புகழ்திற லாய்சுடர் மாயும் வழிப்புனலுங்
கானுங் கடத்த லரிதினித் தேனுங் கடியுழையூன்
றானுங் கவர்ந்துத யத்தேக லாமன்பர் தந்தவெச்சி
லூனுங் கவர்ந்தனர் காளத்தி வாய்ச்சண்பை யுத்தமரே. - 181
1336 - விருந்திறைவிரும்பல்.
வாங்கிய வாணுத லார்செங்கை தொட்டது மாற்றருங்கைப்
போங்கிய வேம்பெனி னுங்கரும் பாமுரை யாடுவதென்
வீங்கிய மாமுலை யாய்வள்ளி யாருண்ட மெல்லிலையிற்
றேங்கிய மிச்சிலன் றோசண்பை யாரிளஞ் சேயுண்டதே. - 182
1337 - ஒருசார் பகற்குறி.
கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண்டிரங்கல்.
வாரின்றி மேவுத லில்லா மலைநிலை மங்கைகொங்கைப்
போரின்றி மேவுத லில்லாப் புயத்தர் புகலிவெற்பி
லூரின்றி யூழற் றதுமுடிப் பானுற் றொருவன்மலர்
நாரின்றி யேதொடுத் தான்பெரு மாலை நணுகுறவே. - 183
1338 - பாங்கி புலம்பல்.
வண்டாய் கமல முகம்வாடச் செய்தவிம் மாதுமுகங்
கண்டா யதைவருத் தக்கதி ரேபு கலியரற்குத்
தொண்டா யுறாரி னழுவம் புகுந்துன் சுடர்மறைத்துக்
கொண்டாய் கவிமறைந் தெய்தவன் மேலொரு குற்றமின்றே. - 184
1339 - தலைவனீடத் தலைவிவருந்தல்.
வேதரிப் பாரளந் தார்தலை கண்முடி மேலடிமே
லோதரிப் பார்சண்பை யுன்னாரி னென்னை யொருகழைக்கோட்
போதரிப் பார்விடு பூந்தோணி காமப் புனலழுத்து
மாதரிப் பார்வந் தணைந்திலர் தேம்புமென் னாருயிரே. - 185
1340 - தலைவியைப் பாங்கிகழறல்.
அமைகூடு தோளணங் கேபிரிந் தாருயி ரன்னவரென்
றுமைகூடு மெய்யர் புகலியுன் னாரி னுயங்குவையுட்
கமைகூடு மன்னரு நீயு மினனுங் கரமுங்கொல்கண்
ணிமைகூ டுவதும் பிரிவதுஞ் சற்றுளத் தெண்ணுகவே. - 186
1341 - தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.
சொல்லாமுன் முன்னங்கொ டெல்லா முணருஞ் சுகுணர்க்கன்றி
யெல்லா முரைத்து முணரா தவர்க்கொன் றிசைப்பதினுங்
கல்லா தவரணு காக்காழி வாழ்மணி கண்டர்நுதற்
பொல்லா வழற்க ணெதிராத னன்று புரிபவர்க்கே. - 187
1342 - தலைவி பாங்கியொடுபகர்தல்.
தேருந் திறமெற் கருள்வார் சிரபுரச் செல்வர்வெற்பி
னேருங் கிளிமொழி கட்கினி தாய நெருஞ்சிமலர்
சாருங் கொடுங்கண் டகமாய தென்னத் தலைவரெனக்
காரும் படிசெய்த வின்ப மெலாந்துன்ப மாயதுவே. - 188
1343 - தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல்.
உள்ளே யொருகதிர் மேவுற வோம்பி யொழிவில்கதிர்
கள்ளே மலிகுழ லாய்வெளி யோம்பலை கஞ்சமனப்
புள்ளேகொ ணீர்ச்சண்பை யார்வரை வாழ்நம்பொல் லாருணர்ந்தாற்
கொள்ளேயென் றாக்குவர் வெஞ்சிறை யாய குகையிருளே. - 189
1344 - நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.
வரியார் விழியணங் கேயுயிர் நீத்துடல் வாழுங்கொலோ
தரியாவின் பந்தந் தவரையெவ் வாறு தணப்பல்சண்பைக்
குரியா ரரிக்கு மரியா ருடனுமை யொற்றித்தென்றும்
பிரியா திருக்கச் செயுமா தவஞ்செயப் பெற்றிலனே. - 190
1345 - தலைவிக்கு அவன்வரல் பாங்கிசாற்றல்.
பாடி வருந்து மவர்க்கருள் காழிப் பரன்வரைநீ
நீடி வருந்து மதுதணிப் பானன்பர் நீண்மணித்தே
ரோடி வருந்துங்க மாரோதை கேளவ் வொருவர்நம்மைத்
தேடி வருந்து மதுகாண லாமிச் சிறைமறைந்தே. - 191
1346 - தோழி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்.
ஓங்கை முகவர் தகவர் பகவ ரொளிமழுக்கொள்
பூங்கை யுடையர் விடையர் சடையர் புகலிவெற்பிற்
றீங்கை யுறுத்துந் தழல்கண் ணுறீரித் தினைக்கிளிகாள்
வேங்கை சிவந்த தினியெங்கண் மானிங்கு மேவரிதே. - 192
1347 - தோழி முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.
விண்ணுடை யார்புனன் மேலுடை யாரசண்பை வெற்பமரு
மெண்ணுடை யாரினிக் கொய்வார் தினையிங் கியன்மயில்காண்
மண்ணுடை யாரன்பர் போலெங்கண் மாதை மறப்பின்மிகக்
கண்ணுடை யாரெனும் பேரில்லை யாகுங் கருதுமக்கே. - 193
1348 - பாங்கி தலைவன்முன்னின்று இற்செறிப்பு அறிவுறுத்தல்.
கோட்புலி யார்விரை யாக்கலி தப்புங் குலமடங்க
வாட்புலி யார்கொடு மாய்த்தா லெனத்தினை மாய்த்தனர்செவ்
வேட்புலி யார்நிகர் வேந்தேயிக் காவல்கை விட்டதுறேந்
தாட்புலி யார்தொழு மம்பலத் தார்சண்பைத் தாழ்வரைக்கே. - 194
1349 - முன்னின்றுணர்த்தி ஓம்படைசாற்றல்.
தழையாற்று வேணிப் பெருமான் புகலித் தனிமுதல்வன்
பழையாற்று நன்கு வெளிப்படுங் காறுமப் பாலகலா
துழையாற்று ளங்கொண் டமர்ந்தவர் சீர்த்தி யுணர்ந்தமன்னா
விழையாற்று மங்கையை நீமறந் தாற்கதி வேறில்லையே. - 195
1350 - தலைவன் தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல்.
கனத்தே மலர்க்குழற் சீதையைக் கொண்டகல் கள்வனிலென்
மனத்தே யமரும் பிரான்காழி வாணன் மணிவரையிப்
புனத்தே யமருங் கிளியையெங் கோகொடு போயினரித்
தினத்தே கொடுஞ்சிலை வேடரென் றாலென்ன செய்வனெஞ்சே. - 196
1351 - பகற்குறி இடையீடு.
இறைவனைப் பாங்கி குறிவரல்விலக்கல்.
மாவேட்ட மாடவில் லம்புட னேகுன்ற வாணரன்பர்
பாவேட்ட நாதர் திருத்தோணி மால்வரைப் பாலுழல்வார்
நாவேட்ட வின்புக ழாய்புனிற் றாவி னயந்துநறும்
பூவேட்ட வார்குழல் பாற்பல காலும் புகுமன்னையே. - 197
1352 - இறைவியைப் பாங்கி குறிவரல்விலக்கல்.
நடத்தே பழகிய தாளான் புகலிநம் பன்களத்தே
விடத்தே சுளான்பசப் போர்பாதி முற்றும் விளைந்ததனான்
மடத்தே மலர்க்குழ லின்னளென் றாய்மனம் வைத்தனளிவ்
விடத்தே வருதல்சொன் னேன்மயி லேநிற் கியல்பல்லவே. - 198
1353 - இறைவி ஆடிடம் நோக்கி அழிதல்.
தென்னாவ லூரரின் பந்தந்த வொற்றியைத் தீர்ந்தடைந்த
வின்னா வுணர்ந்து மொருதோணி யப்ப ரிரும்பொருப்பு
முன்னா வளையுஞ் சுனையு நனையு முழுமலருந்
துன்னா வொளிர்பொழி லுந்துறப் பாநந் துணிபென்னையே. - 199
1354 - பாங்கி ஆடிடம்விடுத்துக் கொண்டகறல்.
குழையே பொலியுஞ் செவிச்சட்டை நாதர் குலவிநிற்கு
மழையே தவழு மலைச்சாரல் வாய்மண வாளர்வந்தாற்
கழையே தருதழல் கொண்டதெண் ணாது கவின்கிளிகாள்
பிழையே யிலாருயி ரோடுசென் றாரென்று பேசுமினே. - 200
1355 - தலைவனுருவு வெளிப்பட இரங்கல்.
மேவா வெனக்கு மருள்சட்டை நாதர் வியன்கிரிப்பா
லோவா வளமைப் புனமு மிதணு மொளிர்பொழிலுந்
தாவாநன் னீர்ச்சுனை யுந்தேடி நாமிங்குச் சார்வதன்மு
னாவா வெதிர்வந்து நின்றன் ரானம்மை யாள்பவரே. - 201
1356 - பின்னாள் நெடுந்தகை குறிவயின் நீடுசென்றிரங்கல்.
வாய்மையி னாற்பொலி வார்சூழ் புகலி வடுகன்வெற்பிற்
றூய்மையி னாற்பொலி மாலைய தாயவிச் சோலையெதிர்
சேய்மையில் யான்வரும் போதே தரிசனஞ் செய்யநிற்கு
மாய்மயில் காணவொண் ணாதாயிற் றாலணி மைக்கண்ணுமே. - 202
1357 - தலைவன் வறுங்களநாடி மறுகல்.
மதிக்கும் புலமை யிடைக்காடன் சீற்ற மலிந்தவந்நாட்
கதிக்கும் புகழ்ச்சண்பை யார்மகிழ் கூடற் கனதளியுட்
டுதிக்கும் விமானங்கொ லோநம தாவித் துணையகல
வுதிக்கும் விழியின் முகம்போன் றிருந்தவிவ் வோரிதணே. - 203
1358 - குறுந்தொடிவாழும் ஊர்நோக்கி மதிமயங்கல்
சொல்லரி தாம்புக ழானா னுயர்த்தவன் றோணிவெற்பிற்
கல்லரி தாநங் கவலைக் கிழிங்கையக் காரிகையைப்
புல்லரி தாமினி யூரது வேனும் பொருக்கென்றங்குச்
செல்லரி தாநெஞ்ச மேயென்செய் வாமிந்தத் தீவினைக்கே. - 204
1359 - இரவுக்குறி
இறையோன் இருட்குறிவேண்டல்
பொன்னங் கவர்மலை போன்முலை யீர்கடல் பூத்தவிட
முன்னங் கவர்பவன் சண்பையன் னாருண் முளைப்பதொடு
பன்னங் கவர்வினை போலெழு காரும் படர்ந்ததுங்க
ளன்னங் கவர்விருந் தாயடைந் தேனிங் கருளுமினே - 205
1360 - பாங்கி நெறியினது அருமைகூறல்
மடங்காப் புகழ்ச்சண்பை வாழும் பிரான்செய்ய வார்சடில
மடங்காக் கலுழி யனையான்கை யஞ்சரு மானைபுலி
முடங்காத் திறலுடைப் பஞ்சா னனமுழு துங்கடந்து
தடங்காத் திடுபுயத் தாயெங்க ளூர்வர றானரிதே. - 206
1361 - தலைமகன் நெறியினது எளிமைகூறல்
நெல்லே விளையும் வயற்சண்பை யார்வரை நீள்புலியோர்
புல்லேவல் யாளி யறுகே புகர்முகப் பூட்கைகொடும்
பல்லே யுடைக்களி றோராம்ப லேயஞ்சிப் பாறுவலோ
வல்லே பொருமுலை யாய்நீந்து வேனெழு வாரியுமே. - 207
1362 - இரவுக்குறிக்குப் பாங்கியுடன்படல்
புரவைக் கருதிப் புகலியின் மேவும் புராணர்வெற்பி
லிரவைக் கருதி யரவைக் கருதி யிரும்புனல்வாழ்
கரவைக் கருதிப் புகல்வதல் லாதெங்கள் காவலநின்
வரவைக் கருதிப் புகல்வாரு முண்டுகொன் மாநிலத்தே. - 208
1363 - பாங்கி அவனாட்டு அணியியல்வினாதல்
பூவேது கொய்வ ரிழையே தணிவர் புரிந்துபண்ணை
காவேது செய்வர் விரையேது பூசுவர் காமருபட்
பாவேது பாடுவர் நாரா யணனோடு பங்கயற்குஞ்
சாவே தினியென நஞ்சமுண் டான்புகழ்ச் சண்பையிலே. - 209
1364 - இரவுக்குறி
தலைமகன் அவள்நாட்டு அணியியல்வினாதல்
நாற்றங் குடிகொள் குழனீ வினாயது நானுணர்ந்தேன்
சீற்றங் குடிகொ டிகிரிப் பிரான்முதற் றேவர்கடங்
கூற்றங் குடிகொள் களத்தா ரொருவெங் குருவரைவா
யேற்றங் குடிகொளு நின்னாட் டணியியல் யாதுரையே. - 210
1365 - தன்னாட்டு அணியியல் பாங்கிசாற்றல்
வரையேறு நீர்ச்சுனை யாடுவர் சூடுவர் வான்கணிப்பூ
விரையேறு சந்தனம் பூசுவர் பேசுவர் மென்குறிஞ்சி
திரையேறு வாரிதி சூழுல காளுஞ்செல் வாதெளிமோ
நரையே றுயர்த்த பிரான்காழி சூழெங்க ணாட்டவரே. - 211
1366 - பாங்கி இறைவிக்கு இறையோன்குறை அறிவுறுத்தல்.
கூம்ப லவாவுகை யாரு ளவாவுமெய்க் கூத்துடையா
னோம்ப லவாவுதென் காழியின் வாயொழி யாவிருளிற்
றேம்ப லவாவிடை யாய்மதி கண்டுசெந் தேனுணச்செவ்
வாம்ப லவாவுங் குவலய மாளு மளியரசே. - 212
1367 - நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்
பொறையா ருமைதென் புகலிப் பிரான்கண் புதைத்தவந்நாட்
குறையா விருளும் பகலே யெனச்செய் குருட்டிருள்வாய்
மறையா வனவெங் கொடுமா வுழல்சிறு வட்டையினம்
மிறையார் வரல்புகல் வார்பாவம் பாவ மிதுகொடிதே. - 213
1368 - பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல்
பல்லா ரவாஞ்சண்பை யாரொரு பாற்பெண் பசுங்குழல்வீழ்
சொல்லா ரளியை நிகரொரு வண்டுதற் சூழ்பெடையைக்
கல்லார வின்மது முன்னூட்டிப் பின்னுணக் கண்டுயிர்த்தார்
வல்லா ரமாமுலை யாய்கொடி யேன்கண்டு வாழ்குவனே. - 214
1369 - நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்
நாமப் புனல்விழு நாள்வீழ்ந் தெடுத்திடு நம்பெரியோர்
காமப் புனல்விழு நாணோ மெடாதது கைதவமாந்
தாமப் புனற்சடை யார்காழி வாணர் சயிலத்திற்பூஞ்
சோமப் புனற்குழ லாய்செய்க நின்னுளஞ் சூழ்துணிபே. - 215
1370 - நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்
மிறையே யிலாயிங்கு நீவந்த வேளைநல் வேளையின்று
முறையே புகலி வடுகப் பிரானடி முன்பணிந்து
பறையேதும் வஞ்சமி லாண்மலர்த் தாள்பின் பணிந்திரந்தே
னறையேய் மனமுகை போதா யுடன்மல ராயதுவே. - 216
1371 - பாங்கி தலைமகனைக் குறியிடைநிறீஇத் தாய் துயிலறிதல்.
பாதங்க மாலயன் காணவொண் ணாத பரனவர்த
மாதங்கம் பூண்டவன் காழியன் னாய்முன்னம் வான்புனந்தப்
பாதங்க வாவி யடிக்கடி மேவிப் படருமொரு
மாதங்கம் வந்தது வோவெழும் வேங்கையின் வாய்முழக்கே. - 217
1372 - இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தல்.
சேலே பொருவிழி யாய்கடற் காழிநஞ் செல்வர்கழற்
காலே கருதுங் கருத்துடை யன்பர் கருதுகலை
போலே வனத்துப் படர்யாறு மிந்தியம் போற்களிறு
மாலே யெனவிரு ளுங்கடந் தாரிங்கு வந்தனரே. - 218
1373 - பாங்கி தலைவியைக் குறியிடத்துக் கொண்டுசேறல்.
விட்கெதி ராக மிளிர்காழி நாதர் வியன்கிரியுன்
கட்கெதி ராகப் பகல்வரு வானிக் கருகிருளிற்
பட்கெதி ராக வருமொழி நீலம் பயிலுமலர்ந்
துட்கெதி ராகவின் னேசென்று பார்த்துண்மை யோருகவே. - 219
1374 - பாங்கி தலைவியைக் குறியிடத்து உய்த்துநீங்கல்.
சிவைதழு வக்குழைந் தார்காழி யோங்கலிற் சேவலைப்பே
டவைதழு வப்பொலி சோலையின் வாயணங் கேமலர்ப்பூங்
குவைதழு வப்பொலி கொம்பரை யொவ்வொர் கொடிதழுவு
மிவைதழு வக்கண் விடுத்துநி லங்குற்றிங் கெய்துவனே. - 220
1375 - பாங்கி தலைவியைக் குறியிடத்து எதிர்ப்படுதல்.
விண்பார் புகழும் புகலிப் பிரான்றன் விளங்கருளா
னண்பார் சகல மொடுகே வலமொழி நல்லவர்போற்
பண்பார் மலர்தல் குவிதலில் லாதபொற் பங்கயமோ
வண்பா ரிரவிதழ் வாயடை யாதநும் மாளிகையே. - 221
1376 - தலைவன் தலைவியைச் சார்தல்பயனாகப் புகழ்தல்.
மிடியாளர் வெம்பசி மேவிய வேலைவிண் ணாரமுதே
கடியாளர் கண்பிழைத் துற்றது போலுமிக் கங்குலினீர்
முடியாளர் சண்பைக் குடியாள ரென்வினை முற்றுமெற்று
மடியாளர் மால்வரைச் சார்நீ ரெனக்கெதி ராயதுவே. - 222
1377 - தலைவி ஆற்றினது அருமைநினைந்திரங்கல்.
மின்னா முழங்கிப் பொழிமா முகிலந்த விண்மறைக்கு
மன்னா முழங்கி வருவெள்ள நீரிந்த மண்மறைக்கும்
பன்னாக வேணிப் பிரான்சண்பை நின்றிப் பசும்பொழிலென்
முன்னாக நீவந்த வாறெந்த வாறிருண் முன்னவனே. - 223
1378 - இரவுக்குறி.
புரவலன் தேற்றல்.
இருள்வா யழுந்தி யெழாதார்க்கு முண்டுகொ லின்பமென்றியா
னருள்வா யழுந்தித்தம் மோடொன் றுறதொன்ற வாள்பரமர்
தெருள்வா யழுந்தினர் சேர்காழி நாதர்செவ் வாய்மலர் நூற்
பொருள்வா யழுந்திய தோரிரு ளோருநர் புன்மையரே. - 224
1379 - புணர்தல்.
முன்றே மலர்க்குழ லூருற் றுறைபொழின் முன்பினுற்றாங்
கொன்றே யெனவுரு வுற்றுரை யாவின்ப முற்றதனா
னன்றேசை வம்புகல் சாலோக மாதியொர் நான்குமுற்றே
மின்றே யெனிலிது தான்காழி நாயக ரின்னருளே. - 225
1380 - புகழ்தல்.
சமைய விசேட நிருவாண மென்றுநஞ் சண்பைப்பிரா
னமைய வுரைத்த துணர்ந்தாய்கொ னீதனி யாகுவதே
சமையநி னங்கை தொடலே விசேடந் தரித்தகலை
யமைய நெகிழ்த்திட லேநிரு வாணமெய் யாமிதுவே. - 226
1381 - தலைவி தலைவனைக் குறிவரல்விலக்கல்.
பாதம் பெரிதடுப் பார்க்கருள் வார்தம் படையெனப்பல்
பூதம் பெரிதுடை யார்காழி யார்சிர பூதரப்பா
லோதம் பெரிதுகொ லென்ன வழுவை யுழுவைகொள்்கா
னேதம் பெரிதண்ண லேயெண்ண லேது மிரவரலே. - 227
1382 - தலைவன் தலைவியை இல்வயின்விடுத்தல்
நீண்டங்கு மாறு படுமா லயன்முனின் றோனவர்மெய்
பூண்டங்கு மாறு புனைந்தோ னவர்ப்புணர் வார்களத்து
நாண்டங்கு மாறுநஞ் சுண்டோன் புகலிநல் லாய்துயர்தா
யாண்டங்கு மாறு கொளத்தேடு நீமு னணைந்தருளே. - 228
1383 - பாங்கி இறைவியையெய்திக் கையுறைகாட்டல்.
சேற்பா லருகு முருகு பெருகு செருகுமலர்
நாற்பான் மலருளு மைம்பாற் கியைமலர் நான்கொணர்ந்தேன்
காற்பால் வளைமுர லுங்காழி நாதன் கயிலைவரை
மேற்பா லமர்தருக் கோற்பாலந் தேனிகர் மெல்லியலே. - 229
1384 - பாங்கி தலைவியை இற்கொண்டேகல்.
பழிப்பாளென் பாட்டு முவந்தவ னண்ட பகிரண்டமுற்
றழிப்பா ளருளுடை யான்காழி மால்வரை யன்னையொண்கண்
விழிப்பாளப் போதெதிர் நில்லோ மெனிற்றன் விழிசிவந்து
தெழிப்பாள் பலவுங் கொழிப்பாள்செல் வாநந் திருமனைக்கே. - 230
1385 - பாங்கி பிற்சென்று தலைமகனை வரவுவிலக்கல்.
பெருமான் கரத்தி லொருமான் றரித்தபெம் மானெருதேழ்
பொருமா னுயர்த்த வருமான் புகலிப் பொருப்பிறைவா
கருமான் கொடுமை செருமான வேடர் கலகமெண்ணா
தொருமான் பொருட்டுக் குருட்டிருள் வாய்வரலொத்ததன்றே. - 231
1386 - தலைமகன் மயங்கல்.
சேவென் றுரைக்கத் திருமாலைச் செய்த சிவபரனே
கோவென் றுரைக்க வெனக்கருள் வோன்வெங் குருவரைவாய்ப்
போவென் றுரைக்கப் பயின்றது போலவிப் பூங்கொடிவாய்
வரவென் றுரைக்கப் பயிலாமை யான்செய்த வல்வினையே. - 232
1387 - தோழி தலைவிதுயர்கிளந்து விடுத்தல்.
பாட்டொலி மல்குநின் னூருற்ற பின்பு பலதழுவு
மாட்டொலி மல்கும் புகலிப் பிரான்பொன் னடிச்சிலம்பு
காட்டொலி கேட்டன்றி வாழாவொர் கோதையிற் காவலநின்
கோட்டொலி கேட்டன்றி வாழா துயிரெங்கள் கோதைக்குமே. - 233
1388 - திருமகட்புணர்ந்தவன் சேறல்.
மருணீக்கி யேயென் குடிமுழு தாளும் வரதர்மனத்
தருணீக்கி யென்று மமர்ந்தறி யார்சண்பை யாரணங்கே
வெருணீக்கி யென்னுயி ரன்னார்தம் மேனி விளக்கங்கொண்டே
யிருணீக்கி யிப்பொழு தேகுவன் யானென் னெயிலினுக்கே. - 234
1389 - இரவுக்குறி இடையீடு.
இறைவிக்கு இகுளை இறைவரவுணர்த்தல்.
கலையே யுணர்வரி யான்காழி சூழுங் கடற்றுறைவா
யலையே யறைந்தது வோபடர் பூந்துகி ரங்கொடியின்
றலையே வளைத்தது வோபுதி தாவனந் தண்மலரே
யிலையே செறிபுன்னை வாயிரு ளேங்குதற் கேதுவென்னே. - 235
1390 - தான்குறிமருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல்.
வெளியே யுரைசெயி னாண்கேடு மாண்கொணம் வேந்தர்செயு
மளியேயென் றோரொலி கேட்டணைந் தேன்மற்றொன்றாகியது
நளியே செறியுநங் கானலின் வாயெனி னானென்செய்கே
னிளியே புரைமொழி யாய்காழி வாண ரிருந்துறைக்கே. - 236
1391 - இரவுக்குறி இடையீடு.
பாங்கி தலைவன் தீங்கெடுத்தியம்பல்.
களியாப் பொலிகை வளைநீ யிழக்கக் கருத்துமுதல்
வெளியாப் பொருளுரைக் கத்தெரி யார்சொல் விழையவென்று
முளியாத் தளிரிளங் கானலின் வாய்நம் முயலுளமுந்
தெளியாக் குறிவிளைத் தார்காழி யார்கடற் சேர்ப்பரின்றே. - 237
1392 - தலைமகன் புலந்துபோதல்.
சேலே பொருகண் பொருட்டுக் குருட்டுத் திருட்டிருட்டுள்
வேலே பொருமுட் கடத்துத் தடத்து விடத்திடத்து
மாலே வியல்சிலைக் காழிப் பிரானருண் மாறுபட்ட
நூலே யெனவலைத் தாயென்னை யென்னை நுவறிநெஞ்சே. - 238
1393 - புலர்ந்தபின் வறுங்களம் தலைவிகண்டிரங்கல்.
தாயோ வருமிடம் வைத்தார் புகலித் தனிமுதல்வர்
வேயோ தருமண மாலைகொண் மாணி விழையவைவேற்
சேயோ வெனவிங்கு மேய புகார்த்துறைச் சேர்ப்பர்தந்தார்
நீயோகொண் டாய்புன்னை யேபெரி தாலுன் னெடுந்தவமே. - 239
1394 - தலைவி பாங்கியோடுரைத்தல்.
வானப் பிறைக்குண மென்றிருந் தேன்சண்பை மன்னர்சடைக்
கானப் பிறைக்குணம் போன்றாலு நன்றுநங் காமர்குழற்
றானப் பிறைக்குணம் போற்றேய்ந்து தேய்ந்துபின் சாயுங்கொலோ
தேனப் பிறைக்குங் குழன்முகி லாயன்பர் செய்யுநட்பே. - 240
1395 - தலைமகளவலம் பாங்கிதணித்தல்.
மதனீள் புயத்தர் குறிபிழை யார்வண் கமலைவிண்வாழ்
சிதனீள்வன் மீகத் துறைவார் சிரபுரச் செல்வரெனப்
பதனீள் கழிப்பெருஞ் சார்பா லடிக்கொளும் பான்மையன்றி
முதனீ டழையவ் விதநீள் கவியை முடிக்கொளுமே. - 241
1396 - இறைவன்மேற் பாங்கி குறிபிழைப்பேற்றல்.
மறியிடத் தேகொள் பெருமான் புகலி வழுத்துமன்பர்
குறியிடத் தேவந் தருளுதல் போலெங்கள் கோதைகுறி
செறியிடத் தேவந் தருளுகி லீரென்செய் தீர்படருங்
கறியிடத் தேசந்தின் பூஞ்சினை தாழ்வரைக் காவலரே. - 242
1397 - இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பேற்றல்.
மழைவர வோர்ந்து மயிலா டுறுங்குன்ற வாணர்மக
ளுழைவர வோர்ந்துகொள் ளாதோடி வாடி யுழன்றவனென்
யிழைவர வோர்ந்துகொண் டோன்சண்பை யேத்தல ரிற்றனது
பிழைவர வோர்ந்துசொல் லாளெனின்யா னெவன் பேசுவதே. - 243
1398 - தலைவி குறிமருண்டமை தோழி தலைவற்குணர்த்தல்.
ஒருகா லெழுந்தெறி யுந்தொறுங் காய்மு னுதிர்வனதேர்ந்
தொருகால்கொ னின்குறி யென்றுபல் காலங்கங் குற்றுழன்றா
ளொருகான் மிசைமுக் கிளையோன் மன்றாட லுவந்தெடுத்த
வொருகாலென் னுட்பதிப் போன்காழி மால்வரை யோரணங்கே. - 244
1399 - தலைமகன் சொல்லியகொடுமை தலைமகட்குச்சொல்லல்.
காட்டொடு வெங்கொடுங் கான்யாறு நீந்தியிக் கார்வரைசேர்ந்
தீட்டொடு நித்திரை யில்லா தழுங்கிய தென்னளவோ
வாட்டொடு மன்றுணிற் பார்காழி நாத ரருளனையாய்
பேட்டொடு புள்ளுமற் றேயென்று காவலர் பேசினரே. - 245
1400 - என்பிழைப்பன்றென்று இறைவிநோதல்.
பகல்வா யுறங்கி யிருள்வாய் விழித்துப் பசுநறுந்தே
னுகல்வாய் குவளை யனையகண் ணாளிவ ளுண்மையெனப்
புகல்வாய் புகலிப் புராணர் பொருப்பிற் புரிந்திருந்து
மிகல்வாய் புயத்தன்பர்க் கென்பய னாய திளங்கொடியே. - 246
1401 - தலைவி விருந்தெனவந்த பெருந்தகைநிலைமைகூறல்.
இரவே குறிபிழைத் தார்பக லேநம்மி லின்னமுதா
தரவே யுளேனென்றுற் றாரன்னை நல்கென்று சாற்றினள்யான்
கரவேயில் சோறு முதன்மூன்று மோர்ந்தனன் காழிப்பிரா
னுரவே யுறுமொழி யன்றென்று நீங்கின ரொண்ணுதலே. - 247
1402 - தாய் துஞ்சாமை.
பழுத்துப் படர்திரை யன்னைதுஞ் சாத படியெவன்மெல்
லெழுத்துப் படர்வல் லினமுலை யாய்சண்பை யெய்தியன்பர்
கொழுத்துப் படர்புரி கூற்றங்கொன் றாரைக் குழீஇப்பணியும்
வழுத்துப் படரொரு நல்லிரு ளோவிந்த வல்லிருளே. - 248
1403 - நாய் துஞ்சாமை.
என்கொடு மாமலந் தீர்ப்பார் புகலி யிகலில்கல்வி
நன்கொடு கேள்வி யிலாருரை போற்றுயி னண்பொழித்துப்
புன்கொடு வானெடும் போந்தின் கருக்குப் புரைபுலைவாய்
வன்கொடு நாய்குரைத் தாற்கொடுங் கூற்றும் வரவஞ்சுமே. - 249
1404 - ஊர் துஞ்சாமை.
மலைவிதி சென்னிகைக் கொண்டார்மெய் யன்பின் வழிகழியா
நிலைவிதி யேத்தும் பிரம புரேசர் நிறைவிழவோ
கலைவிதி யாமவர் கூத்தோ நகர்கண் படாததற்கென்
றலைவிதி யேயொரு பாழ்ங்கூத் துருக்கொடு சார்ந்ததுவே. - 250
1405 - காவலர் கடுகல்.
சேறந்த கண்ணி யொருபாகர் காழித் திருத்தளியு
ளேறந்த வின்பறைக் கீயா தஞர்தரு மிப்பறைக்குத்
தோறந்த வேறும்வன் கோறந்த தாருவுந் துஞ்சலொழி
மாறந்த காவலர் வன்கையும் வாழிய வாழியவே. - 251
1406 - நிலவு வெளிப்படுதல்.
மதியே யுணர்நங் குலக்கோதை கேள்வற்கு வாஞ்சைநற்றாய்
துதியேய் மலர்க்கை யவள்கோன் முகக்கண் டொடலரிதோ
நிதியே யடக்க மமரரு ளுய்க்கு நிறைபுகலிப்
பதியேய் பவர்மதி போலடங் காயெனிற் பண்பல்லவே. - 252
1407 - கூகை குழறல்.
எல்லா வுயிர்க்கு மிருடீர்த் திடுமெம் மிறைவலக்கண்
பொல்லா நினக்கிரு ளுண்டாக்கு மானின் புரையுணர்ந்தே
கல்லா தவரணு காக்காழி யன்பரெங் கண்ணெதிர்நா
ளொல்லா தவரில்வெங் கூகாய் குழறுத லொத்ததன்றே. - 253
1408 - கோழிகுரல் காட்டுதல்.
கோழிக்கு வேளுட னீறாக நோக்கு குழகர்கொம்பில்
கோழிக்கு நாயகர் மேவிய வீழிக்குங் கூடலுக்குங்
கோழிக்கு மன்புடை யார்வரும் போது குரலெழுப்புங்
கோழிக்கு நான்செய்த தீங்கெவ னோசொல் கொடியிடையே. - 254
1409 - வரைதல் வேட்கை.
பாங்கி தலைவியைப் பருவரல்வினாதல்.
சடையென வேமின் றரித்தவர் காழித் தடத்திலன்னப்
பெடையென வேநடப் பாயன்ப ரென்று பெறாமையினோ
வுடையென வேயனை மார்சொற் பனிவந் துலாயதுவோ
விடையென வேமுகத் தாமரை வாடுதற் கேதுவென்னே. - 255
1410 - அருமறைசெவிலி அறிந்தமைகூறல்.
கொண்டலம் பான லெனுங்களத் தார்வெங் குருவரைவாய்
விண்டலம் பார்புகழ் வேந்தரை யெண்ணி விழிபனித்தேன்
கண்டலம் பாவலிற் கைத்தாயென் னென்னக் கடற்றிரையென்
வண்டலம் பாவைகொண் டோடிற்றென் றோதி மறைத்தனனே. - 256
1411 - தலைமகன்வருந்தொழிற்கு அருமைசாற்றல்.
கூடிய பாசமொ ரைந்தொழிந் தேவெங் குருப்பரன்மன்
றாடிய பாத மடைவது போனில வாய்நகர்நாய்
நீடிய காவலர் வெங்காவ லைந்த னிகழ்வொழிந்தே
நாடிய வன்பரிங் கெய்தலுண் டாகுங்கொ னன்னுதலே. - 257
1412 - தலைவி தலைமகனூர்க்குச்செல வொருப்படுதல்.
தாரூர் தடம்புயத் தோணிப் பிரானரு டாங்கியன்பர்
சேரூ ரடையத் தடையெவ னோமுன் சிறந்தவரைப்
பாரூர் புகழ்மிகு நும்மூ ரெதுவெனப் பன்னிரண்டு
பேரூரென் றாரெங்கு நாந்தேடிச் செல்வது பெண்ணணங்கே. - 258
1413 - பாங்கி இறைவனைப் பழித்தல்.
நன்கண்மை யாரணங் கேநம்மை யாளு நலத்தர்மலர்ப்
புன்கண்மை யாளர் திருத்தோணி யாரடி போற்றலரி
னின்கண்மை யாத்த லுடையாரின் மேவிப்பி னீங்குதலால்
வன்கண்மை யாருண்முற் றாம்பூலம் வாங்குநர் மற்றவரே. - 259
1414 - தலைமகள் இயற்பட மொழிதல்.
வளக்குங் குமமுலை யாயுயி ரோம்பு மகிழ்நர்நம்பாற்
கிளக்குங் கருணை யிலரா குதனங் கெடுவினைவா
ளைக்குங் கனக மதிற்காழி நாத ரருளினெல்லாம்
விளக்குங் கதிரிரு ளாகுத லோர்தி விழிக்குற்றமே. - 260
1415 - கனவுநலிபுரைத்தல்.
பூவலர் சோலைப் புகலிப் பிரானருள் போற்றியமுந்
நாவல ராதியர் நாமாயி னானன வாங்கனவு
மாவலர் கோதைநல் லாய்நென்ன லாரிருள் வந்துவந்து
காவலர் மார்புதந் தார்விழித் தேனொன்றுங் கண்டிலனே. - 261
1416 - கவினழிபுரைத்தல்.
அன்பே யவாவு புகலிப் பிராற்கன்பு ளாரையுன்னி
யென்பே வெளிக்கொண் டிடமேனி வாடி யெழிலிழந்து
வன்பே யுருவமுற் றேனப் பிரானை வழுத்தியொரு
மின்பே யுருவமுற் றாளென்ப ராலென் வியப்பதிலே. - 262
1417 - தலைமகள் தன்றுயர் தலைவற்கு உணர்த்தல்வேண்டல்.
சேவாய்நஞ் சண்பைப் பிரானைச் சுமக்குந் திறத்தனுமோ
ரேவாய் விழியை வருத்தி யுருப்பத் தெடுத்துழன்ற
மாவாய் கதையுடன் யான்படும் பாடும் வகுத்துரைத்துப்
பாவாய் வருந ரெவரேநங் காவலர் பாலடைந்தே. - 263
1418 - நின்குறை நீயே சென்றுரையென்றல்.
எப்போது நின்னு ளமர்வார்க்கொன் றோதவங் கெய்துவர்யார்
செப்போது கொங்கைத் திருவனை யாய்திரு மாலொடயன்
முப்போது மேத்தும் புகலிப் பிரானெம் முதலிளஞ்சே
யொப்போது னன்பர்க்கு நீயே யுரைநின் னுளத்ததுவே. - 264
1419 - அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி.
நல்லா ரொருவர்கற் றூற்றவு மாற்றிய நம்புகலி
வல்லா ரொருவ ரலர்தூற்ற வாற்றிலர் மற்றவரும்
பல்லார் களுநனி தூற்றலர் யானெப் படிபொறுப்பேன்
வில்லார் மதிநுத லாய்நினை தோறெழும் வெய்துயிர்ப்பே. - 265
1420 - ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி.
தோளா மணிசண்பை வாழ்வடு கேசன் றுணையடிக்கே
யாளா னவர்நம் புடைசார்ந் தியற்று மருண்மறந்து
வாளா விருப்பது கண்டுங் கொடிய வழியெனையுங்
கேளா தெழுந்தவர் பாற்செல்லு மாலென் கிளர்மனமே. - 266
1421 - காமமிக்க கழிபடர்கிளவி.
நீரே நிலாமன மேபிறி தாகு நிலாமனமே
காரே கரும்பனை யேகுயில் கூவுங் கரும்பனையே
பாரே பரவலை யேமய றீயப் பரவலையே
வாரேகொள் வாரல ரேகாழி யார்க்கன்பர் வாரலரே. - 267
1422 - தன்னுட் கையாறெய்திடுகிளவி.
பன்னாக வேணிப் பிரான்காழி சூழும் பனித்துறைவாய்
நின்னாக முற்றும் பசந்தா யசைந்துகண் ணீருகுப்பாய்
முன்னாக மேவி யகரும் பனையலர் மூழ்கிநிற்பாய்
புன்னாக மேநினை நீத்தகன் றாருமெப் புண்ணியரே. - 268
1423 - தலைமகள் நெறிவிலக்குவித்தல்.
மன்னுங் கொடுமலர் தீர்ப்பார் புகலி மறந்துமற்றொன்
றுன்னுங் கொடுவினை யாரினங் காவலர்க் கொண்டொடியே
பன்னுங் கொடுவரி யாளி யரிகரி பம்பியிரு
டுன்னுங் கொடுநெறி வாரற்க நீயென்று சொல்லுகவே. - 269
1424 - குறிவிலக்குவித்தல்.
பொறிவா யரவரைப் புண்ணியன் காழிப் பொருப்பணங்கே
நெறிவா யெமருட் சிலர்குறிப் பாலொன்ற னீருணர்வார்
கறிவாய் நறுஞ்சந் தனச்சாரல் வேரல் கலந்தபொழிற்
குறிவாய் வருத றகாதென்று கூறுநங் கொற்றவர்க்கே. - 270
1425 - வெறிவிலக்குவித்தல்
பாடுதற் கெண்ணிய யான்மல மாதி பறித்தருளிற்
கூடுதற் கெண்ணிய கோன்சண்பை யேத்துநர் கொள்ளுமின்ப
நீடுதற் கெண்ணி யவர்தரு நோய்நினை யாதுவெறி
யாடுதற் கெண்ணிய வன்னைக்கொன் றோதி யகற்றணங்கே. - 271
1426 - பிறர் விலக்குவித்தல்
புரியொன்று கூழைநல் லாயன்பர் தம்மணம் போற்றியயான்
விரியொன்று மற்றையர் தம்மணம் போற்றும் விதியுமுண்டோ
வரியொன்று மேனி யரன்காழி வெற்பி லரியையவாய்
நரியொன்று பெற்றொழி வாருமுண் டோவிந்த நானிலத்தே. - 272
1427 - குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்
தீங்கோய் புகலிச் சிவனா ருமையொடு சேர்ந்துறையு
மீங்கோய் மலையன் றிருஞ்சுனை வீழ வெடுத்தளித்தார்
தாங்கோய் வருநசை யோடுறு போது தவாநமரென்
பாங்கோய் வரைவெதிர் கொண்டிடு மாறு பகருகவே. - 273
1428 - வரைவுகடாதல்
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்
வலநீர் விறற்கழ லோயன்னை யென்னைநம் மாதர்முக
நலநீர் மெலிவுற்ற தென்னென நென்ன னவிற்றியசிற்
றிலநீர் பரன்சண்பை சூழ்கடல் வாய்ப்புக்க தென்றுவிழிக்
குலநீர் கவிழ்ப்பமெய் வாடின ளாலென்று கூறினனே. - 274
1429 - அலரறிவுறுத்தல்
நன்மாலை கொன்றையுந் தும்பையு மாக்கிய நம்பரென்பு
வன்மாலை யும்புனை வார்காழி வாணர் வரையிறைவா
தன்மாலை யன்றி யொருமத வேள்பல் சரந்தொடுக்க
நின்மாலை யுற்றவட் கூரலர் சூழ்ந்து நெருங்கியதே. - 275
1430 - தாயறிவுணர்த்தல்
நன்கண்டு மாறடி யேற்கருள் வார்நறு நாவன்மலர்ப்
புன்கண்டு நீழலி னார்சண்பை நாட்டுப் புனிதவன்னை
மின்கண்டு தாழு மருங்குனல் லாண்முலை மேற்பரந்த
பொன்கண்டு நெட்டுயிர்த் தாளிளை யாட்கெங்ஙன் புக்கதென்றே. - 276
1431 - வெறியச்சுறுத்தல்.
அசத்துக் கிரங்குகி லார்காழி வாழு மவரெனவோ
ரசத்துக் கிரங்குகி லாளாயி னாளெங்க ளன்னையுநின்
வசத்துப் படுமொரு மாங்குயில் சோர்ந்து மயக்கமுற்ற
வசத்துப் பதைத்தல்கண் டாள்வெறி யாடன் மதித்தையனே. - 277
1432 - பிறர் வரைவுணர்த்தல்.
பண்ணவ ரேத்து குருலிங்க சங்கமம் பற்றுபதிக்
கண்ணவர் காழிக் கழுக்குன்ற மால்வரைக் காவலமுன்
விண்ணவ ரத்திரு மாதையிச் சித்த விதம்பொருவ
மண்ணவ ரித்திரு மாதையிச் சித்து மயங்குவரே. - 278
1433 - வரைவெதிர்வுணர்த்தல்.
முருகோடு முன்ன முனிந்தேற் றமர்த்தவெம் மொய்குலத்தோர்
திருகோடு நிற்பது தீர்ந்துநன் கேற்றுச் சிறப்பளிப்பா
ரிருகோடு கோட்டுக் களிற்றாய் வரைவென் றெழுதரினீ
குருகோடு வண்டுறங் குந்தடங் காழியெங் கோன்வரைக்கே. - 279
143 - வரையுநாளுணர்த்தல்.
ஆருற்ற வேணிக் கமலர்பொற் றோணி யமலர்வெற்பிற்
சீருற்ற கோதைக் குழல்வேட்கு நாளிது தேர்ந்துகொண்மோ
காருற்ற சோலைக் கணிபூ மலர்ந்து கலைமதியொன்
றூருற்ற போதல்ல வோமணங் காட்டுமெம் மூரண்ணலே. - 280
1435 - தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.
விழியேறு நெற்றி யுடையார் கொடியில்வெள் ளேறமைத்தார்
மொழியேறு சீர்கெழு சண்பைநண் பாமுழு முத்தமுலை
யுழியேறு பீருங் கழலும் வளையு முணர்ந்துனக்குப்
பழியேறு மென்று மறைத்தா ளெனையும் பசுங்கொடியே. - 281
1436 - குறிபெயர்த்திடுதல்.
பொருவா ரிலாத புயத்தார் புகலிப் புராணர்வெற்பின்
மருவார் தொழுங்கழ லாயிப் பொழிலமர் மாதவிப்பா
லொருவார் பலரும் வருவா ரணிமையி னோவிமணிக்
குருவார் நகையொடு செல்லுதி சேய்மைக் குறிகுறித்தே. - 282
1437 - பகல்வருவானை இரவுவருகென்றல்.
கதிவாய் விருப்பங் கழலா தெனக்குங் கடைக்கணித்த
நதிவாய் சடையர் கொதிவாய் மழுவர் நயந்தமரு
நிதிவாய் புகலிப் பதிவாய் மடந்தை நிகரின்முக
மதிவா யமுது பகல்வா யடைவதெவ் வாறண்ணலே. - 283
1438 - இரவுவருவானைப் பகல்வருகென்றல்.
உகல்வாய் வினையுடை யேன்யா னெனவெனக் கோங்கருள்செய்
மிகல்வாய் புகலி நகுவடு கேசன் வியன்சிலம்பி
னிகல்வாய் களிற்றண்ண லேமாதர் செவ்விள நீரிரண்டும்
பகல்வா யடையினன் றோநல மாய பயன்றருமே. - 284
1439 - பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.
புகலும் வரவுஞ் செலவுமில் வேணு புரேசரன்பு
நகலும் விரவுநர் பாலுறு போழ்து நவிலினொன்றோ
விகலு மரவுந் தொழுமல்கு லாளின் பினிதடையப்
பகலு மிரவும் பயின்றே வருக பகட்டண்ணலே. - 285
1440 - பகலினுமிரவினும் அகலிவணென்றல்.
ஏதிலர் வாயல ராம்பக லென்பணி யேற்றருளுஞ்
சூதிலர் கண்ணல ராமிரு ணீவரிற் றோன்றுமிரு
போதில ரென்னும் புகழ்மேவண் ணாலற் புதர்வலப்பான்
மாதிலர் பிட்டுக்கு மண்சுமந் தார்சண்பை மால்வரைக்கே. - 286
1441 - உரவோனாடுமூருங்குலனுமரபும் புகழும்வாய்மையுங்கூறல்.
பொன்னாடு போற்றும் புகலிப் புராணர் புகழ்ப்பொருப்பிற்
கொன்னாடு வேல்வலங் கொண்டுதண் டாவிறல் கொள்பவநி
னன்னாடு மூருங் குலனு மரபு நகுபுகழு
மன்னாடு மெய்யு மணஞ்செயு மாதை மணஞ்செயினே. - 287
1442 - ஆறுபார்த்துற்ற அச்சங்கூறல்.
வேட்டுக் குளிர்நகை யாளின்ப நீவரல் வேலவவென்
பாட்டுக் கருளும் பரன்காழி நாதன் பசும்பொன்மன்ற
மாட்டுப் புலியர வோவழி நேர்புலி வல்லரவு
காட்டுக் களிறுந மாவத்துக் காத்த களிறலவே. - 288
1443 - ஆற்றாத்தன்மை ஆற்றக்கூறல்.
பச்சை மயிலொரு பாலுடை யாயெனும் பையரவக்
கச்சை யரைக்கசைத் தாய்தென்றல் சீறுங் கலந்தெனுமெ
னிச்சை முழுதுமென் னன்பரெண்ணாதமை யென்னெனும்வண்
கொச்சையுன் னாரி னழும்விழு மோரெங் குலக்கொழுந்தே. - 289
1444 - காவன்மிகவுரைத்தல்.
நீங்கும் பொழுதுகொன் னாகாது தன்னை நினைப்பித்தென்னை
வாங்கும் பொழுதுட் குறித்த பிரான்சண்பை மால்வரைவா
யோங்கும் பொழுது வறிதாக்கு வாய்கை யுறவணைத்துத்
தூங்கும் பொழுதும் விடாரன்னை மாரொரு தோகையையே. - 290
1445 - காமமிகவுரைத்தல்.
கொட்கும் புலனுடை யேனஞர் தீர்க்குங் குழகர்சண்பை
நட்கும் பயனடை யார்போற் கலங்குவ ணல்லமுது
முட்கும் வருக்கைச் சிறுகோட்டுத் தூங்கு மொருகனிபோற்
பெட்கு முயிர்சிறி தாயினுங் காமம் பெரிதையனே. - 291
1446 - கனவுநலிபுரைத்தல்.
நனவே யெனக்கருள் வார்காழி வாணர் நகுவரைவாய்ப்
புனவே யடுவளைத் தோளா ளிரவிற் புகுந்துயிலிற்
கனவே சிறந்ததென் பாளல ரோவலிற் காணுமதை
யுனவே கொடியதென் பாளிடை நீங்கலி னுத்தமனே. - 292
1447 - கவினழிபுரைத்தல்.
வருமந்த மாருத முன்றி லுலாஞ்சண்பை வாணரெனைப்
பொருமந்த காரம் புடைப்பா ரருளுரு புண்ணியர்பாற்
றருமந்த மாதவ மெய்தார் படைத்த தனம்பொருவ
வருமந்த மேனி யழகண்ண லேகொள்ளை யாயினதே. - 293
1448 - ஒருவழித்தணத்தல்.
தன்பதிக்ககற்சி தலைவன்சாற்றல்.
கரும்பே கமுகு கமுகேதென் னென்னுங் கழனியெம்மூ
ரரும்பே பொருமுலை யாய்குறை யொன்றுண் டதுமுடிப்பான்
பொரும்பே ரடல்விடை யான்காழி யூர்வழி போயுங்களூர்
விரும்பேர் மரையிதழ் மூடித் திறக்குமுன் மேவுவனே. - 294
1449 - மென்சொற்பாங்கி விலக்கல்.
இடைக்குறை யுள்ள விவள்குறை யன்றிமற் றேதுகுறை
விடைக்குறை கொட்டில்வை குந்தஞ்செய் தோனிண்டை மேவியபா
சடைக்குறை முத்தி னழகுசெய் சண்பை யடைவழகே
படைக்குறை யொன்னலர் மார்பாக் கியவிறற் பார்த்திபனே. - 295
1450 - தலைவன் நீங்கல்வேண்டல்.
முடியாரை வேய்ந்த பெருமான் புகலி முழுமுதல்வ
னடியாரை நீங்கி யிருக்கினுங் கொங்கை யடர்மருங்குற்
றுடியாரை நீங்கி யிருக்ககி லேனின்னுஞ் சொல்லுவதென்
கொடியாரை சூழெயி லின்றேசென் றிங்குக் குறுகுவனே. - 296
1451 - தலைவனைப் பாங்கிவிடுத்தல்.
என்றார் கொடிமதிற் காழிப் பிரானையெண் ணாதவரின்
மென்றார் மலர்க்குழல் சோர்வது யான்சொல்ல வேண்டுங்கொலோ
குன்றார் முலைநின் கொழுநர்தம் மூர்க்கொரு கோள்குறித்துச்
சென்றா ரெனுமுனம் வந்தா ரெனவந்து சேரண்ணலே. - 297
1452 - பாங்கி தலைவிக்கு அவன்செலவுணர்த்தல்.
தொடையேறி வண்டு துயில்குழ லாய்துய ராதிதுகேள்
விடையேறி காரிய மொன்றறுப் பான்சங்கம் வெண்முத்தநீர்
மடையேறி யீனும் புகலிசென் றார்குழை வாயுங்கள்கட்
கடையேறி மீளுமுன் னேவரு வேனென்று காவலரே. - 298
1453 - தலைவி நெஞ்சொடுபுலத்தல்.
நன்றோதி நூல்பல வோர்ந்தார்க்கு மீது நலந்தருமே
துன்றோதி பங்குடை யார்சண்பை நாயகர் தோளமர்வி
லொன்றோதி யென்பய னாமெனுந் தோள ருனைப்பிரியே
னென்றோதி முன்பிரிந் தார்தெளிந் தாரிடத் தென்பிழையே. - 299
1454 - சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி.
விரைமே விரவல ரேயன்னை மாரும் விரவலரே
கரைசூழ் கருங்கழி யேயூ ரலர்ப கருங்கழியே
திரைசால் சிறைக்குரு கேயெளி யேன்வெஞ் சிறைக்குருகே
வரைதீர்வெள் வார்க்குரை யேசண்பை யாரையுள் வார்க்குரையே. - 300
1455 - தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்.
பாசங் கொடுவருந் தாதென்னை யாளும் பரன்புகலி
நேசங் கொடுதுதிப் பார்நகர் நின்று நிகழ்குடிஞை
யோசங் கொடுமுத்து முந்துதல் பாரவ ரூரின்மௌவல்
வாசங் கொடுவரல் பார்மாத ராய்மந்த மாருதமே. - 301
1456 - நெஞ்சுநினைந்திரங்கல்.
கஞ்சந் தொடர்ந்து வருங்கழ லார்பின் கனிந்துதொடர்
நெஞ்சந் தொடர்ந்துடன் சென்றது வோவிடை நின்றதுவோ
வஞ்சந் தொடர்ந்துபின் மீண்டது வோவன்றி மாண்டதுவோ
நஞ்சந் தொடர்ந்து பொலிகளத் தார்சண்பை நாட்டகத்தே. - 302
1457 - நெஞ்சொடுகிளத்தல்
மஞ்சே பொருகளத் தார்காழி வாணர் வரையிலெனை
நஞ்சே யெனவெறுத் தஞ்சேலென் னார்வழி நண்ணியவென்
னெஞ்சே யவரென்சொன் னாரது கேட்டபி னீயென்சொனாய்
வஞ்சே யுளார்கொ லிலார்கொலெற் கோது மறையொழித்தே. - 303
1458 - ஒருவழித்தணத்தல்
கடலொடு புலம்பல்.
அருந்திய நஞ்சமுன் காழிப் பிரானுக் கருளியநீ
வருந்திய வெற்கெது செய்யாயென் கேள்வர்வை வேல்வலத்திற்
பொருந்திய னோக்கி முருகனென் றெண்ணினை போலுமவர்
திருந்திய தேர்செல் வழியழித் தேறுந் திரைக்கடலே. - 304
1459 - ஆற்றொடு புலம்பல்.
மூவல்செய் வார்புனல் சூழுமை யாறு முதுகுன்றம்வெண்
ணாவல்செய் வார்நிழல் மேய பிரான்சண்பை நாட்டினின்று
மோவல்செய் வார்நுரைத் தூசான் மறைந்திங் கொழுகுவையெற்
காவல்செய் வார்தொழில் கூறற்கு நாணிக்கொல் காவிரியே. - 305
1460 - புள்ளொடு புலம்பல்.
பிரியா ரெவர்கொல் கொழுநரை யோர்வரைப் பெண்ணன்றிமாற்
கரியார் புகலிநல் லாரெனை நோக்கி யசிப்பரென்னே
வரியார் சிறையளி காளன்றில் காண்மகி ழோதிமங்கா
ளுரியார் பிரிவரி யாராக வாற்று முறுதவமே. - 306
1461 - கையறுகிளவி
மடலே பொலிகொன்றை மாலிகை யான்வழுத் தேனையுங்கை
விடலே துணிபெனக் கொள்ளாத வன்சண்பை மெய்ந்நகர்சூழ்
கடலே கழிக்கரை யேகைதை யேகுளிர் கானன்மணற்
றிடலே தலைவர்சொல் சூளுற வாலுயிர் தேம்புவனே. - 307
1462 - கூடலிழைத்தல்
விழிக்குந் திருநுத லான்கொடி யேன்வெவ் வினையனைத்து
மழிக்குந் திறலுடை யான்காழி சூழ்துறை யாய்சுவைத்தேன்
மொழிக்குங் குமமுலை யாள்விரல் கன்றவெண் முத்தமணற்
சுழிக்குங் கழிக்கு மொழிக்குங்கண் ணீரென்று துன்புறுமே. - 308
1463 - சூளுறவு பொய்யென்றல்
மெய்த்தா ரிதழியர் வேணுபு ரேசர் விரிதுறையன்
புய்த்தார்வெள் ளோதிமஞ் சான்றாக முன்ன முரைத்திடுசூள்
பொய்த்தா ரவர்வருந் தாதிருந் தாரது போற்றிமெய்யென்
றெய்த்தார் வருந்துவ ரென்றானன் றான்முன் னெழுத்தியலே. - 309
1464 - மடமைகூறல்.
பெருகுறு நீர்வென் மதிற்காழி யாருண் பெருவிடம்போற்
கருகுறு போதடி சூழ்பாம்பு மாவுங் கடந்தளியே
னருகுறு வார்பொருட் டிம்மெலி வோவின்னும் யானடைவேன்
முருகுறு கூழைநல் லாய்மட வோரிது முன்னுவரே. - 310
1465 - தன்னுட்கூறல்
புரிதரு செஞ்சடை யார்காழி நாதர் பொருப்பர்தந்த
விரிதரு வெப்ப மவரூர் வழிவரு மென்புனல்யாற்
றிரிதரு மாறு படிவோமவ் வீர்ம்புன லீர்த்துவரு
மரிதரு பைந்தளிர் போர்ப்போநம் மேனி யடங்கலுமே. - 311
1466 - பாங்கி தலைமகட்குத் தலைவன்வந்தமையுணர்த்தல்
கண்பொழி நீருந் தனிமையும் பீருங் கழல்வளையும்
பண்பொழி வாய்மயி லேயினி யேதுநின் பாலுணர்மோ
விண்பொழி நீர்வைத்த செஞ்சடை யார்விளங் கும்புகலி
நண்பொழி யார்மணிப் பொற்றே ரொடுமிங்கு நண்ணினரே. - 312
1467 - வந்தோன்றன்னோடு பாங்கி நொந்துவினாதல்
நனவி னுணர்ந்திலி ராயினு மெங்க ணறுங்கொடியைக்
கனவி னுணர்ந்திருப் பீருண்மை யேயெனிற் கண்டனிரோ
சினவி னுதன்முலைப் பீருங்கண் ணீருமுட் சேருந்துன்பு
மனவி னிடையர் கழுமலத் தார்வரை மன்னவரே. - 313
1468 - தலைவன் பாங்கியொடு நொந்துவினாதல்
வீழ்வது கண்முத்த மோமுலை மேலணி வெண்முத்தமோ
சூழ்வது பாயல ரோவயல் வாய்நடுத் தோயலரோ
போழ்வது மாலைகொல் வேலைகொ லோது புலையடியேன்
வாழ்வது செய்த பிரான்காழி நாதன் வரையணங்கே. - 314
1469 - பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமைகூறல்
செயிர்முடி யாவிதந் தீயோர்க் கருள்சண்பைச் செல்வர்துவள்
பயிர்முடி யாவிதம் பெய்மழை போலப் பரவருளான்
மயிர்முடி யாவிதம் பொன்போர்த் தெழுகொங்கை மங்கைக்கியா
னுயிர்முடி யாவிதங் காத்தேன் வருத்தமுற் றுத்தமனே. - 315
1470 - வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்
என்பொருட் பிரிவுணர்த்து ஏந்திழைக்கென்றல்
ஒருவா வளச்சண்பை யோவார் கவுணியர்க் கோங்குபைம்பொன்
றிடுவா வடுதுறை யிற்கொடுத் தார்தந் திருவருளான்
மருவா வருஞ்சுரம் போய்வரு வேனுங்கண் மங்கைகொங்கைப்
பொருவா விலைகொண்டு மாதே புகறியப் பூங்கொடிக்கே. - 316
1471 - பாங்கி நின்பொருட்பிரிவுரை நீயவட்கென்றல்
தாயே யனைய கருணைப் பிரான்றிருச் சண்பைநகர்
போயே வருவல் புகறியென் பாய்புன்மை பூண்டுழலும்
பேயே யெனினும் பிரிவுரை யோதவுட் பேணுங்கொலோ
நீயே யுரைநின் பிரிவெங்கள் வாணுத னேரிழைக்கே. - 317
1472 - நீடேனென்றவன் நீங்கல்
தொடைநிலை வேணிப் பிரான்கூடல் வாய்ச்சொன்முற் றூக்குறுநூ
லிடைநிலை யெய்தி னுடனெய்த லாமற் றிருநிலையும்
படைநிலை நோக்கி கழுத்திற்பொன் னேறப் பசும்பொனுங்கள்
கடைநிலை யிற்குவிப் பான்சென்று மீளுவல் காழிமட்டே. - 318
1473 - பாங்கி தலைமகட்குத் தலைவன்செலவுணர்த்தல்
வலம்புரி நேர்நின் கழுத்திற்பொன் னேற்றியுன் வண்ணமுலைக்
குலம்புரி யும்பொ னிறக்கிடு பைம்பொன் கொணர்வதற்கே
யுலம்புரி தோளன்ப ரின்றுசென் றார்மன மொன்றுநன்று
னலம்புரி காவற் கமைத்தரன் காழி நறுநுதலே. - 319
1474 - தலைமகளிரங்கல்
சீரார் கவுணியர் போற்பாலை நெய்தல் செயவுமென்போ
ரேரார் மயில்செய வுங்கற் றுளார்கொ லிறைபுகலித்
தாரார் புயத்தர் தமையு மெமையுந் தழுஉந்துயர
மோரார் பொருள்குறித் தேசுரம் போயின தொத்ததன்றே. - 320
1475 - பாங்கி கொடுஞ்சொற்சொல்லல்
கயலார் புனற்பல் வயலார்தென் காழிக் கடவுள்வெற்பில்
வியலார் மயிலனை யாயார் பொருட்டன்பர் மேவியதோ
ரியலார் மழைக்க ணெனன்மெய்ம்மை யாக விரங்குவையே
லயலா ரறியவுங் கூடுமன் றோநின் னகத்ததுவே. - 321
1476 - தலைவி கொடுஞ்சொற்சொல்லல்
அண்ணாவென் பார்துயர் நண்ணா வகையரு ளண்ணல்வரைப்
பெண்ணா தரஞ்செய் பிராற்பணி யாரிற் பிறர்துயர
மெண்ணா மனமு மனமாகண் ணோட்ட மிலாதகண்ணுங்
கண்ணா வவர்பிறப் பும்பிறப் பாசண்பைக் காரிகையே. - 322
1477 - வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்
காழியம் மானைக் கழுக்குன்றிற் போற்றுங் கழுகுமன்று
வீழியொண் வாய்மயில் வீண்கழு கொன்றுதன் மென்பெடைகற்
பூழிவெங் கான்வெயில் சாரா திறகுட் புகப்புரிதல்
வாழிகண் ணுற்றுமப் பாலே குவார்கொனம் மன்னவரே. - 323
1478 - பருவங்கண்டு பெருமகள்புலம்பல்
கதிக்கும் புகலிப் பிரான்றிரு நீற்றிலிக் கானகத்துத்
திதிக்குந் தளவம் விளர்த்தன கொன்றை சிவந்தனமெய்
பதிக்கு மவன்மெய் வலத்தி னிடத்திற் பசந்தனதோண்
மதிக்குங் களத்திற் கறுத்தன காரன்பர் வந்திலரே. - 324
1479 - இகுளை வம்பென்றல்
மருவ மருவ வினிக்கும் பிரான்சண்பை வாணர்வெம்மை
யொருவ வருவி மழையெனச் செய்யுளொன் றோர்புலவன்
றிருவ முறச்செயப் பெய்ததென் றோதுந் திசைமுற்றுங்கார்ப்
பருவ மிதுவெனல் வம்பேநம் பேர்கொள் பனிமொழியே. - 325
1480 - இறைமகள் மறுத்தல்
நனையீன் றனபசுங் கொன்றைக டோன்றி நகமலரு
முனையீன்ற முத்தலை வேலண்ணல் காழி முதுகுன்றின்மின்
றனையீன்ற கார்ப்பரு வம்பொய்ம்மை யாலெனச் சாற்றுநின்சொ
லெனையீன்ற தாய்வந்தி யென்னுஞ்சொற் போலு மிளங்கொடியே. - 326
1481 - அவர்தூதாகிவந்தடைந்தது இப்பொழுதெனத் துணைவிகூறல்
நீர்வந்த தோணி புரத்தீசர் வெற்பி னிகழ்பருவக்
கார்வந்த தென்று கருதிநை யேனங் கடைமறைக்கும்
பார்வந்த பொன்னொடு மார்வந் தவாதன்பர் பன்மணிப்பொற்
றேர்வந்த தோதநம் மூர்வந்த தாவித் திருமுகிலே. - 327
1482 - தலைமகள் ஆற்றல்
பழியே யறநல் வழியே யுலகம் பரிப்பவர்சொல்
விழியே யலர்செயு மாறொழுங் காழி விமலர்செவ்வாய்
மொழியே யெனத்துணிந் தேனினி முன்னலென் முன்னுகடற்
குழியேய் தரக்கொள் புனல்மான் குளப்படி கொள் புனலே. - 328
1483 - அவன் அவட்புலம்பல்
கார்கொடி தென்னுங்கொல் கூடலு றாது கவிழ்க்கும்விழி
நீர்கொடி தென்னுங்கொ லென்னைச் சுமந்து நிகழ்தருமித்
தேர்கொடி தென்னுங்கொ லூர்கொடி தென்னுங்கொ றீரரிய
நார்கொடி தென்னுங்கொ னம்மான் புகலி நறுநுதலே. - 329
1484 - தலைமகன் பாகனொடுசொல்லல்
ஆரோடு கொன்றையுந் தும்பையுஞ் சூடு மழகரம
ரேரோடு வாழ்வயற் காழியில் வாழி யியல்வலவா
பீரோடு சிந்துகண் ணீரோடு வாடுமொரு பெண்முனமிக்
காரோடு முன்னநந் தேரோடு மாறு கருதுகவே. - 330
1485 - தலைமகன் மேகத்தோடு சொல்லல்
தெண்ணீர் பருகி யெழுமுகில் காணந் திருந்திழைமு
னண்ணீர் நணுகி னிறையவர் காழிநண் ணாரிலிரு
கண்ணீர் பொழியுமவ் வெந்நீ ரமலைகைந் நீர்நிகர
மண்ணீ ருலகெனப் போர்க்குமொண் டேரு மறிதருமே. - 331
1486 - பாங்கிவலம்புரிகேட்டு அவன்வரவறிவுறுத்தல்
வலம்புரி யேற்கு நலம்புரி வார்வண் டுழாயணிகா
வலம்புரி யேமெய்க் கிடுவடு கேசர் வரைநினக்க
வலம்புரி யேதமொன் றுண்டுகொ லோவன்பர் வந்தனர்வெள்
வலம்புரி யேயினி தார்க்கின்ற தோர்கொச்சை மாமயிலே. - 332
1487 - வலம்புரி கிழத்தி வாழ்த்தல்
வள்ளிய வன்பர் வரவெனக் கோதியென் வான்றுயரந்
தள்ளிய சங்கமங் கம்புனை வார்திருச் சண்பைவள
ரொள்ளிய ஞானசம் பந்தப் பிரான்மு னொலித்தல்செயும்
வெள்ளிய முத்தின் றிருச்சின்னம் போன்று விளங்குவே. - 333
1488 - தலைமகன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாதல்
நடத்தே பயில்கழ லார்சண்பை நாடன்ன நங்கைகொங்கைக்
குடத்தே நிறைந்தபொ னோக்காது வேறுபொன் கொள்ளநெடுங்
கடத்தேசென் றீருண்டு கொல்லோவம் மாதுங் கலங்கலினெஞ்
சிடத்தே பயிறல் வலத்தே யயில்கொ ளிறையவரே. - 334
1489 - தலைவன் நினைத்தமைசெப்பல்
படந்தொறுஞ் செம்மணி வாய்ப்பணி பூண்பான் பங்கயப்பூந்
தடந்தொறு மன்ன மலிசண்பை நாடன்ன தாழ்குழலோர்
திடந்தொறு மேவிவெந் தீவினை யேனனி சென்றசென்ற
விடந்தொறு நீநின் மடப்பாவை யோடு மியங்கினையே. - 335
1490 - தலைவன் ஆற்றுவித்திருந்த அருமைவினாதல்
கன்னா ருரித்தது போலென்னை யாண்ட கருணைப்பிரான்
றுண்னார் மதிலொரு மூன்றுஞ்சுட் டோன்சண்பைத் தொல்வரைவாய்ப்
பொன்னா ரணிமயில் யானும்மி னின்றங்குப் போகியபி
னென்னா ருயிரையெவ் வாறாற்று வித்திங் கிருந்தனையே. - 336
1491 - தலைவியைப் பாங்கி ஆற்றுவித்திருந்த அருமைகூறல்
கடல்சூழ் புகலிப் பெருமான் றிருநுதற் கட்பொலிவை
யடல்சூழ்வை வேலிறை வாசிறி தோதி யலர்ப்பகழி
யுடல்சூழ் வதுசற் றொழித்துநின் வாய்மை யுரைத்தளித்தேன்
மடல்சூழ் கருங்குழல் வெண்ணகைச்செவ்வாய் மயிலினையே. - 337
1492 - வரைவுமலிவு.
காதலன்முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்
ஆரூ ரடங்க முனங்குண்டை யூர்நெ லடங்கவுய்த்த
காரூர் குறளிற் புகலிப் பிரான்விற்ற கர்த்தெடுத்தாங்
கேரூர் களிறு மிசையேற் றுபுவந் திறக்கினநம்
மோரூர் முலைவிலை யென்றன்பர் நல்குபொன் னொண்ணுதலே. - 338
1493 - காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சியுள்ளல்
பொன்றா வளமைப் புகலிப் பிரான்மணம் பூண்டுமுகின்
மின்றா விமயம் புகுதரு கான்மகிழ் மேனையைப்போற்
குன்றா விறலுடை யார்மணம் பூண்டு குறுகினம்மூர்
நன்றா மணவணி கண்டாய் மகிழ்தரு நம்மினுமே. - 339
1494 - பாங்கி தமர்வரைவெதிர்த்தமை தலைமகட்குணர்த்தல்
மேற்றா ரகையி னரும்பார் பொழிற்சண்பை வித்தகர்வெண்
ணீற்றா ரடல்விடை யேற்றா ரருளி னிறைமகிழ்விற்
போற்றார் முடியிட றுங்கழ லார்தந்த பொன்முழுது
மேற்றார் நமரினித் தூற்றா ரயலவ ரீர்ங்கொடியே. - 340
1495 - தலைமகள் உவகையாற்றாது உளத்தொடுகிளத்தல்
அரவெழுந் தார்க்கு மவிர்சடை யார்சண்பை யாளர்வெற்பி
லுரவெழுந் தார்க்கு முருவுடை யார்நம தூரகத்தே
வரவெழுந் தார்க்கும் பகலே யிகலின் மணமுரச
மிரவெழுந் தார்க்கு முருவ மிலார்முர சென்செயுமே. - 341
1496 - தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
மன்னும் புகலிப் பிரான்கட வூரில் வழுத்தொருவற்
றுன்னுங் கொடுஞ்சம னைத்தெறல் போலச் சுடரிலைவேன்
மின்னுங் கரத்தரிம் மாதுயிர்க் கூற்றம் விலக்கினரென்
பன்னுந் திறத்த தவர்வாழ்க வாழ்கவிப் பாரென்றுமே. - 342
1497 - தலைவி மணம்பொருட்டாக அணங்கைப்பாரநிலைகாட்டல்
செய்யே மலிசண்பை யார்பாற் கவுரி திருவடிகண்
மொய்யே ருருக்கு மணிபணிந் தாங்கிம் முதுகுன்றின்வாய்
மையே பொலிகண் மணம்பொருட் டாக மகிழ்ந்தணங்கைக்
கையே குவித்துப் பரவுதல் காண்கநின் கண்விடுத்தே. - 343
1498 - அறத்தொடுநிற்றல்.
பராநிலைகண்டதலைவன் மகிழ்தல்.
நாதன்மை தாய களத்தான் புகலி நகுவரைமா
னோதன்மை சானம் மணம்பொருட் டாக வுவந்தணங்கைத்
தீதன்மை மேவ மலர் தூய்ப் பராவுத றேர்தரினங்
காதன்மை தானெஞ்ச மேவஞ்ச மேயிக் கடலகத்தே. - 344
1499 - அறத்தொடுநிற்றல்.
கையறுதோழி கண்ணீர் துடைத்தல்.
ஆலத்தின் கீழுறை வார்காழி நாத ரருளனையாய்
கோலத்தின் கிள்ளை குளிர்மொழி பேசுங் குலவுபொழில்
காலத்தி னன்மலர் நல்கும்பந் தாடுங் கடும்புமுண்டு
நீலத்தின் முத்தம் பிறப்பதற் கேதுவெ னீயுரையே. - 345
1500 - தலைமகள் கலுழ்தற்காரணங்கூறல்.
பூண்பது வாளா வாக்கிதென் காழிப் பொருப்பிறைவற்
காண்பது நாமது காரண மாகக் கரிகுழைத்து
மாண்பது மேவப் புனைபூங்கை யோவும் வளையென்றொரீஇ
யேண்பது மாதனி போல்வாய் கலுழு மிருவிழியே. - 346
1501 - தலைமகன் தெய்வங்காட்டித்தெளிப்பத் தெளிந்தமை எய்தக்கூறல்.
பொன்னே பொருசடை யார்காழி நாதர் புகார்த்துறைவாய்
மின்னே கடற்றெய் வதங்காட்டி யன்பர் விரித்ததெல்லாங்
கொன்னே யலவென் றிருந்தேன் கயல்கொல் குருகினொடாங்
கென்னேமுட் கைதையு முண்டோது மோகரி யென்செய்வனே. - 347
1502 - தலைவன் இகந்தமை இயம்பல்.
பொழுங் குளிர்மதி சூடும் பிரான்புக லித்துறைவாய்
வாழுந் தலைவர் கலந்தவந் நாளங்கு வைகுகொலை
சூழுங் குருகு கரியுரை யாமை துணிந்தஞரி
லாழும் படியெனை நீத்தடைந் தார்த மகனகரெ. - 348
1503 - தோழி இயற்பழித்துரைத்தல்.
மேதக் கவர்புக ழுங்காழி மேய விறல்வடுக
நாதக் கடவுளை நண்ணாரி னீ துயர் நண்ணமயி
லேதக் கனமு னிசைத்தயர்ந் தார்பின்ன ரென்னிலிவ
ரோதக் கவர்மிக் கவர்யா ரிவரி னுணர்தரினெ. - 349
1504 - தலைமகள் இயற்படமொழிதல்
அடியார் கருத்தின் படியார் பிறைகொண் டலங்கரித்த
முடியார்நஞ் சுண்டு முடியார் புகலி முதுகிரிவாய்
வடியார் மலர்க்குழன் மாதேமுற் சூளு மறந்தகலுங்
கொடியா ரெனினு மவரே யெனக்குக் குலதெய்வமே. - 350
1505 - தெய்வம்பொறைகொளச் செல்குவமென்றல்
நொதுமல ரல்லர்தஞ் சூண்மறந் தாரென்று நோதலுறப்
புதுமலர் மாலைப் புயத்தாரைச் சீறல் பொறுத்தியென்று
விதுமலர் வாண்முகத் தாயெழு வாவப்பி மென்புழுகு
மதுமலர் தூவிப் பணிவாம் புகலி வடுகனையே. - 351
1506 - தலைவி இல்வயிற்செறித்தமை இயம்பல்
கற்றைச் சடையுடை யான்காழி நாதன் கயிலைவரைச்
சுற்றைப் புனைபொழி லூடுசென் றாடற்க தோகையென்றா
ளிற்றைத் தினமன்னை யெய்த்தனள் போலுமெய் யேறியபீ
ரொற்றைத் திகிரியுள் ளார்மாத ராயி துணர்ந்திலரே. - 352
1507 - செவிலி கனையிருளவன்வரக் கண்டமைகூறல்
மைவாய் விழியொரு பாலார் புகலி மணிவரைப்பாற்
கைவாய் வடிநெடு வேலோடு வந்துநங் காளைநிற்கப்
பைவா யரவல்கு லாய்தா யிருண்டுப் பார்த்தற்புதத்
தைவாய் முருகென் றொழிந்தா ளதுநந் தவப்பயனே. - 353
1508 - செவிலி தலைமகள்வேற்றுமைகண்டு பாங்கியைவினாதல்
கனங்காவல் கொண்ட குழலாய் பொழிலெழிற் காழியினென்
மனங்காவல் கொண்ட பெருமான் வரையில் வயங்குதினைப்
புனங்காவ னீத்தபின் மெய்வேறு பட்டுநம் பொன்கைவளை
யினங்காவ லோவி யொழிவதற் கேது வியம்புகவே. - 354
1509 - வெறிவிலக்கல்
சொல்லவந் தீரிக் குடில்வா யரன்சண்பை துன்னலரிற்
பல்லவந் தீர்கொம் பரின்மெலி வாளுட் படர்தருநோய்
வெல்லவந் தீர்கொல் வெறிவேல ரேயிவ்வெறுந்தகரைக்
கொல்லவந் தீர்கொல் சொலவேண்டுங் கோபங்கொளாதெனக்கே. - 355
1510 - வெறிவிலக்கியவழிச் செவிலி தோழியைவினாதல்
குறியாட்டை மன்று ணவில்வார் புகலிக் குழகர்வெற்பிற்
செறியாட்டை யென்னுலு நீகண்டு ளாய்கொ றிருந்திழையே
மறியாட்டை யீர்ந்து முருகனுக் கீந்துந மங்கையுய்ய
வெறியாட்டை யாற்றிடுங் காற்றடுத் தாய்சொல் விளைந்ததென்னே. - 356
1511 - அறத்தொடுநிற்றல்.
தோழி பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
அரனார் புகலிக் கடற்றுறை வாய்வண்ட லாட்டிற்கைதை
வரனார் மடல்குரு கென்றனள் யான்மட லென்றனனென்
கரனார் தாச்செ யெனக்கலுழ்ந் தாளது கண்டுவிரைந்
துரனா ரொருவர் முறித்தளித் தேகின ருள்ளதிதே. - 357
1512 - புனறருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
மருதுறை யேகன் புகலிப் பிரான்வள நாட்டுநதி
யொருதுறை மூழ்கவுண் ணீரிர்த்த லான்மற் றொருதுசைபோய்க்
கருதுறை நாவுக் கரசெனத் தோன்றுமக் காலையினோர்
விருதுறை வேலவ னாற்கரை யேறினண் மெய்ம்மையிதே. - 358
1513 - களிறுதருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்.
வாரேறு பூண்முலை பங்கர்தென் காழி வரைப்புனத்துக்
கூரேறு கோட்டுக் களிறொன்று சீறிக் குறுகவிரைந்
தேரேறு கோதை நடுக்குற்று வீழ வெடுத்தணைத்தாங்
கோரேறு போல்வந் துதவின ரான்முன் னுதவினரே. - 359
1514 - மணம் விலக்கல்.
அற்றாக் கருளும் பிரான்காழி நாத னருளியநூ
லுற்றார்க் குரியவர் பொற்றொடி யாரென் றுணர்த்துதலான்
மற்றார்க் குரிமை யுளதாகு மோவென் வகுப்பதன்னாய்
நற்றாக் கருங்குழற் செவ்வா யொளிர்வெண் ணகைமணமே - 360
1515 - தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்./i>
கங்கா தரர்தென் கழுமலத் தீசர் கழனினைவார்
தங்கா தரம்பொரு வப்போம் வனைகளத் தாளமைத்த
பொங்கா தரமெங்கும் போர்ப்பது போலெங்கும் போர்த்தெழு பொன்
மங்கா தரகர வென்னுற்ற தோநம் மயிற்கணங்கே. - 361
1516 - செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்.
மானாறு பாகத்தர் தென்காழி நம்மகள் வாயின்முலைப்
பானாறு மின்னும் புறந்தோன் றினவல பல்லுமுதிர்
சூனாறுற் றென்ன முதுக்குறைந் தாளினிச் சொல்வதென்யான்
றேனாறு பூங்குழ லன்னா யினித்தக்க செய்கைநன்றெ. - 362
1517 - நற்றாய் தமருக்கு அறத்தொடுநிற்றல்.
குருத்துக் கிசைந்த பொடிபூசு மேனியர் கோயில்கொடென்
மருத்துக் கிசைந்த மணிமாடக் காழி வரைநமர்காண்
முருத்துக் கிசைந்த முகைமூரன் மாது முதுக்குறைந்தாள்
கருத்துக் கிசைந்த வரைநாடி யாற்றுங் கடிமணமே. - 363
1518 - உடன்போக்கு.
பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல்.
பொல்லா மலமொழிப் பார்காழி நாதர் பொருப்பிறைவா
வில்லா நுதல்பிரி வாற்றாள்பொற் கொங்கை விலைக்குலக
மெல்லா மளிப்பினு மீயா ரெமரிஃ தெண்ணினஞ
ரொல்லாநின் னூருக் குடனழைத் தேகுத லுத்தமமே. - 364
1519 - தலைவன் உடன்போக்கு மறுத்தல்.
முடியைந் துடைய பிரான்காழி வாணன் முடுகிரிவா
யடியைந் தெடுத்துவைத் தைங்காத மென்றஞ்ச மாயிழையை
வடியைந்து பாற்குழ லாய்கொண்டு செல்ல மனங்கொள்வலோ
கடியைந் துடைய விரதிய ரெசெலுங் கானகத்தே. - 365
1520 - பாங்கி தலைமகனை உடன்படுத்தல்.
ஆலை மலியும் வயற்காழி நாத ரருள்கலந்த
வேலை மறமு மறமா மருளும் விரும்பருளா
நூலை மதிக்கு நினைக்கலந் தாலெங்க ணூலிடைக்குப்
பாலை மருதமன் றோவினி யாது பகர்வதுவே. - 366
1521 - தலைவன் போக்குடன்படுதல்.
நுண்ணிய நாயகன் றென்காழிச் சம்பந்தர் நோக்கமெய்யி
லண்ணிய வெப்பம் வழுதியற் றாங்கெனை யாண்டுகொண்ட
புண்ணிய மாமயி னோக்கவெம் பாலையிற் பொங்குவெப்பந்
தண்ணிய தாகுமென் றேதுணிந்தேனின் றனிக்கருத்தே. - 367
1522 - பாங்கி தலைவிக்கு உடன்போக்குணர்த்தல்.
சேலை யவாவு வயற்காழி நாதர்பஃ றேவரெற்பு
மாலை யவாவு சடையார் கயிலை மயிலனையா
யோலை யவாவு செவிகுவி மாமுலை யுங்களன்னம்
பாலை யவாவுங்கொ லென்றார்நங் காவலர் பைங்கொடியே. - 368
1523 - தலைவி நாணழிபிரங்கல்.
எண்பிறப் பைத்தவிர்த் தார்காழி நாத ரிமயத்தினா
ணண்பிறப் பைத்தர லானம் பிறப்பு நகுபிறப்பே
யொண்பிறப் பைத்தரு வண்காரைக் காலம்மை யோர்ந்தலவோ
பெண்பிறப் பைத்தவிர்த் துற்றா ளொருகரும் பேய்ப்பிறப்பே. - 369
1524 - உடன்போக்கு.
கற்புமேம்பாடு பாங்கிபுகறல்.
பூவனை யாய்நினக் கோதுவ தென்னை புகலியினந்
தேவனை யேயருச் சிப்பார்க்கு மாமந் திரங்கிரியை
பாவனை நாண மடமச்சங் காண்குலப் பாவையர்க்கு
மேவனை யார்க்கன்பு தேரினை யார்க்கு விரும்புகற்பே. - 370
1525 - தலைவி ஒருப்பட்டெழுதல்.
நாறுங் கடுக்கைச் சடையார் புகலிநல் லார்பலர்வாய்
கூறுங் குறிப்பு மனைமா ரியற்று கொடுஞ்சிறையு
மேறும் பசப்பு மதவே டுடிப்புமற் றெய்துமிடை
யூறுங் கெடுப்பலின் னேயொரு நானன்ப ரோடுசென்றே. - 371
1526 - தலைவி ஒருப்பட்டெழுந்தமை பாங்கி தலைவற்குணர்த்தல்.
பந்துங் கழங்குமென் கைக்கொடுத் தாளுட் பரிந்துகண்ணீர்
சிந்தும் பசுங்கிளி சிந்தாது போற்றிச் சிறப்பியென்றாள்
சந்துங் கறியுஞ் செறிபொழிற் குள்ளந் தளரலென்றாண்
முந்துங் களிற்றண்ண லேயரன் காழி முகிழ்நகையே. - 372
1527 - பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள்சொல்லல்.
மறைக்குந் திருநெடு மாற்குமெட் டான்சண்பை வாணுதலா
ரிறைக்கு மலர்க்கு மதவே ளலர்க்கு மிலகுறுவான்
பிறைக்குங் குறைக்குந் தனிமைக்குந் தாயர் பெருக்குகொடுஞ்
சிறைக்குங் கொடியது வோவன்ப ரோடு செலுஞ்சுரமே. - 373
1528 - பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடைகொடுத்தல்.
யான்செயும் விண்ணப்ப மீதுநற் றாய்தந்தை யான்றவனீ
மான்செயு நோக்கிக்கு நின்னருண் மாறுறின் மாலயன்மேன்
மீன்செயு நீர்த்தடங் காழிப் பிரான்றிரு வீழிப்பிரான்
றான்செயும் பேரருண் மாறுறு மோர்தி தராதிபனே. - 374
1529 - பாங்கி வைகிருள்விடுத்தல்.
பற்றுமுன் மேவும் பரன்காழி நோக்கியிப் பாவையொடு
சற்றுமுன் போதிரிவ் வைகிருள் வாயெங்க டாய்நமரை
யுற்றுமுன் கூறுவ கூறியிவ் வூர்க்கௌவை யோவச்செய்து
மற்றுமுன் னேவந்து கூடுவ னானிற்பன் மன்னவரே. - 375
1530 - தலைவன் தலைவியைச் சுரத்துய்த்தல்.
மணம்புரி நாளம்மி யேற்றலெவ் வாறென்று மாழ்குறுமென்
குணம்புரி காரிய மிக்கழ காயிற்றுக் கோமளமே
பணம்புரி பாப்பணி யார்காழி யெண்ணலர் பற்றுவெம்மைக்
கணம்புரி காட்டுண் மெலப்பெயர்ப் பாய்திருக் கான்மலரே - 376
1531 - தலைமகன் பொழில்கண்டுவியத்தல்.
சுந்தரர் தென்குரு காவூர்க்குச் செல்வழித் தோன்றுமொரு
பந்தரின் ஞானசம் பந்தர்க்குத் தோன்றுமொர் பந்தரினிற்
சுந்தர மார்சண்பை யாள்வா ரருளிற் றொருநிழலின்
பந்தரு சோலையொன் றுற்றது காணம் படர்தெறவே. - 377
1532 - தலைமகன் தலைமகள் அசைவறிந்திருத்தல்.
மருக்கோல வார்குழன் மாதே பருதி வழங்கழலு
முருக்கோல மார்நின் முகமா மதிநல் குறுபுனலு
மிருக்கோல மிட்டு முணரான் புகலி யெனவடுத்த
திருக்கோலக் காவி னிருந்தொழிப் பாம்பின்பு செல்லுவமே. - 378
1533 - தலைவன் தலைமகளை உவந்தலர்சூட்டி உண்மகிழ்ந்துரைத்தல்.
மையோ வெனுங்களத் தார்காழி நாதர் வழங்கருளாற்
பொய்யோ வெனுமிவ் விடைகூந்தன் முன்செய்புத் தேடன்கையோ
வையோவக் கூந்தன் முடித்துமென் பூவு மணிதல்செய்யென்
கையோ சிறந்தன யாருரைப் பாரிந்தக் கானகத்தே. - 379
1534 - கண்டோர் அயிர்த்தல்.
புன்முளை யாவிந் நெடுங்கொடுங் கானம் புகுநரல்லர்
நென்முளை யாமென் மலங்கெடுத் தாள்சண்பை நித்தனருண்
மன்முளை யாமுரு கோவிந்த நம்பிநல் வள்ளியெனு
மன்முளை யாமதி போன்முகத் தாள்கொலிவ் வாயிழையே. - 380
1535 - கண்டோர்மகிழ்தல்.
அணிகெழு மாதின் பிடிநடை காண வவள்பின்செலு
மணிகெழு தோள னரன்காழி யன்னவன் மால்களிற்றின்
றிணிகெழு போர்நடை காண்பா னனையன்பின் செல்லுமிந்தப்
பிணிகெழு கூந்த லெனில்யா ரிவரன்பு பேசுநரே. (38 - 381
1536 - கண்டோரிரங்கல்.
கடந்தா ளலள்சிறு பேதைப் பருவமிக் கன்னியன்னோ
நடந்தாள் கணவன் பணிதலைக் கொண்டிந் நருகொடுங்கான்
றடந்தா ளுடைத்தருச் சூழ்சண்பை நாகர் சயிலத்துண்ணோ
யிடந்தா ளலளிவ ளைப்பெற்ற பாவியென் னாகுவளே. (38 - 382
1537 - கண்டோர் காதலின் விலக்கல்.
மெல்லியல் வாடு நகரணித் தன்றுவெய் யோன்விழுந்தா
னல்லிய லாழி யகம்பரன் காழி யணுகலரிற்
கல்லியல் காடுபல் கானியா றியங்குங் கடுங்கொடுமா
வல்லிய றோளவெம் மிற்றங்கி யேகுக மாதொடின்றே. - 383
1538 - கற்பொடுபுணர்ந்த கௌவை.
கண்டோர் தம்பதியணிமைசாற்றல்.
மின்னா வெனநுடங் கும்மிடை யாளொடு வேல்வலங்கொண்
மன்னா வினைய கழிப்பாலை முல்லை வனமிரண்டும்
பின்னாக நீநடந் தாலெதிர் தோன்றும் பிறந்துழல்வோர்
முன்னா வமலமுன் னோனுறை காழி முதுநகரே. - 384
1539 - தலைவிக்குத் தலைவன் தன்பதியணிமைசாற்றல்.
உடல்சூழ் பிணிக்கு மருந்தாக மண்ணிட் டுதையொழிக்கு
மிடல்சூழ் புகழ்த்திரு வேளூர் கடந்து விரவுவமேன்
மடல்சூழ் கருங்குழ லாய்காண லாமின்னும் வந்துகருங்
கடல்சூழ் வதுபொரு வும்பொழில் சூழ்பரன் காழியையே. - 385
1540 - தலைவிக்குத் தன்னகர்காட்டல்.
நல்லாய் நயனம் விடுத்தெதிர் காண்க நகுகடலே
வெல்லா யகலக லென்றுகை நீட்டி விலக்குதல்போல்
வல்லாய் கொடிதுவள் பொற்கோ புரமு மணிமதிலுஞ்
செல்லாய்செய் குன்றமுஞ் சூழ்பரன் காழித் திருநகரே. - 386
1541 - தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல்.
திகழும் பிரம புரமிஃ தப்பெயர்த் தீர்த்தமிது
நிகழும் பிரமலிங் கேசரி லீது நிலையழகி
புகழுமி லீதிது தோணிப் பிரானில் புகுந்துயரெற்
ககழும் வடுகனி லீதிது சம்பந்த னாரின்மின்னே. - 387
1542 - தலைவன் தலைவியொடு தன்மனைசார்தல்.
சொல்லிய சீர்த்திருக் காழிப் பிரான்றளி சூழ்ந்திறைஞ்சிப்
பல்லிய மார்ப்ப மறுகூடு சென்றுபல் லாண்டிசைப்ப
வல்லிய நேர்விறன் மன்னன்மின் னாளொடு மாளிகையுட்
புல்லிய மங்கல மோங்கப் புகுந்து பொலிந்தனனே. - 388
1543 - கற்பொடு புணர்ந்த கௌவை.
செவிலி பாங்கியைவினாதல்.
கல்லா தவர்கரு தாக்காழி நாதர் கயிலைவரை
நல்லா தரஞ்செய் பொழிற்கெழி லில்லை நமைப்பிரிய
வொல்லா மகட்குற்ற தென்னினக் குற்றதெ னூர்க்கௌவையெ
னில்லா விழிமுகம் போனம்மி லாயதெ னேந்திழையே. - 389
1544 - பாங்கி செவிலிக்குணர்த்தல்
கண்ணா ணுதற்பெரு மான்காழி நாதன் கருணைகொடு
மண்ணா ளொருவலி யான்மண மேற்றிலர் வன்கணமர்
புண்ணாண் மனத்த ணமையுஞ் சுரத்துப் புழுங்கழலு
மெண்ணா ணடந்தன ளன்னாயின் றேநின் னிளங்கிளியே. - 390
1545 - பாங்கியினுணர்ந்தசெவிலிதேற்றுவார்க்கு எதிரழிந்துமொழிதல்
அறவே தனையுளை யாறுகென் பீர்சண்பை யண்ணலரு
ளுறவே முயலுந ரொத்துறங் காமலுண் ணாமலஞ
ரறவே துயிற்றி யருத்தி வளர்த்ததற் காகவய
லுறவே பொருளெனக் கொண்டுசென் றாளென்னொருமகளே. - 391
1546 - செவிலி தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தல்
புகராய் பவர்க்கொழிப் பார்காழி நாதர் பொருப்பிளமா
ணிகரா யினுமின் முருகோடி யாரையு நீத்துவள்ளி
நகராய் தரமுனஞ் சென்றதற் கேதுவெ னாடியன்னாய்
பகராயென் றாணென்ன லம்முன்ன மோர்ந்திலன் பாவியனே. - 392
1547 - செவிலி தெய்வம் வாழ்த்தல்
மின்னுங் கொடுங்குன்று ளார்காழி நாதரை மேவலர்போன்
மன்னுங் கொடுஞ்சுரஞ் சென்றவண் மீண்டு வரப்புரியிற்
கொன்னுங் கொடுமுடி வாழ்முரு கேயெங் குலத்தொருபெ
ணின்னுங் கொடுத்துத் தொழும்பாகு வேமுனக் கெற்றைக்குமே. - 393
1548 - செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல்
கயலார் கருங்கண் சுனைவீழ வன்று கலந்தெடுத்த
மயலார் களிற்றண்ண னிற்கமற் றோர்த மணமிசையு
மியலார் நமரென்று சொல்லாது வெஞ்சுரத் தெய்தினண்மின்
பயலார் புகலியன் னாய்நங் கொழுந்தென்ன பண்ணுதுமே. - 394
1549 - நற்றாய் தன்னுளிரங்கல்
ஊரும் பிறைமுடி யார்காழி நாத ரொருவர்வரை
நேருங் கிளியொடு பூவையும் பாவையு நீத்திருகண்
வாரும் புனல்கொடு கைத்தாயும் பாங்கியும் வாடவழல்
சேருஞ் சுரத்தடைந் தாய்மக ளேயென்ன செய்குவையே. - 395
1550 - நற்றாய் பாங்கி தன்னொடுபுலம்பல்
பாவா யிதுமுன் பகர்ந்தா யலைபகர்ந் தாலுடனே
யேவாய் சிலைத்தடந் தோளான் றிருமண மெய்துவள்பூங்
காவாய் புகலிக் கடவுள்பொற் பாதங் கருதலரிற்
பூவாய் குழலியை வீணே யருஞ்சுரம் போக்கினையே. - 396
1551 - கற்பொடுபுணர்ந்த கெளவை.
தோழியழுங்க நற்றாய்புலம்பல்.
அறியாப் பருவத் தறிவே தலைக்கொண் டருந்துயரங்
குறியாச் சிறிய ளயலான்பின் வெஞ்சுரங் கூடுதனன்
னெறியாக் கருதினள் சண்பைப் பிரான்வரை நீயென்செய்வாய்
மறியாப் பொலிகண் மகளே வருந்தி வருத்தலையே. - 397
1552 - நற்றாய் பாங்கியர்தம்மோடு புலம்பல்.
பெற்று வளர்த்த வெனைமறந் தாள்பிரி யாதமரும்
பற்று வளர்த்த வுமைமறந் தாள்பதிப் பற்றடையிற்
சுற்று வளர்த்த துணர்ப்பொழிற் காழித்தொல் லோனுதற்றீ
மற்று வளர்த்த சுரம்போக வேண்டுங்கொன் மங்கையரே. - 398
1553 - நற்றாய் அயலார்தம்மோடு புலம்பல்.
கொன்னூர் மறுகவுங் கைத்தாய் துயரிற் குறுகவுஞ்செம்
பொன்னூர் வதனஞ் சிறுகவும் பாங்கி புரத்தமர்வீர்
தன்னூர் கழுமல மாகக்கொண் டானருள் சாரலரின்
மன்னூ ரழற்சுரஞ் சென்றா ளவண்மன வன்மையென்னே. - 399
1554 - நற்றாய் தத்தையொடுபுலம்பல்.
கள்ளாய் மலர்க்குழல் காழிப் பிரான்வரைக் காளையுரைக்
குள்ளாய் நடப்பவள் வள்ளாய்முன் னோரை யொருங்குவிட்டா
டள்ளா யெனைச்சற்று மெள்ளாய்தள் ளாயென்று சாற்றிமெலி
கிள்ளா யுனையுங்கை விட்டா ளெனிலென் கிளப்பதுவே. - 400
1555 - நற்றாய் தலைமகள்பயிலிடந் தம்மொடு புலம்பல்.
கள்வார் கணையுடைக் காமனைக் காய்ந்த கனல்விழியோன்
வள்வார் முரசதி ருங்காழி யோன்வரை மன்னனையே
யுள்வார் குழலுமக் கேதுரைத் தாளிங் குறுவதென்று
கொள்வா ரெவர்நும் மலர்சுனை யேநனை கூர்பொழிலே. - 401
1556 - நற்றாய் நிமித்தம்போற்றல்.
வரைந்தாலிவ் வாறு வரலின்று காண்வரை யாமலிப்போ
திரைந்தாற் பயனெ னிருங்காழி யார்வரை யேந்தலொடு
விரைந்தா லிளந்தளிர் மெல்வயிற் றென்மகண் மீண்டுவரக்
கரைந்தா னிணப்பலி யின்னே கொடுப்பல் கருங்கொடியே. - 402
1557 - தலைவன் மீக்கன்புசெய்கவென்று தெய்வம்பரவல்.
பிணியார் மலர்க்குழல் சென்றாள் சுரத்திலப் பேதைக்குள்ள
பணியார் புரிவர் மணவாள னெமுற்றும் பண்பிற்செய
வணியா ரவன்றிரு மார்பே துயிலிட மாகவருண்
மணியார் மதிற்சண்பை வாழ்வடு காநின்னை வாழ்த்துவனே. - 403
1558 - நற்றாய் சுரந்தணிவித்தல்.
சந்தாபந் தீர்த்தென்னை யாள்வோன் புகலித் தனிமுதல்வ
னந்தா வருளி னியல்கதி ரேயுன்னை நான்றொழுதேன்
முந்தா வழற்சுரந் தண்மைசெய் தேமுத்த மூரன்முகச்
செந்தா மரையை மலர்த்தியல் பேயத் திறநினக்கே. - 404
1559 - நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கிரங்கல்
பூமேன் மிதிப்பினுமந் தீமேன் மிதித்தது போற்பதைப்பாள்
காமே லணவு புகலிப் பிரானுதற் கட்டழலுஞ்
சேமே லவன்சடை நீர்போற் குளிரச் செறிதழற்கா
னாமே லுரைப்பதெ னாமே துணிந்து நடப்பதற்கே. - 405
1560 - நற்றாய் தன்மகள் இளமைத் தன்மைக்கு உளமெலிந்திரங்கல்
உட்டா னமர்ந்தென்னை யாள்வோன் புகலி யொருவன்வரைக்
கட்டா னுணன்முலைப் பாலேயல் லாற்பதங் கண்டறியாண்
முட்டா னெனவெம் பரல்செறி கான்சென்று முன்னமங்கை
தொட்டான் பணிசெயக் கற்றதெங் கோவெத் துணிபிதுவே. - 406
1561 - நற்றாய் அச்சத்தன்மைக்கு அச்சமுற்றிரங்கல்
பூசையை யோவத்துக் காணினு மஞ்சிப் புழுங்குமுளத்
தாசையை யோவென் னுரைக்கேன் செடிக்கொவ்வொன் றாகமுழங்
கோசையை யோவரும் வெம்புலி துஞ்சு மொருகடத்தி
லீசையை யோவரி யான்காழி மாமயி லென்செயுமே. - 407
1562 - கண்டோரிரக்கம்
காவி விளர்த்த களத்தான் புகலிக் கயிலைவரை
யாவி நிகர்த்தவள் சென்றாள் சுரத்தவ ளாடிடமு
மேவி யிருக்கு மிடமுங்கண் டான்முன் விழைந்துபெற்ற
பாவி வயிற்றிடை மூளா தவியுங்கொல் பற்றழலே. - 408
1563 - செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்
பொற்பே மலியும் புகலிப் பிரான்பொற் பொருப்பிடைத்தன்
கற்பே நிறுத்தப் புகுந்தாட்கிவ் வாறு கலங்கலன்னாய்
வெற்பே முதலிய வெல்லா நிலமும் விரைந்துதுரீஇ
யற்பேகொ ளண்ண லொடுமாதை மீட்ப லறிதியின்றே. - 409
1564 - முக்கோற்பகவரை வினாதல்
பதியிய லிற்று பசுவிய லிற்றுவெம் பாசவகை
மதியிய லிற்றென் றுணர்ந்தேழ் வகைப்பவ வாய்மணிட்டீர்
நதியியல் செஞ்சடைக் காழிப் பிரானைநண் ணாரினிந்தக்
கொதியியல் கானொரு காளையொ டோர்மின் குறுகினளே. - 410
1565 - கற்பொடுபுணர்ந்த கௌவை.
மாவிரதியரை வினாதல்.
மொழிதரு பஞ்ச வடியோ டடிப்பஞ்ச முத்திரையுங்
கழிதரு மெற்பணி யும்புனை வீரிக் கடத்துவழி
விழிதரு நெற்றிப் பிரான்காழி நாதனை மேவலர்போற்
பொழிதரு மேரொரு பூவையொர் காளைபின் போயினளே. - 411
1566 - உய்த்துணர்வோரை உரைமினென்றல்.
எல்லா வுயிர்க்கு முயிராய் காழிக் கிறையவனை
நல்லா தரத்தழ லிற்கண்டு போற்றிடு நான்மறையீர்
பொல்லா வழலிச் சுரத்தொரு காளைபின் போகியமா
னொல்லா வெனவெதிர் மீளுங்கொ லோவுணர்ந் தோதுமினே. - 412
1567 - மிக்கோர் ஏதுக்காட்டல்.
மாதே யுலகிய லோர்ந்திலை யாலன்பு வைகுமுள்ளப்
போதே யமரும் புகலிப் பிரான்றென் பொதியவரை
மீதே பலாமுற் றருவீன் கனிகள் விரும்புநர்க்கே
தீதேயி னின்மக ளும்மன்ன ளாலென்று தேருதியே. - 413
1568 - செவிலி எயிற்றியொடுபுலம்பல்.
அறப்பாவை பாகர் பிரமலிங் கேச ரவனியுண்மா
னிறப்பாவை வாழ்சண்பை யூருடை யானொடு நேயமிக்கோர்
குறப்பாவை வந்தன ளோகொடு வேங்கைப்பல் கோத்தணிந்த
மறப்பாவை யேயுண்மை யோதுபு கோடி மலியறமே. - 414
1569 - செவிலி குரவொடுபுலம்பல்.
தற்றா யொடுதந்தை யில்லான் புகலித் தடவரைவாய்
நற்றாய் வருந்தநின் னாயமுந் தேம்பநல் லூர்மறுக
வுற்றாய் நினக்குத் தகாதென்று நீயென் னொருமகட்குச்
சொற்றா யலைநின்று ளாய்பயன் யாது துணர்க்குரவே. - 415
1570 - செவிலி புறவொடுபுலம்பல்.
வல்லா யெழுமுலை வெங்கா னடைய வழிமறித்து
நில்லா யெனத்தகைந் தாயில்லை யேசெல்ல நீளவிட்ட
பொல்லாயுன் வன்மை யுணர்ந்தல்ல வோபுற வேயுணவு
கல்லாய் முடிய வகுத்தான் கழுமலக் கண்ணுதலே. - 416
1571 - சுவடுகண்டிரங்கல்.
சிற்பங் கதிர்க்கு மதிற்காழி நாதன்செம் மேனியில்வெண்
கற்பங் கதிர்க்கும் படிபுனை வோன்றிருக் காளத்திவா
யற்பங் கதிர்க்கு மருங்குனல் லாள்சிற் றடியிதது
பொற்பங் கதிர்க்கும் புயத்தா னடியென்று போற்றுவனே. - 417
1572 - கலந்துடன்வருவோரைக் கண்டுகேட்டல்.
இன்பார் முருகனும் வள்ளியும் போல வெதிர்வருவீ
ரன்பார் மொழியென் னஞர்கெடு மாறொன் றறைமினிந்த
வன்பார்நும் போல்வ ரொருதோன்ற லும்மொரு மாமயிலு
மென்பா ரணிசடை யோன்காழி நோக்கியின் றெய்தினரே. - 418
1573 - கலந்துடன்வருவோர் புலம்பறேற்றல்.
யானெதிர் கண்ட வெழில்வள ரேந்தலு மிம்மடமான்
றானெதிர் கண்ட மடமானும் போயின்று சார்வர்கரு
வானெதிர் கண்டனம் மாதேவன் சங்கரன் வானவர்கோன்
கானெதிர் கண்ட பொழில்சூ ழுடுத்த கழுமலமே. - 419
1574 - செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல்.
படைபோ லொளிர்கண் ணொருபாற் பரன்சண்பை பாடுதலில்
கடைபோன் மெலியு மெனக்கெங்ஙன் வாயுண்டு காணகர்போய்
விடைபோ னடையொரு வேந்தன்பின் னேசென்ற மெல்லியலா
ளிடைபோன்மற் றுள்ள வுறுப்பொன்றுங் கண்டில னென்பதற்கே. - 420
1575 - மீட்சி.
தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்.
சேரா ருயிருண் டுழல்வடி வேலுடைச் செம்மலொடு
வாரா ரிளமுலை வெங்கான் கடந்து மருவினளின்
றோரார்த முள்ளத் தொளிப்பா னளிப்பா னுயிரளித்த
காரார் களத்த னுறையு நிறையுங் கழுமலமே. - 421
1576 - உடன்போய்வரைந்த நெடுந்தகை மீட்சியுரைத்தல்.
வண்டாள் குழலை வடிவே லவனருண் மாட்சியினந்
தொண்டாள் பரமன் புகலியிற் றன்மனை துன்னிமணம்
பண்டாள் விதஞ்செய் தமர்நாணம் மானம் பதிநினைத்துக்
கொண்டா ளுணர்ந்தது மீண்டன னாலக் குரிசிலின்றே. - 422
1577 - தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்.
விதுகா ணரிய கழற்சண்பை நாயகர் வெற்பதுமற்
றதுகாணின் னாயத் துடனீ பகல்விளை யாடுமிட
மிதுகா ணுனைமுத னான்வந்து கண்ட விரும்புனமற்
றுதுகா ணிரவுக் குறிகொண்டு முன்பயி லோரிடமே. - 423
1578 - தன்மனைவரைதல்.
தலைவி முன்செல்வோர்தம்மொடு தம்வரல்
பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல்.
பூமா னொடுகலை நாமான் மருவும் புகழ்ப்புகலி
யோமா னொடுபங் குமையையும் போற்றியெம் மூர்புகுவீர்
வாமா னொடுசம ரேற்குங்கண் ணாய மடந்தையர்க்குக்
கோமா னொடுசுரஞ் சென்றாள்வந் தாளென்று கூறிடுமே. - 424
1579 - முன்செல்வோர் பாங்கியர்க்குணர்த்தல்.
அருவார் சதுக்கொ ளுருவார் புகலியன் னீர்களுங்க
ளிருவார் முலையுஞ் செருவார் சிலைகொளொ ரேந்தலுமுள்
வெருவா ரணங்கு பொருவா ரொருவரை விட்டொருவ
ரொருவார் வழியில் வருவா ரிதுண்மை யுரைத்தனமே. - 425
1580 - பாங்கியர்கேட்டு நற்றாய்க்குணர்த்தல்.
அன்னாய் முதலை கொடுபோன பிள்ளை யருட்புகலி
மின்னாய் சடைப்பெரு மான்றோழ ராற்பின்பு மீண்டதெனப்
பொன்னாய் கழல்வலி யோன்கொடு போயநின் பூங்கொடிமற்
றுன்னாய் தருநன்மை யான்மீண் டுளாளிவ் வுரையுண்மையே. - 426
1581 - நற்றாய் தலைமகனுளங்கோள் வேலனைவினாதல்.
ஆலம் புனையுங் களத்தான் புகலியி லாய்ந்தொருமுக்
காலம் புனையு முணர்வுடை யீர்கழற் கல்விறலோ
னேலம் புனையுங் குழலா ளொடுமென திற்புகுமோ
கோலம் புனையுந்த னிற்புகு மோவுண்மை கூறுகவே. - 427
1582 - தன்மனைவரைதல்.
நற்றாய் மணனயர்வேட்கையிற் செவிலியைவினாதல்.
சிம்மனை வாயர வம்புனை வோன்வரைச் செல்வியெனு
மம்மனை வாய்திரு மேனிப் பிரானமர் காழியன்னாய்
நம்மனை வாயம்மி யோமண மாலை நகுபுயத்தார்
தம்மனை வாயம்மி யோமட மானடி தாங்குவதே. - 428
1583 - செவிலிக்கு இகுளை வரைந்தமையுணர்த்தல்.
கண்டு வருந்திப் பியமொழி பாகன்றென் காழியுள்ளார்
மண்டு வருந்திப் புவிபுரப் பார்வரைந் தார்மணிவாய்த்
தண்டு வருந்திச் சுழியையென் றார்வன் றரைமெழுகி
யுண்டு வருந்திப்பெற் றாட்கன்னை போயென் னுரைப்பதுவே. - 429
1584 - வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்.
பகலருங் கோளு மிகலரு நாளும் பலித்தனவென்
றகலருஞ் சீருடை யார்பரன் காழியி லாய்தொடியைப்
புகலருஞ் செல்வம் பொலியச்செய் தார்புதுப் பூங்கடியென்
றுகலரு மெய்ம்மொழி யோதுந ரன்னையெற் கோதினரே. - 430
1585 - தலைவன் பாங்கிக்கு யான்வரைந்தமை
நுமர்க்கியம்புசென்றென்றல்.
தெங்குங் கமுகுங் கதலியுஞ் சூழெந் திருநகரிற்
பொங்கும் புகலிப் பிரானரு ளாலுங்கள் பூங்கொடியைத்
தங்கும் பெருமறை யந்தணர் சூழத் தழன்முனர்யா
மெங்கும் புகழ்மணஞ் செய்தாநும் மன்னைக் கியம்புகவே. - 431
1586 - தானது முன்னே சாற்றினனென்றல்.
வல்லாண்டு கொள்ளு முலையாளை மங்கல வாழ்த்துவிம்மப்
பல்லாண்டு மல்கப் பரன்காழி யின்மணப் பந்தர்நல்லோர்
சொல்லாண்டு நீமணஞ் செய்தாய்முன் னேயத் துணிபுணர்ந்தேன்
வில்லாண்டு வாழ்நுதற் றோளெமர்க் கோதினன் வேலவனே. - 432
1587 - உடன்போக்கிடையீடு.
நீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன்செலவு உணர்த்திவிடுத்தல்.
ஒருவன் புடைகொள் கழுமல நின்றுமெம் மூர்புகுவீர்
மருவன் புடையென் றுணைவியர் பாலுங்கண் மங்கையென்பா
டருவன் புடைவனத் துங்களை யேநெஞ்சுட் டான்சுமந்தோர்
திருவன் புடையக லாதுசெல் வாளென்று செப்புமினே. - 433
1588 - தலைமகள் தன்செலவு ஈன்றாட்கு உணர்த்திவிடுத்தல்.
தரவாத சண்பைச் சதாசிவற் றாழ்ந்தெழு தாழ்சடையீ
ரோவாத துன்பத் துழலுமென் றாய்முன முற்றுவசை
மேவாத வண்குடி யோர்ந்தொரு வேந்தன்பின் மேவிநினைஇ
யேவாத நின்மகள் சென்றாளென் றோது மிறைஞ்சுவனே. - 434
1589 - நற்றாய்க்கு அந்தணர்மொழிதல்.
அன்னாய் புகலி யரனடி யேமெங்க ளாசிகொண்மோ
மின்னாய் மருங்கு லொருவே லவனொடு மேவிநல்லோர்
முன்னாய் வழிச்செலக் கண்டே மணையண் முதுக்குறைவின்
றென்னாய் விளையுங்கொ லோவட மீனு மிறைஞ்சிடுமே. - 435
1590 - நற்றாய் அறத்தொடுநிற்றலிற் றமர்பின்சேறலைத்
தலைவிகண்டு தலைவற்குரைத்தல்.
மூதண்ட கூட முடியாக வோங்கு முதல்வர்வெள்ளி
வேதண்ட வாணர் கழுமலஞ் சூழ்பெரு வீரையென
மாதண்ட நேர்புய மன்னாநின் மேலம்பு மாரிபெய்வான்
கோதண்டம் வாங்கி வளைந்தா ரெமரென் கொடுவினையே. - 436
1591 - தமர்பின்சேறலைக்கண்டோர் இரங்கல்.
மெலியுங் கொடிநுண் ணிடையா ளொடுசெல் விடலையைப்பொன்
மலியும் புகலிப் பிரானையுன் னாரை வளைக்கும்வெய்ய
கலியுங் கடுவினை யும்போல் வளைந்தனர் கானவர்மேற்
பொலியுஞ் சமரிது பார்ப்பதிற் றோடம் புகும்புகுமே. - 437
1592 - தலைவியைத் தலைவன்விடுத்தகறல்.
தகையே மலிபுக லிச்சட்டை நாதர் தமதருளாற்
பகையே யெனில்வெங் களிற்றுக் குழாத்துட்பஞ் சானனம்பாய்
வகையே யெழுவனிற் பாய்நீ நுமரென வந்தமையான்
முகையே பொருமுலை யாயஞ்சு வேனிவர் முன்செலற்கே. - 438
1593 - தமருடன்செல்பவள் அவன்புறநோக்கிக் கவன்றுஅரற்றல்.
அரியார் மதலை யொடுசூழ் புகலி யமருமறைப்
பரியார் கயிலை வரைவா யெனைமுற் பயந்தவர்மு
னுரியார் வளைக்கவு மஞ்சினர் போலென் னுயிரனைய
பெரியார் புறங்கொடுத் தாரென்சொல் வேனிவர் பேரருளே. - 439
1594 - வரைதல்.
சென்றோன்மீண்டுவந்து அந்தணரையும் சான்றோரையுமுன்னிட்டு
வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்துரைத்தல்.
அருகாத பூரணர் காழியிற் பாலுண்ட வையருமற்
றொருகா தலியு மணந்துட னேதம் முருக்குலைந்தார்
கருகாத மாலைப் புயவேந் தலுமிக் கனங்குழையுந்
தருகாத லின்மணந் தார்தளிர்த் தாருடன் றம்முருவே. - 440
1595 - இல்வாழ்க்கை.
தலைவன் தலைவிமுன் பாங்கியைப்புகழ்தல்.
ஆன்மா புகலிப் பெருமா னடிக ளடையளவுந்
தான்மா முயற்சி தவாவருள் போற்றமி யேனறும்பூந்
தேன்மா வுணுங்குழன் மான்மா முலைதுணை சேருமட்டு
மான்மா வனையகண் ணாய்முயன் றாயுன் மதிப்புநன்றே. - 441
1596 - தலைவனைப் பாங்கிபுகழ்தல்.
புடைக்குஞ் சிறுபசு வேய்முளை வானம் பொதுத்தெழுஞ்சீர்
படைக்கும் பனிவரை நன்னாட வையர்சண் பைப்பெருநின்
னடைக்குநின் கேண்மைக் கொடைக்கு மவாவுபு நானறுஞ்சந்
துடைக்குங் குமமுலை நாணுமெண் ணேன்முய லுற்றனனே. - 442
1597 - தலைவனைப் பாங்கிவாழ்த்தல்.
நாரலர் சிந்தை யகலார் புகலிமுன் னாளுரைத்த
சீரலர் சொற்படி பொன்புனைந் தேசெல்வி செல்வரின்று
வாரல ரென்றுகண் வாரல ரூருறை வாரலர்வேள்
போரலர் மாற்றிய நீவாழ்க வென்றும் புரவலனே. - 443
1598 - வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை பாங்கி தலைவியைவினாதல்.
தடுப்பது முன்னி யிமைத்தலுந் தீர்ந்து தவாவணங்கா
யுடுப்பது முண்பது முன்னாது வந்தின் பொருங்குறுநீ
கடுப்பது தீர்பரன் காழியி லன்னையர் காவல்செய்நாள்
விடுப்ப திவர்செய்த நாளெங்ங னாற்றினை மெல்லியலே. - 444
1599 - தலைமகள் வருந்தாதிருந்ததற்குக் காரணங்கூறல்.
பூங்காது வார்குழை மாதொரு பாகர் புகலியிலெற்
றாங்கா தகன்றன ராயினுந் தாயுனுந் தாமகத்தே
நீங்கா திவரிருந் தார்புறத் தார்புறத் தேயொரு நீயிருந்தா
யேங்கா தியானுயிர் வாழ்ந்தேனிச் சார்புகொண் டேந்திழையே. - 445
1600 - பாங்கி தலைவனை வரையுநாளளவும்
நிலைபெறவாற்றிய நிலைமைவினாதல்.
மோந்து மணைத்துந் தழுவியு நோக்கியு முத்தங்கொண்டுஞ்
சாந்தும் புழுகு மொழுகுமென் கொங்கைத் தலைதுயின்று
மேந்தும் பிறைச்சடை யார்காழி வாயிவ ளின்புறுநீ
நீந்தும் படியுற்ற தெவ்வாறு முன்ன நெடுந்தகையே. - 446
1601 - பரத்தையிற்பிரிவு.
பாங்கி மணமனைச்சென்ற செவிலிக்கு இருவரன்புமுரைத்தல்.
நிகர்வா விலாத நிருமலன் காழி நிரைவளையும்
புகர்வா ரயில்கொள் புயவேந் தனுமன்பிற் பூரணரே
நகர்வார் குழலிய ராடவர் போலலர் நாடினும்யார்
பதர்வார்மெய்ம் மாத்திரம் வேறிது நாஞ்செய்த பாக்கியமே. - 447
1602 - இல்வாழ்க்கை நன்றென்று பாங்கி செவிலிக்குணர்த்தல்.
மன்பா லடிசில் வறையல் கருனைகுய் வாய்பளிம்பா
கன்பானம் மான்கை துழந்தட்ட தேயிறை யார்தலினென்
றன்பா லருள்வைத்த கோன்காழி வாழ்பலர் தாநுகரு
மின்பாலன் னாய்மிக வும்பொலி யாநின்ற தில்லறமே. - 448
1603 - மணமனைச் சென்றுவந்தசெவிலி பொற்றோடிகற்பியல் நற்றாய்க்குணர்த்தல்.
விழியென்று தீநுதல் வைத்தோன் கழுமல வேதியர்த
முழியென்று பெய்யு மழையென்று கேட்ட லுலகமிகை
பழியென்று மோவுமன் னாயின்றுன் செல்வி பயோதரமே
பொழியென்று கூறினப் போதே பொழியுஞ்செம் பொன்னையுமே. - 449
1604 - செவிலி நன்மனைவாழ்க்கைத் தன்மையுரைத்தல்.
கொந்தார் குழலொரு பாலா ரமர்வெங் குருநகர்வாய்ச்
சந்தார் வனமுலைத் தாழ்குழ னின்மக டன்மனைவாய்
வந்தார் பசித்தறி யாரென்றும் பொங்கி வழிதரும்பா
வந்தா ரணிப்பொரு ளெல்லா மறையொன் றகங்கொண்டதே. - 450
1605 - செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தல்.
காரிற் பொலிதண் பொழிற்பூந் தராய்ச்சங் கரனுமைபோ
லேரிற் பொலியுடம் பொன்றாக் குறையொன்றுண் டில்லிடத்தே
வாரிற் பொலிமுலை வைகுத லாலண்ணன் மாற்றலர்வெம்
போரிற் பொலியவு மூர்மாவின் முன்னுறும் போதறினே. - 451
1606 - பரத்தையிற்பிரிவு
காதலன்பிரிவுழிக் கண்டோர்புலவிக்கு ஏதுலிதாமல் விறைவிக்கென்றல்.
ஒண்மலர் தோறு நறவுண்டு வண்டுழ லூரனின்று
தண்மலர் வீதிவந் தான்முன்பு போந்துகை தாங்குவித்துக்
கண்மலர் நோக்கஞ்செய் தார்பரன் காழிக்கண் ணாரிவனு
மெண்மலர் நோக்கஞ்செய் தான்மனை யூடுதற் கேதுவிதே. - 452
1607 - தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கல்.
நலத்தே வசிக்குங் குலமாதி னீத்து நவில்பதியில்
குலத்தே வசிக்கு மடவாரில் லேகுடி கொள்ளுதன்மும்
மலத்தே வசிக்கு மெமையடுத் தாளும் வரதர்சண்பைத்
தலத்தே வசிக்கு மதுபோலு மானந் தலைவருக்கே. - 453
1608 - தலைவனைத் தலைவி கனவிற்கண்டிரங்கல்.
காணித் திலநகை யாயென வூரர் கனவில்வந்தார்
நாணித் தழுவ விழித்தேன் மறைந்தனர் நாடுறுங்காற்
பாணித்த தென்னென் றரன்காழி வாழும் பரத்தையருட்
கோணித் தமைமுனி வாரென்று போலுமுட் கொண்டதுவே. - 454
1609 - செஞ்சுடர்க்குரைத்தல்.
முந்தாநம் மூரன் முகநோக்கி வாக்குநெய் முற்றுமுண்டு
நந்தா தெழுசுட ரேயெனைப் போனிற்ற னன்மையென்றென்
சிந்தா குலமுரை யாய்பரன் காழிப்பல் செல்வர்நல்கு
மந்தார் புனையு மடவார்க்கு நீயுமுள் ளஞ்சினையே. - 455
1610 - வாரம்பகர்தல்.
காருந் தழுவப் பிறையுந் தழுவக் கழிதலையு
நீருந் தழுவப் படுசடை யார்சண்பை நீணகர்வாய்ப்
பாருந் தழுவப் பலருந் தழுவப் படுமடவார்
யாருந் தழுவக் கொடுத்தன னாலென் னிறைவனையே. - 456
1611 - அடிசிலமைத்தமடவாலிரங்கல்.
ஆளும் பரமர்தென் காழியின் வாயிசை யாருணவு
வாளும் பணிகணல் லார்செவிக் கூட்டலின் மன்னுபுகழ்
நீளுந் திருவள் ளுவர்சொற்ற வாறு நிலவகட்டுண்
மூளும் பசியிலை யாயிற்றம் மாநம் முதல்வருக்கே. - 457
1612 - தலைவன்பிரிந்தமைக்கு இரங்கல்.
மாவுங் கரியும் புரியும்பொற் றேருநம் மாளிகைமுன்
மேவும் படியி லரன்காழி யல்குல் விலைமடவார்
பாவுந் தெருவுறு மானல்ல காதன்மை பங்கயமென்
பூவும் புலவுங் கமழ்புன லூரனுட் புக்கதுவே. - 458
1613 - ஈங்கிதுவென்னெனப் பாங்கி வினாவுதல்.
பொன்னேயென் னுள்ளப் புனலோடிப் பாயும் புணரியெனுந்
தன்னே ரிலாவடி யோன்சண்பை வாய்மணந் தான்முடித்து
நன்னேய மிக்கன்பர் நல்கவு நீமுன்னை நாளிலின்னுங்
கொன்னே வருந்துவ தென்னே யெனக்குண்மை கூறுகவே. - 459
1614 - பரத்தையிற்பிரிவு.
இறைமகன் புறத்தொழுக்கு இறைமகளுணர்த்தல்.
நேருங் கரும்பு பொழிசாறு நீத்து நெடும்பகடாங்
கூறுங் கலங்கற் புனல்கொளு மூர ருபேந்திரன்முன்
யாருந் தொழும்பெரு மான்சண்பை வாய்ப்பொன் னெழின்மடவார்ச்
சாருந் தகைய ரெனைநீத் தனரின்று தாழ்குழலே. - 460
1615 - தலைவியைப் பாங்கி கழறல்.
ஆனுண்ட கேதனத் தார்காழி வாயிர வாம்பன்மலர்த்
தேனுண்ட வண்டு சிறுகாலை யிற்கஞ்சத் தேனுமுண்ணும்
வானுண்ட கீர்த்தி மகிழ்நர்பொல் லாங்கு மறந்துஞ்சொலல்
கூனுண்ட வாணுத லாய்குல மாதர்தங் கோளலவே. - 461
1616 - செவ்வணியணிந்து சேடியை விடுக்கவென்றல்.
பவளம் புனைந்துசெம் பூமாலை சூட்டிச்செம் பட்டுடுத்தி
நவளம் படுகுங் குமம்பூசிப் பாகிலை நல்கிநனி
துவளங் கொடியிடை யாய்விடு சேடியைத் தோன்றறன்பாற்
கவளங் கொளுங்களிற் றீருரி யார்மகிழ் காழிக்கின்றே. - 462
1617 - செவ்வணியணிந்து சேடியைவிடுத்தல்.
பாடியை யிந்திர கோபஞ் செறிந்த பசுங்கொடியு
மேடியை வண்கவிர் பூத்தபொற் கொம்பு மிணையவொரு
சேடியை விட்டனள் செங்கோலஞ் செய்து திருந்திழைவிண்
மாடியை மாடப் புகலிப் பிரானன்பர் மாடுறவே. - 463
1618 - அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக்கூறல்
தோளா மணிதிருத் தோணி புரேசன் றுணைமலர்த்தாட்
காளா னவரை யடையா துழலு மறிவிலரிற்
கோளா டரவக லல்குலிம் மாதுசெங் கோலங்கொண்டு
வாளா விகழ்பவர் வீதியிற் போகுமிம் மாண்புநன்றே. - 464
1619 - பரத்தையர் கண்டு பழித்தல்.
தவந்தாள் பணித லெனக்கரு தேனுக்குந் தன்னருடந்
துவந்தாள் பரம னிகரில் புகலி யுரிமையுற்று
நிவந்தாள் சிறிது சிவந்தா ளதுநிகழ்த் தப்பெரிது
சிவந்தாடன் னாணம் விளர்த்ததெண் ணாளித் தெருவகத்தே. - 465
1620 - பரத்தையர் உலகியனோக்கி விடுத்தல்.
கல்லுக வீங்கு புயத்தாய் பரம்பரன் காழியினீர்
செல்லுக வாய்மலர் கின்றவ ணாளுந் திருந்தறமே
வெல்லுக வென்பவள் பூத்தன ளாம்விடை கொள்கசெல்க
புல்லுக பன்னிரு நாளுமப் பாலிங்குப் போதுகவே. - 466
1621 - வரவுகண்டுவந்து வாயில்கள் மொழிதல்.
இமைய மடந்தை புணர்ந்தும் விகார மிலாமுதல்வ
னமையமை தங்கு கயிலைப் பிரான்சண்பை நங்கையர்பச்
சமையமை தோடழு விக்கிடந் தாலுநம் மாயிழையார்
சமைய மறிந்துத வுந்தகை யாலிவர் சான்றவரே. - 467
1622 - தலைமகன்வரவு பாங்கி தலைவிக்குணர்த்தல்.
முன்மா றொழுகினர் பின்னடைந் தாலின்ப முத்திதரு
மன்மா தவர்பெரு மான்காழி வாழி மடமயிலே
பொன்மாலை மார்பர் புறத்தா றொழுகினும் பொற்பவந்தின்
றுன்மா ளிகைமுனின் றாரெதிர் கோட லுயர்வுறுமே. - 468
1623 - தலைவனைத் தலைவி எதிர்கொண்டுபணிதல்.
ஊடா துவத்தலி னுண்டாகு மின்பமுள் ளூடல்கொளில்
வாடா வவர்க்குக் குறையுள தோசண்பை வாழ்பரமர்
கூடா ரரணந் தழல்விளை யாடக் குறுநகைகொ
ளேடா ரிதழித் தொடையா ரருளென் றெதிர்கொள்வனே. - 469
1624 - புணர்ச்சியின்மகிழ்தல்.
காரார் குழலியு நாமும் புணரின்பங் காப்புகலி
யூரார் முதலு முயிரும் புணரின்ப மொக்குமெனி
லேரா ரொருதலை யின்பே யதுமற் றிருதலையுஞ்
சேரா மருவின்ப மீதெனில் யாதிணை செப்புவதே. - 470
1625 - வெள்ளணியணிந்துவிடுத்தல்.
இருளுத யஞ்செய் மிடற்றார் கழுமல மெய்தலர்சேர்
மருளுத யஞ்செய் மனத்தார் முலைவளர் மன்னவற்குத்
தெருளுத யஞ்செய்வெண் பூமணி தூசு செறித்தடைந்தாள்
பொருளுத யஞ்செய் ததுபுகல் வானொரு பூங்கொடியே. - 471
1626 - வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில்வேண்டல்.
யான்செய் பிழையை நினைந்து மறாமலின் றேன்செய்மொழி
மான்செய் விழிமயிற் கோதுக தீதுக வல்லரக்கன்
றான்செய் பிழைமறந் தொள்வாளு நாளுமுன் றந்தபிரான்
கூன்செய் பிறைமுடி யோன்காழி வாழி கொடியிடையே. - 472
1627 - தலைவி நெய்யாடியது இகுளைசாற்றல்.
கையா டியமழு வோன்காழி நாதன் கருணையினான்
மையா டியகண் மயின்மணி போல மகவுயிர்த்து
நெய்யா டியமெய் யினள்கா ணறிவ ணெடுந்தகைநீ
பொய்யா டியமட வார்ப்புல்லு நீத்திங்குப் போந்ததுவே. - 473
1628 - தலைவன் தன்மனத்து உவகைகூர்தல்.
நாம்பா லுணுமழ வாகா தருள்புரி நம்பர்தமைப்
பாம்பா லலங்கரிப் பார்காழி வாயென்று பார்ப்பதுபோ
யாம்பா லடுநெய் யவிர்மெய்ப் பசப்பு மலர்முகமுந்
தீம்பால் பொழிகொங்கை யும்மக வேந்திய செங்கையுமே. - 474
1629 - தலைவிக்கு அவன்வரல் பாங்கியுணர்த்தல்.
ஒளிர்பரை பானள் ளொருசே யுளார்சண்பை யூரரின்று
தளிர்புரை மெல்லடி யாய்பச் சுடம்புந் தவாமகவுங்
குளிர்தரு பால்பொழி கொங்கையுங் காணக் குறுகுபுநின்
மிளிர்திரு மாளிகை வாயினின் றாரிதென் விண்ணப்பமே. - 475
1630 - தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல்.
மட்டார் கடுக்கை மலர்மாலை யார்சண்பை வாழுநல்லார்
விட்டார்கொ னம்மைப் புரப்பாரெவ் வாறிங்கு மேவவுடன்
பட்டா ரவர்க்கிம் மனைவாயென் னுண்டு பழந்தொடர்பு
கட்டார் மகவுண்டு நானுண்டு காலங் கழிப்பனன்றே. - 476
1631 - தலைவி பாணனைமறுத்தல்.
தோயு மகிழ்நர்மிக் கன்பினர் நீயென்னை சொல்லன்முல்லை
வீயு மருவும் பொலிதேத் தெருக்கலர் விற்கவந்தா
யேயும் பரமர்தென் காழியில் வீணை யிசைக்குங்கைபோல்
வாயுங் கொளும்புலைப் பாண்மக சேறியென் வாய்தல்விட்டே. - 477
1632 - வாயில்மறுக்கப்பட்ட பாணன்கூறல்.
தாயே தலைவற் புகழ்ந்தே னதற்கென் றலைதகர
நீயே கருங்கலை வீசினை வாருஞ்செந் நீர்முழுகி
யாயேகர் காழி யதுசெங்க லாயிற் றமையுமிதே
போயே விடுவல் விடாதோங் குகநின் புலவியதே. - 478
1633 - விறலி வாயின்மறுத்தல்.
சேவுந் திருமறை மாவுஞ் செலுத்துந் திறத்தர்வளம்
பரவும் புகலி யடையாரி லொத்ததிப் பாவியில்ல
மாவுந் துணர்ப்பொலங் காவுமொப் பாங்கொடை யாளரென்று
மேவும் பரத்தையர் சேரியிற் பாடு விறலிசென்றே. - 479
1634 - கூத்தன் வாயின்மறுத்தல்.
முடித்திடு வேணிப் பிறையான் புகலி முதல்வன்மன்று
ணடித்திடுங் கூத்தன்றி நோக்கேனின் கூத்து நடிப்பதற்குத்
துடித்திடு கூத்தன் மகனே யகறிநந் தோன்றலுக்குத்
தடித்திடு மின்பந் தருமாதர் நோக்குவர் தாழ்வின்றியே. - 480
1635 - பாங்கி வாயின்மறுத்தல்.
அளி்யுற்ற காழிப் பிரான்றா யுருக்கொண் டடைந்துமிடைந்
தொளியுற்ற தெய்வச் சிராமலை மேவுத லோர்ந்தவரிவ்
வெளியுற்ற சேய்வயிற் றுள்ளுற்ற போதிங் கிருந்துசென்று
வெளியுற்ற போதுவந் தார்நல்ல ரேயவர் மெல்லியலே. - 481
1636 - விருந்துடன்வந்துழிப் பொறுத்தல்.
உன்னுமுன் னுள்ளத் துறைவார் புகலிநல் லூரர்வந்தா
ரென்னுமுன் செங்கு வளையியல் பட்ட விருகண்களு
மின்னுமுன் றாழ்நுண் மருங்குனல் லாட்கு விருந்தொடென்று
பன்னுமுன் னம்ம கருங்கு வளையியல் பட்டனவே. - 482
1637 - விருந்தொடுவந்துழிப் பொறுத்தல்கண்டு தலைமகன்மகிழ்தல்.
முருந்தென்று பேசு நகைபாகர் சண்பையின் முற்றியது
வருந்தென் றெனைவைத்த தீவினை நல்வினை வந்ததன்றோ
விருந்தென்று கொண்டிலம் வீயாப் புலவியை வீப்பதற்கோர்
மருந்தென்று கொண்டனங் காண்போநம் மாதை மகவொடுமே. - 483
1638 - விருந்துகண்டொளித்தவூடல் பள்ளியிடத்து வெளிப்படல்.
அல்லார் களத்த னழலார் குளத்த னருட்புகலிப்
பல்லார் புகழப் படுவோயிப் பள்ளி பலர்தழுவு
மெல்லா ரொடுமென்னை யுஞ்சும வாதென் றிழிந்துநின்றாள்
கல்லார வோதி கருத்தென் விளைந்த கலாமென்னையே. - 484
1639 - தலைமகன் சீறேலென்று அவன் சீறடிதொழுதல்.
உணங்கா விளம்பொழிற் கூடற் பிரானுமை யூடற்கன்றி
வணங்கா முடித்தம் பிரான்காழி யூரன் மலரடிவீழ்ந்
தணங்கா வருத்தலென் வாய்முத்த நல்கி யருளுமெனக்
குணங்கா முறுமயில் கண்முத்த நல்கிக் கொதித்தனளே. - 485
1640 - இஃது எங்கையர்காணின் நன்றன்றென்றல்.
அண்மையின் மேவலென் பொற்றானை பற்ற லடிபிடியல்
வண்மையி நீமகி ழப்பலர் பாற்கற்று வந்திலன்யான்
றிண்மைகொ டேவர் புகலியி னீயின்று செய்வதெல்லா
முண்மையென் றோர்ந்தெங்கை மார்வெகு ளாநிற்ப ருத்தமனே. - 486
1641 - நின்னலது அங்கவர்யாரையும் அறியேனென்றல்.
புல்லாது காலில் விழவுமெண் ணாது புழுங்கியெனைக்
கொல்லாது கொல்லுதல் குற்றமன் றோவெங் குருப்பரனைக்
கல்லாது வாடுநர் போனினைத் தாயென்னைக் காதனின்னை
யல்லா தொருவரை யும்மறி யேனுண்மை யாரணங்கே. - 487
1642 - பரத்தையிற்பிரிவு.
காமக்கிழத்தியைக் கண்டமைபகர்தல்.
திருவன் புகலிப் பெருவீதி யிற்சிறு தேருருட்டு
மருவன் புறுநம் மகவைக்கண் டாள்கட்டி மார்பணைத்தா
ளொருவன் புடனது நோக்கிநின் றாயிவ ளோரினிவள்
பொருவன் பினர்பல ரென்றா ளயலொரு பூங்கொடியே. - 488
1643 - தலைமகளைப் பாங்கி புலவிதணித்தல்.
உழைபொறுக் குங்க ணொருபா லுறவு மொளிர்முடியோர்
மழைபொறுக் குங்குழல் வைத்தார் புகலிநம் மன்னரின்றுன்
னிழைபொறுக் கும்முலை சேர்வான் வருந்துத லெண்ணிலைமுப்
பிழைபொறுக் கும்புன லென்பது மோர்ந்திலை பெண்ணணங்கே. - 489
1644 - தலைவி புலவிதணியாளாதல்.
மானாறு பாகத்தர் காழிநல் லார்கள்செவ் வாயினிய
தேனாறு நிம்பநெய் நாறுமென் வாயவர் செம்பொன்முலை
மேனாறு நல்விரைப் பான்மக வுண்டு மிழத்திரிந்த
பானாறு மென்முலை யென்னிலொவ் வாதுன் பகட்டினுக்கே. - 490
1645 - தலைமகள் தணியாளாகத் தலைமகனூடல்.
மான்மே லெழுநஞ் சமுதா யதுசண்பை வள்ளலுக்குத்
தான்மேல் விழுந்து தழீஇநமக் கின்பந் தருமமுதங்
கான்மேல் விழுந்து கரைந்திரந் தாலுங் கனிதலின்றி
மேன்மெல் வருத்தும் விடமாயிற் றானம் விதிவசமே. - 491
1646 - பாங்கி தலைவனை அன்பிலைகொடியையென்றல்.
பைதொட்ட நாகப் பணியார் புகலிப் பதியனையாள்
கைதொட்ட வேம்புங் கரும்பேயென் றீர்கட் கடைக்குறிப்பால்
வைதொட்ட வெங்கழு வாயேறி வைகவும் வல்லனென்றீர்
நைதொட்ட வன்ன டனியாகக் கண்டு நகைப்பிரின்றே. - 492
1647 - பாங்கி அன்பிலைகொடியையென்று தலைவனையிகழ்தல்.
ஆரோடு சொற்று மிளங்கன்றை நாடி யணைபசுப்போல்
வாரோடு விம்மு முலைபா லடிக்கடி வந்தருள்வீர்
நீரோடு கண்ணிமெய்ப் பீரோடு வாட நிமலர்சண்பைத்
தேரோடு வீதியு ணாரோடு மாதரிற் செல்லுவிரே. - 493
1648 - பள்ளியிடத்துத் தலைவி புறங்காட்டக்கண்டு தலைமகன்கூறல்.
அறங்காட்டி யென்னைப் புரப்பான் புகலி யனையவரே
நிறங்காட்டி யுங்கண் மதவேள் சினந்து நெடுஞ்சிலையின்
மறங்காட்டி நின்று சமராடு கால மதித்தெனக்குப்
புறங்காட்டி மெல்லிய லாரெனும் பேரைப் புதுக்கினிரே. - 494
1649 - காமக்கிழத்தி வாயில்வேண்டல்.
பிழையே செயினு நினைக்கே பொறுத்தல் பெருங்கடன்வா
வுழையே யனையகண் ணாயெனைப் போலலை யூடனிறத்
திழையே புனையு மகவீன்றுங் கோட லியல்புகொலுட்
டழையேத நீத்துத் தழுவரன் காழித் தலைவனையே. - 495
1650 - தலைவி காமக்கிழத்தியோடு பகர்தல்.
தண்ணார் புகலிப் பெருமானு மாயனுஞ் சம்புபல
கண்ணார் கருன்புங் கடுமூங்கி லுங்கழை காமரமென்
பண்ணார் மொழிமயி லேயானு மேய பரத்தையரு
மெண்ணார் பணியுநம் மூரற்கு மாத ரிதுமெய்ம்மையே. - 496
1651 - பாங்கி வாயினேர்வித்தல்
நீலம் பொலியும் விழியாய் புலவியை நீளவிட்டுத்
தாலம் பொலியுந் தலைவரை வாட்டுத றக்கதன்றா
லாலம் பொலியு மிடற்றார்தென் காழிநல் லாடவருட்
சாலம் பொலியும் பொதுமாதர் தோடழு வாரெவரே. - 497
1652 - தலைவி மகவொடுபுலத்தல்.
உள்ளாய் பவருக் கொளியா யமரிறை யொண்புகலிக்
கள்ளாய் குழற்பொது மாதர்தம் பார்செல்லுங் காதலரைத்
தள்ளாய் யழுதழைத் தொண்மார்பிற் சாந்தந் தழீஇயழித்துப்
பிள்ளாய் பிழைசெய்துள் ளாய்வந்த தாலொர் பெரும்பழியே. - 498
1653 - மகற்கறிவுறுத்தல்.
எழுந்தே பணைத்த முலையார் பொதுநல மெய்துபுதி
கழுந்தே சுடைத்திருத் தந்தையைச் சார்ந்துமுக் கட்பெருமான்
செழுந்தே மலர்ப்பொழிற் சீகாழி யிற்சிறு தேருருட்டுங்
கொழுந்தே யிதுபிது ராசார மென்றுபொய் கொள்ளற்கவே. - 499
1654 - மகற்பழித்தல்.
அம்பல வாணர் புகலிநல் லார்மென் றமைத்தபொதுத்
தம்பல மேவிற்றுன் வாயினுந் தந்தைமுத் தங்கொளலால்
வம்பல வாலென்றன் வாயினும் பூசவந் தாயுனைநல்
கும்பல மோமக னேயிது தானின் குலத்தியல்பே. - 500
1655 - ஆயிழைமைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவெதிர்கோடல்.
போதுசெய் கூந்தற் புணர்முலை பாகர்தென் பூம்புகலிச்
சூதுசெய் கொங்கைப் பொதுமட வாரிற் றுறந்தின்றுசெந்
தாதுசெய் பூணிளஞ் சேயையுந் தோளிற் றழுவிவந்தீ
ரேதுசெய் தாலு மியம்புந ராரெம் மிறையவரே. - 501
1656 - கல்வியிற்பிரிவு.
மணந்தவன் போய்பின்வந்தபாங்கியொடு இணங்கிய
மைந்தனை இனிதிற்புகழ்தல்.
களிமிகு மாமயிற் சாயனல் லாய்கடை யேனிதயத்
தளிமிகு வாழ்வுடை யோன்சண்பை யூரிற்றன் றந்தைதனை
யளிமிகு மாறு பொருமிப் பொருமி யழுதழைத்தா
னொளிமிகு ஞானசம் பந்தன்கொ லோவென் னொருமகனே. - 502
1657 - தலைவி தலைவனைப் புகழ்தல்.
பெரியோர் பவஞ்சங் கலந்தமர்ந் தாலும் பெரும்புகலி
யரியோர் விடைய ரலர்தாட் கலப்படைந் தேயமர்வர்
கரியோர் தடங்கட் பொதுமாதர் கொங்கைக் கலப்புறினு
முரியோர்நங் கொங்கைக் கலப்பின்று தாறு மொழிந்திலரே. - 503
1658 - பாங்கி தலைவியைப் புகழ்தல்.
மாலே யனையநங் காவலர் மேவலர் வாழ்புரந்தீ
யாலே யழிய நகைத்தார்தென் காழி யமருநல்லார்
பாலே பயின்று வரக்கண்டு மேற்றருள் பண்பினிவள்
போலே பெருங்கற் புடையாரு முண்டுகொல் பூதலத்தே. - 504
1659 - கல்வியிற்பிரிவு.
கல்வியிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
வேய்பவ ரேபுரை தோளிடை யாய்வெவ் வினைமுழுதுங்
காய்பவ ரேசொல் கழுமல வாணர் கலைமடந்தை
யேய்பவ ரேயென் பவருட னாய்ந்த வினியகல்வி
யாய்பவ ரேயற மாதியொர் நான்கு மடைபவரே. - 505
1660 - பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
ஓங்கற்ற வாவில் லுடையார் புகலி யுறுநர்முன்போய்த்
தாங்கற்ற யாவுந் தகவுரைத் தேயவர் தாமுணர்ந்த
தீங்கற்ற யாவுந் தெரிந்துகொள் வான்சென்று ளார்பணியக்
கோங்கற்ற மோருங் குவிமுலை யாய்நின் கொழுநரின்றே. - 506
1661 - கார்ப்பருவங்கண்டு தலைவிவருந்தல்.
வெறுத்துப் புரம்பொடித் தார்காழி யூரில் வெளியெழுந்து
கறுத்துச் சிலையும் வளைத்தம்பு தூற்றுங் கனமுளெழுந்
தொறுத்துப் படர்செயு மவ்வா றொருவ னொருத்தியெங்ஙன்
பொறுத்துத் தனியிருப் பேன்வந்தி லார்கற்கப் போனவரே. - 507
1662 - தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்.
சந்தார் தடம்புயத் தார்தடங் காழித் தனிமுதல்வர்
முந்தா ரருளின்முக் குற்றமு நீங்க முழுதுணர்ந்து
பந்தார் வனமுலை யாய்திரு ஞானசம் பந்தரொத்து
வந்தா ரெனச்சொல் வந்தது காணிம் மழைமுகிலே. - 508
1663 - காவற்பிரிவு.
காவற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
தண்மலர் கோதை யொருபாகன் காழித் தனிமுதல்வன்
கண்மலர் நெற்றிப் பிரானரு ளானிலங் காவல்செய்வோ
ருண்மல ரச்சமைந் தாங்காங்குற் றாருயிர்க் கோட்டிலரேற்
பண்மலர் சொல்லினல் லாயுறு லாயுறு வார்பெரும் பாதகமே. - 509
1664 - பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
அடிமலர் மீதுதன் கண்மலர் சாத்து மரிக்குநெடுங்
கடிமல ராழிதந் தார்காழி நாதர் கருணையினான்
முடிமலர் மாலைநம் மன்னவர் நீதி முறைப்படியே
படிமலர் காவல்செய் வான்சென்று ளாரின்று பைந்தொடியே. - 510
1665 - தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல்.
மண்காவல் கொண்டவர் பெண்காவ நீத்தனர் வாடிவந்தென்
கண்காவல் கொண்ட திதற்கஞ்சி யேதிருக் காழிப்பிரான்
புண்காவல் கொண்ட மருப்புப் பொருப்புரி போர்த்துபுமெய்
யொண்காவல் கொண்ட தழனின்று மாட்ட மொழிந்திலனே. - 511
1666 - தலைமகளைப் பாங்கியாற்றுவித்தல்.
மூவலை யாறு திருப்புக லூர்குட மூக்குநணா
மேவலை யாதரிப் பார்காழி சூழ்பொழின் மென்பெடைகள்
சேவலை யாதரிக் குந்திற னோக்கித் திரும்பினர்மண்
காவலை யாதரித் தார்வாடை தீர்ந்தது கார்மயிலே. - 512
1667 - தூதிற்பிரிவு.
தூதிற்பிரிவு தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
கடல்சூழ் புவியி னிருபெரு வேந்தர் கலமொழித்த
லடல்சூ ழரசர் குலத்துதித் தாருக் கறநெறிகை
விடல்சூழ் தராதெனை யாள்சண்பை நாதர் விரும்பருளான்
மடல்சூழ் துழாய்க்கண்ண னுந்தூது சென்றனன் மாமயிலே. - 513
1668 - துணைவயிற்பிரிவு.
பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
கலிக்காம ருக்கும்வன் றொண்டர்க்கும் வந்த கலாமறவார்
கலிக்காழி நாத ரிடைநின்ற தேய்ப்பக் கறுத்துளத்தி
கலிக்கா சினியிற் பொருமிரு வேந்தர் கலப்புறுத்தக்
கலிக்கா மருகழன் மன்னர்சென் றாரின்று காரிகையே. - 514
1669 - தலைமகள் முன்பனிப்பருவங்கண்டுவருந்தல்.
இருகா வலர்வெம் பகைதணிப் பான்றுணிந் தெய்தியநம்
மொருகா வலர்வந் திலர்வந் ததுமுன் னுறுபனியே
யருகா வலர்செறி யும்பொழிற் காழி யரனருள்பால்
பருகா வலர்திரு நீலகண் டத்தமிழ் பாடுவமே. - 515
1670 - தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்.
நீங்கா விருவர் பகைதணித் தேநெடுந் தேர்கடவி
நாங்கா முறுமன்னர் செங்கதிர் போல நணுகினர்பார்
வாங்கா வருள்கடை யேன்பாலும் வைத்தவம் மான்சண்பைவா
யேங்கா மெலியற்க முன்பனி செய்வதெ னேந்திழையே. - 516
1671 - துணைவயிற்பிரிவு.
தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
கூற்றா ருயிர்முன் குடித்தபொற் பாதன் குளிர்புகலி
யேற்றார் கொடியுடை யான்கயி லாயத் திளமயிலே
மாற்றா ரமருண் மெலியொரு வேந்தற்கு வான்றுணையாய்ப்
போற்றா ரிருந்து மிறந்தவ ரேயிப் புவியிடத்தே. - 517
1672 - பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
குன்றார் வனமுலைக் கோமள மெநின் கொழுநர்நண்பு
பொன்றார் துணையெனப் போயின ராலிப் பொழுதிகலி
நின்றா ருறையும் புரமொரு மூவர் நிறைந்தபுர
மன்றார் முடிச்சண்பை யார்நகை நேருற்ற தையுறுமே. - 518
1673 - தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல்.
கட்டார் புனையுங் கருங்குழ லாய்நங் கணவர்தமை
நட்டார் துயரந் தணிக்கச்சென் றாரின்று நாமவர்க்கு
விட்டார்கொ னந்துயர் தீர்ப்பவர் யார்சடை மேன்மதியம்
பெட்டார் புகலிப் பொழில்சூழ் வளைந்தது பின்பனியே. - 519
1674 - தலைவி பாணனைப் பாசறைவிடுத்தல்.
கண்புடை யார்தரு நீரோடு பீருங் கலந்தொருயான்
பெண்புடை யார்சண்பை யுன்னாரில் வாடுதல் பேசிடுக
நண்புடை யார்தமைக் காப்பான் றுணிந்து நமைக்கைவிட்ட
பண்புடை யார்தங்கு பாசறை வாய்ச்சென்று பாணவின்றே. - 520
1675 - தலைவன் பாணனை வினாதல்.
தீராத காத லுடைப்பாண ரேநெடுஞ் சேரியொரீஇ
வாராத நீரெங்கு வந்தீர் மதிக்கும்வல் லாரறிவிற்
காராத வின்னமு தன்னார்மின் னார்மெய் யமலர்சண்பை
யோரா தவரினென் சொன்னாள்பொன் னாணெழி லோரணங்கே. - 521
1676 - தலைவனுக்குப் பாணன் கூறல்.
வரும்போது தண்டனிட் டேன்விடை தாபெரு மாட்டியென்றே
னரும்போது கொங்கை யமர்பாகன் காழியன் னார்புகன்றார்
சுரும்போது பண்பொலி சோலைநல் லூரர் துணையிற்சென்று
பெரும்போது நீட்டித்த லாலுயிர் நீட்டிக்கும் பேறின்றென்றே. - 522
1677 - தலைவன் பாசறைப் புலம்பல்.
தனிவந்து கூடு மவர்க்கொளி யாம்பரன் சண்பையிற்பின்
பனிவந்து கூடும் பொழுதுணர்ந் தேங்கிப் பதைபதைத்திங்
கினிவந்து கூடுங்கொ லென்றழு மேயெழு மேவிழுமே
நனிவந்து கூடு மெழிற்கொம்பு போன்ற நறுநுதலே. - 523
1678 - பின்பனிப் பருவங் கண்டு வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.
தன்பனி மாமலர்த் தாட்டா மரையென் றலைக்கணிவோன்
நன்பனி மால்வரை நங்கைபங் காள னகுபுகலி
யன்பனி மாசலம் போன்மணித் தேரி னடைந்தனனிப்
பின்பனி மாதரை சூழ்ந்தினி யாவதென் பெண்ணரசே. - 524
1679 - பொருள்வயிற் பிரிவு.
தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
அல்லற வாள்விட் டவிர்மணி மாட மளாம்புகலி
நல்லற வாணர் பிரமலிங் கேசர் நகுமருள்சால்
சொல்லற வேதிய ராதியர்ச் சூழ்தரு சோர்வொழிப்ப
தில்லற மாமது பொன்னையல் லாதிய லாதணங்கே. - 525
1680 - பொருள்வயிற் பிரிவு.
பாங்கி தலைவிக்கு அறிவுறுத்தல்.
கல்லாரை யுட்குறி யார்முறி யார்பொழிற் கச்சியுள்ளார்
வல்லாரை மேன்மஞ்சு துஞ்சுதென் காழி மடமயிலே
புல்லாரை வாட்டுநங் காவலர் யாவரும் போற்றலின்றி
யில்லாரை யெள்ளுவ ரென்றார் பொருள்குறித் தேகினரே. - 526
1681 - தலைவி இளவேனிற் பருவங்கண்டு வருந்தல்.
மனவாசை நாயிற் கடையேற் கொழித்து வழுத்தடியா
ரினவாசை மேவவைத் தோன்காழி சூழ்பொழி லின்றளிர்நந்
தினவாசை போர்த்த திளவேனில் வந்திலர் செல்வரின்னுந்
தனவாசை யுற்றவர்க் கெவ்வாசை யுண்டுகொ றாழ்குழலே. - 527
1682 - தோழிதலைவியை ஆற்றுவித்தல்.
பரவலர் தூய்வழி பாடுசெய் யேற்கும் பதமளிப்பா
ரரவலர் செஞ்சடை யார்காழி நாயக ராரருளா
லிரவல ரேத்த வினவளை யார்ப்ப விருநிதிசால்
புரவலர் வந்தன ராலிள வேனிற் பொலிவுணர்ந்தே. - 528
1683 - தலைவன் தலைமகளது உருவுவெளிப்பாடு கண்டு கூறல்.
பொன்னொன்று மேனியன் சீகாழி நாதன் புரிந்தசடை
முன்னொன்று பாதிப் பிறையு நிறையு முழுமதியும்
கொன்னொன்று மேகமுங் கோபமுஞ் சாபமுங் கொண்டுபொலி
மின்னொன்று பார்க்குந் திசைதொறுந் தோன்றும் வியப்பிதுவே. - 529
1684 - பாசறை முற்றி மீண்டு ஊர்வயின்வந்த தலைவன் பாகற்குரைத்தல்.
ஈறென்ற தாதியொ டில்லான் புகலி யிகல்வலவா
வாறென்ற காலுழு தார்ப்புயத் தாயிவ் வவிர்மணித்தே
ரேறென்ற நீயங் கிருக்குமுன் னேயிங் கிறங்கு கென்றாய்
மாறென்ற தீருநின் கைகாலென் றேயுண் மதித்தனனே. - 530
1685 - தலைமகளோடு கூடியிருந்த தலைவன்
கார்ப்பருவங் கண்டு மகிழ்ந்துரைத்தல்.
அந்தா மரைமுகத் தாயிழை யார்த மலர்முலைக
ணந்தா தரத்தி னகன்மார் பழுந்திட நன்குதழீஇச்
சந்தாபந் தீர்ந்து தழைத்தனம் யாமினிச் சண்பையெங்கள்
சிந்தா மணியருள் போற்பொழி வாழி செழுமுகிலே. - 531
சீகாழிக் கோவை முற்றிற்று.
----------
ஆபத்துக்காத்த வினாயகர் துணை.
குளத்தூர் - ச. வேதனாயகம் பிள்ளையவர்களியற்றிய
சிறப்புக்கவிகள்.
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
1686 - வாதவூ ருதித்தந்நா டிருக்கோவை யுரைத்த
மாணிக்கவாசகரே சிரபுரத்தி லிந்நா,
ளாதவனிற் றோன்றிமீ னாட்சிசுந் தரனென் றரும்பெயர்பூண்
டொருகோவை யறைந்தனர்கா ழிக்கே,
யேதமிறில் லைக்கோவை யாயுவதின் மூத்ததென் னினுங்கற்
பனைநயத்தி லிக்கோவை முன்னாம்,
மூதறிஞர் வைகலும் பாடப்பாட வாக்கின் முதுமைகொள்வா
ரெனவுலக மொழியுமொழி மெய்யே. - 1
1687 - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
திருவமர்கோ வையைமகிழ்ந்து வாதவூ ரரைத்தன்பாற் சேர்த்துக்கொண்ட,
பொருவில்சிதம் பரநாதன் பின்னுமொர்கோ வைக்காசை பூண்டன்னாரை,
மருவுசிர புரத்தீன்று மீனாட்சி சுந்தரப்பேர் வழங்கிக்காழிக்,
கொருகோவை செய்வித்தான் [1] சிதம்பரநாதன்சேயென் றுரைத்தன்மெய்யே.
[1. நூலாசிரியருடைய தந்தையார் பெயர் சிதம்பரம்பிள்ளை யென்பது.] - 2
1688 - பிரமபுரத் தீசர்மேன் மீனாட்சி சுந்தரமால் பெட்பிற்செய்த,
வரமுறுகோ வையைக்கேட்போர் மகிழுவரஞ் சுவன்றமியேன்[2]வள்ளி னிற்கேட்
டரவரசு சிரமசைக்கிற் றரையசையும் வரையசையு மசையு மாழி,
மரமசையு மன்னுயிரெ லாமசைந்து வருந்துமென்றே.
[2. வள் - காது.] - 3
1689 - குற்றமில்சீர் மீனாட்சி சுந்தரவா ரியநின்னாக் கோயின்
மேவ, நற்றவமென் செய்தனணா மகடமிழ்செய் தவமெவனீ நவிலு
மேன்மை, யுற்றதிருக் கோவைபெறப் புகலிசெய்பாக் கியமெவனவ்
வுயர்நூல் கேட்கப், பெற்றவென்போ லியர்புரிந்த மாதவமென் னோ
துறுவாய் பெருமை மிக்கோய். - 4
1690 - வித்தகமார் மீனாட்சி சுந்தரவே ளே[3]யொருநூல்
விளம்புமென்னைப், புத்தமுதார் நின்வாக்காற் றுதித்தனைநீ பாடி
யதிப் பொருணூ லொன்றோ, வெத்தனையோ கோவைகண்மற் றெத
தனையோ புராணமின்னு மெண்ணி னூல்க, ளத்தனையு மித்தனை
யென் றெத்தனைநா விருந்தாலு மறையப்போமோ.
[3. ஒருநூல் - நீதிநூல்.] - 5
1691 - பன்னூலு மாய்ந்தாய்ந்தோர் பயனுறா துளம்வருந்தும்
பாவலீரே, நன்னூலோர் மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்
றான் காழிக், கந்நூலு ளொருபாவி லோரடியி லொருசீரை யாய்வ
ீராயி, னென்னூலுங் கற்றவரா யிகபரமும் பெற்றவரா யிலகுவீரே. - 6
1692 - பரமசுக மறியாதார் சிற்றின்பம் பெரிதென்னும் பான்
மை போல, வுரமுறுமுற் கோவைகளே சிறந்தவென வின்றளவு
முன்னி னோநாந், தரமுறுசீர் மீனாட்சி சுந்தரப்பேர்த் தமிழ்ப்புலமைத்
தலைமை யோன்சொல், பிரமபுரக் கோவையே பரிதியக்கோ வைகளு
டுக்கள் பேசி னெஞ்சே - 7
1693 - எண் சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
தண்டமிழுன் பாலுணர வாசைகூ ரனந்தன் றனமீய
வகையின்றி நின்சேடனாகிக்,
கொண்டனனந் நாமமே யகத்தியன்றான் றன்னைக் கூடாம
லுனைமேவிக் குலாவுதமி ழதனை,
யண்டலரின் முனிந்ததனாற் றமிழ்முனிவ னெனும்பே ரடைந்தனனா
தலினகிலத் தியாவருனை நிகர்வார்,
வண்டமர்தார் மீனாட்சி சுந்தரவே ளேநீ வளப்புறவக்
கோவைசொலின் வியப்பவரா ரையா - 8
1694 - அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
இன்பாவிற் கோவைசொன்ன மீனாட்சி சுந்தரப்பேரிறைவ யானு,
முன்பாவிற் கவிசொல்வே னென்கவிபார்ப் போரிதைமீண் டோரா தான்றோர்,
முன்பாச்சொ னூல்களையே துதிப்பருன்பாவுணர்வோர்கண் முன்னோர் நூலைப்,
பின்பாகச் சொலிவெறுப்பர்நல்லவனீ யோயானோ பேசு வாயே - 9
1695 - விண்ணேறு மாதவனேர் மீனாட்சி சுந்தரவில் வேளேநீசொ,
லெண்ணேறு கோவையினைப் புகழயான் றிறமில்லே னெனினு முன்சேர்,
மண்ணேறும் வானேறு மதியினர்த நாவேறும்வகையா லுன்னைக்,
கண்ணேறு மேவாமற் கறையேறு மென்புகழுங்கைக்கொள் வாயே. - 10
1696 - நலம்விளக்கு மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் சண்பைத்,
தலம்விளக்க வவற்குநாம் புரிகைம்மா றெவனழியாத்தனமே கங்கா,
குலம்விளக்குங் கற்பகமே குருமணியே திருவணியேகுணக்குன் றேயிந்,
நிலம்விளக்குந் தினகரனே யெனவவனை வாழ்த்திடுவாய் நிதமு நெஞ்சே. - 11
1697 - வேறு.
சொல்வள முறுமீ னாட்சி சுந்தரப் புனிதன் சொல்லு
நல்வள முடைய கொச்சை நகர்த்திருக் கோவை யாயிற்
பல்வள முடையே ஞானம் பதிவள முடையே மாலை
வெல்வள முடையே மின்ப மிகுவள முடையே நெஞ்சே. - 12
1698 - வேறு
விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே விண்ணோர் மண்ணோர்,
துதிபொதிபல் பாமலை பெற்றிருப்பீர் மீனாட்சிசுந்த ரப்பேர்,
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொ லிக்காழி வைப்பி னீதி,
யதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமாவறைகு வீரே. - 13
1699 - நம்மாலே பெரியனென்னும் வைணவரே சுரர்க்கமுதநல்கச் சென்று,
நும்மால்வெண் மேனிகரு மேனியா னானரர்தாநுகர வேண்டி,
யெம்மாலா மீனாட்சி சுந்தரவேள் கோவையமு தீந்துசீர்த்தி,
வெம்மாலில் விறலிவற்றால் வெண்மேனி செம்மேனி விரவினானால். - 14
1700 - கானோடு மிளிர்தாரான் மீனாட்சி சுந்தரமால் காழிக்கோவை,
தேனோடு பாலோடு நிகருமவன் பிரதாபஞ் சீர்த்தி யோங்கி,
வானோடு மண்ணோடு மற்றோடும் வகையின்றி வடிவி ரண்டாய்,
மீனோடு வான்றிரியும் பானுமதி யென்றுலகோர் விளம்பு வாரால். - 15
1701 - தண்டமிழ்முந் நீர்பருகி மீனாட்சி சுந்தரப்பேர்த் தருமக் கொண்ட,
றோண்டர்கள்சூழ் சிரபுரத்திற் பொழிகோவை யெனுமமுதத் தூய மாரி,
மண்டலமும் விண்டலமுங் கரைபுரண்டு திரைசுருண்டு வருத னோக்கி,
யண்டர்தொழும் புகலியிறை தோணியுற்றானஃதின்றே லமிழ்ந்து வானே. - 16
1702 - தேவேநேர் மீனாட்சி சுந்தரக்கோ னோருகோவை செப்பிப் பாரிற்,
றாவேயில் புகழ்படைக்கி னமக்கென்ன வவற்குமவன்றமர்க்கும் பாடாம்,
நாவேகா தேமனனே யவன்சீரைச் சொலிக்கேட்டு நனியிங் குன்னி,
யோவேயி லாதருங்கா லங்கழித்தீர் பிறவினை மற் றோன்றி லீரோ. - 17
1703 - அரியவமு தொருங்குகவர்ந் தசுரரைவஞ் சித்தவிண்ணாட் டவரே மேன்மைக்,
குரியவனா மீனாட்சி சுந்தரமால் கோவையமு துவந்தீந் தானுந்,
தரியலர்பெற் றிடினவரை வெல்லரிது விரைவினீர் தாம தைக்கொண்,
டரியயன்சூழ் புகலியிறைக் கர்ப்பணஞ்செய் துண்டுய்மி னாவி தானே. - 18
1704 - நல்லார்க்கு நல்லவனா மீனாட்சி சுந்தரவே ணவின்ற கோவை,
யில்லார்க்கு நிதிதுறவா வில்லார்க்கு விதிபுவிவாழ் வெல்லாநீத்த,
வல்லார்க்குத் திதிஞானங் கல்லார்க்கு மதிவேலை வைய கத்திற்,
பல்லார்க்குக் கதிபுகலிப் பதியார்க்குத் துதியதன்சீர் பகர்வோர் யாரே - 19
1705 - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
தேமாரி பொழிபொதும்பர்த் திருக்காழி யிறைமுன்றிகழாண்டு
சித்தார்த்தி திங்கள்பாத் திரத்திற்,
பூமாரி சுரர்பொழியச்செல்வர்பலர் கூடிப் பொன்மாரி
மிகப்பொழியப் புலவர்குழாந் துதித்துப்,
பாமாரி நனிபொழியப் பல்லியங்கண் முழங்கப் பலம்புரிய
நலம்புரியும் வலம்புரிமண் டபத்துத்,
தூமாரி யெனப்புகலிக் கோவையைமீ னாட்சி சுந்தரப்பேர்
மதிவல்லோ னரங்கேற்றி னானே. - 20
This file was last updated on 6 August 2006.
Please send corrections and comments to the .